Friday, February 25, 2011

நாஞ்சில் நாடன் படைப்புகள் குறித்து...


நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு - அப்படைப்பாளி வீரியத்துடன் இயங்கிய படைப்பு வகைக்கு விருது கொடுப்பது என்பதெல்லாம் எப்பொழுதாவது நடக்கும் அதிசயம்தான்.

பாரதிதாசனுக்கு அவருடைய கவிதைக்கு விருது தராமல் பிசிராந்தையார் என்கிற நாடக நூலுக்குக் கொடுத்தார்கள். கண்ணதாசனுக்கும் - ஏன் வைரமுத்துவுக்கும் கூட, அவருடைய கவிதைக்கு விருது தராமல் உரைநடை எழுத்துக்குக் கொடுத்தார்கள். அத்தகைய அபகீர்த்திக்கெல்லாம் ஆளாகாமல் சிறந்த சிறுகதை எழுத்தாளராகிய நாஞ்சில் நாடன் சிறுகதைக்காகவே அரசாங்க விருதைப் பெற்றிருக்கிறார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிரதானமாக சிறுகதைகளில் இயங்கி வந்தார். நா. பார்த்தசாரதியின் தீபம் இதழ் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய நன்கொடை நம் நாஞ்சில் நாடன். பிறகு நாவல்களின் உலகத்திற்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் புதுப்பெண்கள் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறுகதையாகப் பேசுபவர்கள் போகப்போக பெருங்குரலெடுத்துப் பேசுவதைப் போல - சிறுகதை எழுதி எழுதி எழுத்தின் சைஸ் பெரிசானதாலும் பேனா பேப்பரின் மீது நழுவிச்செல்லும் வேகம் அதிகரித்ததாலும் சிலர் நாவல் எழுத ஆரம்பிப்பார்கள். நாஞ்சில் நாடன் அத்தகைய சொந்த இச்சையால் மொந்தை மொந்தையாக எழுதி நம்மை சிரமப்படுத்தாமல் சிறுகதைக்குரிய பொருள்களை மீறிய அரும்பெரும் வாழ்க்கைச் சித்திரங்களை வரைய வேண்டிய இலக்கியப் பொருள்கள் அவர்முன் நின்றமையால் நாவல் எழுத வந்தவர். நாவல்களில் தம்முடைய வெற்றிக்கொடியை நன்றாக நிலைநாட்டினார். தேசத்தின் பாதைகள் முழுவதும் பயணித்து, சொந்த ஊரின் வேர்ப்பற்றை - பாசத்தைத் துண்டித்தெறிய முடியாமல் வாழ்ந்து வதைபடும் மனித மனத்தை அவருடைய நாவல்களில் துலக்கமாகத் தரிசிக்கலாம்.

பிறகு அவர் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள் நாவல்கள் எழுத எதையாவது கூறத் துடிக்கும் மனம் போதும். ஆனால், கட்டுரைகள் எழுத அந்த எழுத்தார்வம் ஒரு விழுக்காடு கூட உதவாது. கட்டுரை எழுதுவதற்கு மூளை முழுக்க அறிவுத் தகவலகளும் பகுத்துக் கூறும் பாங்கும் பொங்கி நிறைந்திருக்க வேண்டும். ஒரு நாளின் பேருந்துப் பயணத்தைச் சிறுகதையாக எழுதிவிடலாம். நம் வாழ்க்கை முழுக்க நாம் பேருந்துகளில் பயணம் செய்த அனுபவங்களைத் திரட்டி நாவலாக எழுதிவிடலாம். ஆனால், கட்டுரை எழுதுவதற்கு பேருந்துப் பயணமும் ஜன்னலோரக் காட்சிகளும் போதாதவை. அந்தப் பேருந்து எவ்வாறு கட்டி அமைக்கப்பெற்றிருக்கிறது, அது இயங்குவதற்கான பொறியியல் இயக்கவியல் நுட்பங்கள் என்னென்ன என்கிற விரிவான அறிவும் கட்டுரை எழுதுவதற்கு வேண்டும். அதனால்தான், தேர்ந்த கதாசிரியர்கள் பலர் வெற்றிகரமான கட்டுரைக்காரரர்களாக இல்லை. நாஞ்சில் நாடன் இதில் தனித்த விதிவிலக்கானார்.

எங்களைப்போன்ற பலர் கவிதைகள் மட்டுமே எழுதிவந்தோம். நாங்கள் சிறுகதை நாவல்கள் எழுதுவதில்லை. முதல் காரணம் லேபர் காஸ்ட் எங்களுக்குக் கட்டுபடியாகாது. கவிதை எழுதுவதற்கு பேனாவையும் பேப்பரையும் கையில் வைத்துக்கொண்டு வடகிழக்கு மூலையைப் பார்த்துக்கொண்டு யோசித்தபடி போஸ் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் போதும், அவ்வப்போது ஒரே ஒரு வார்த்தை தோன்றும் அல்லது ஒரே ஒரு வரி தோன்றும், அதை அப்படியே தாளில் குறித்துக்கொண்டு மீண்டும் வடகிழக்கைப் பார்க்க ஆரம்பிக்கலாம். ஆனால், கதைகள் எழுதுவதற்கு யோசிப்பதோடு மட்டுமல்லாமல் மாங்குமாங்கு என்று எழுதவேண்டும். நம்மால் அது முடியாது. அதோடு மட்டுமல்ல, கவிதை எழுதி முடித்துவிட்டால் அடுத்து நிம்மதியாகத் தூங்கலாம், அந்தப் படைப்பழுத்தத்திலிருந்து விடுபட்டு வேறு வேலை பார்க்கலாம். எழுதி முடிக்கப்பட்ட கவிதை நல்ல உறக்கத்தைத் தந்துவிடுகிறது. ஆனால், சிறுகதை நாவல்கள் எழுதத் துவங்கிவிட்டால் அது அன்றைக்கோ, அடுத்தடுத்த நாள்களிலோ முடிந்துவிடுவதில்லை. பேரழகியைக் காணக்கூடாத கோலத்தில் கண்டுவிட்ட மாதிரி அன்றிலிருந்து உறங்கவே முடியாது. எழுதுவதும் நாள்கணக்கில் மாதக்கணக்கில் நின்று நகரும். உறக்கமும் நிம்மதியும் தொலைந்துவிடும். இந்த அவஸ்தைகள் எமக்கு ஆகிறதில்லை என்பதால் நாங்கள் நாவல் எழுதவில்லை. ஆனால், நாஞ்சில் நாடன் கட்டுரை கதை வடிவங்களோடு நின்றுவிடாமல் கவிதையும் எழுதலானார். இதை ரிலையன்ஸ் கம்பெனிக்காரன் மளிகைக் கடை வியாபாரத்திலும் இறங்கியதோடு ஒப்பிடலாம்.

சரி, நாஞ்சில் நாடன் கவிதை எழுதுகிறார் என்றதும் நாங்களெல்லாம் உஷாரானோம். அப்படி என்னத்தை எழுதிவிடப் போகிறார் என்றும் நாங்களெல்லாம் மூளையைப் பிசைந்து எழுதாத பொருள்களை அவர்மட்டும் எப்படிக் கண்டுபிடித்து வழங்கப் போகிறார் என்றும் ஆர்வமாகக் கவனித்தோம். வலப்பக்கக் கடல்மணலை இடப்பக்கம் இறைத்திறைத்து நகக்கணுக்கள் வலிக்கின்றன... அடியே வா ! என்றெல்லாம் அவர் வயதுக்கு எழுதினால் நன்றாகவா இருக்கும் என்றும் கவலைப் பட்டோம். ஆனால், நாஞ்சில் நாடன் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பச்சை நாயகி என்கின்ற அவருடைய கவிதை.

எங்கெனத் தேடுவதுன்

எழுலார்ந்த பொன்முகத்தை ?

காற்று வெளியதனுள், ககன விதானத்து,

பைந்நாகப் பாய்விரித்த பாற்கடலில் ?

யாண்டு செவிப்படுமுன் தேமதுரத் தமிழோசை ?

மைனா கிளி தேன்சிட்டு கானக்கருங்குயில்

வால் நீண்ட கரிக்குருவி, குருசு, மீன்கொத்தி யாவும்

கீசு கீசெனக் கலந்த அரவத்து ?

எவண்நுகரக் கிடைக்குமுன் மேனி நன்வாசம் ?

வேங்கை புங்கு நுணா வனப்பிச்சி

கமுகு புன்னை மலர்க்கூட்டம்

அடர்ந்து கிடக்கும் அருங்காட்டில் ?

தானாய்த் தென்பட்டால் அன்றித்

தேடுவது எங்ஙனம் ?

உன்னருளாலே உன் தோள் புல்லி

கூடுவதெப்போ சிலம்பார்க்கும் பூவடியை ?

துள்ளும் துடியிடையும் தோகைமயில் நடையும்

பவள இதழும் என்று பார்ப்பேன் என

குணங்குடி மஸ்தான் தேடிய மனோன்மணி

இந்த மனதை வைத்துக்கொண்டு

ஒன்றும் செய்ய முடியாது எனப்

பதைத்த நகுலனுக்கு சுசீலா

கொடுங்காற்றினில் கடும் மழையதனில்

காய்ச்சும் கதிரொளியில்

கலங்கிக் கிடந்தவென் கண்ணுக்கு

கானகத்துப் பச்சை நாயகி !

நாஞ்சில் நாடனிடமிருந்து கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுக் கிளைகளில் மொழித்தேனீ கட்டிய தேனடைகளாகத் தோன்றுகின்றன. கவிஞன் என்பவன் மொழியை ஆயுதமாகச் சுழற்றத் தெரிந்தவன். நாஞ்சில் நாடனின் கவிதைகளில் புழங்கும் மொழி இன்று தமிழில் இயங்குகிற எந்தவொரு நவீன கவிஞனின் மொழியைவிடவும் மேம்பட்டது. இத்தனை காலம் இவர் ஏன் இந்த மொழியைக் கவிதைப் புலத்தில் இயக்கிக் காட்டவில்லை என்பது ஆச்சர்யமே.

நாஞ்சில் நாடன் எவ்வொரு கவிஞனை விடவும் அதிகமான சங்க இலக்கியப் பரிச்சயம் உடையவர். சங்க இலக்கியத்தில் எமக்கேதும் ஐயம் என்றால் அவரை அழைக்கலாம். அது தொடர்பான நூல்கள் எவை என வினவலாம். அதற்கு அவருடைய கவிதைகள் எல்லாமே ஆசிரியப்பாவின் அகவலோசையோடு இருப்பதுவே சாட்சி. மரபுச் சொற்றொடர்கள் கவிதைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன.

நம் கவிஞர்களை, ஒரு மரபான முன் தொடர்ச்சியை இனங்கண்டு அடையாளம் காணலாம். ஞானக்கூத்தன் போன்றவர்கள் கவி காளமேகத்தின் பரம்பரை என்று சொல்லலாம். பாரதிதாசன் பரம்பரை என்று ஒரு கவிஞர்கள் வரிசை இருக்கிறது. பாரதியாரைத் தமிழ்ச் சித்தர்களின் பரம்பரை என்று வகுப்பார்கள்.

தம்முன்பாக இருந்த வன்மையான நிறுவனங்களை எல்லாம் எதிர்த்துக்கொண்டு எல்லாவற்றையும் அதன் வேரோடு நோண்டியெடுத்து விமர்சிக்கின்ற, அந்த விமர்சனங்களை எந்தப் பயமும் இல்லாமல் முன்வைக்கின்ற, முற்றும் உணர்ந்த, முழுமையும் துறந்த ஒரு மனோபாவம் சித்தர் கவிதைகளின் இயல்பு. பாரதியார் வகுத்துக்கொண்ட அதே சித்தர் பரம்பரைப் பாதையைத் தமிழ் நவீன கவிதையுலகில் தனக்கென வரித்துக்கொண்ட கவிஞராக நாஞ்சில் நாடனை நான் இனங்காண்கின்றேன்.

· (கடந்த 23.02.2011 அன்று, ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் படைப்புகள் குறித்த கருத்தரங்கில் கவிஞர் மகுடேசுவரன் ஆற்றிய உரை)

Saturday, February 5, 2011

சாயமிடும் தொழில் சாகும் எனில்...




முதலில் 
கையிலுள்ள தொகையைப் போட்டோம் 
பிறகு 
கடன் வாங்கிக் கொஞ்சம் போட்டோம் 
வங்கிக்கு 
நாய் பேயாய் அலைந்து 
கிடைத்த தொகையை எல்லாம் 
தொழிலில் 
போட்டுக்கொண்டே இருந்தோம் 

போதவில்லை 

கழுத்தில் இருந்தவற்றைக் 
கழற்றிப் போட்டோம் 
மனைவியின் 
கால்களைத் தொழுது அழுது 
தாலியையும் விற்று 
தொழிலில் போட்டோம் 

தொழில் செய்து ஈட்டியவை 
ஒருகாலத்தும் 
எம் முதலுக்கு அருகில் வந்திருக்கவில்லை 

முன்பு போலில்லை நிலைமை !
தொழிலாளியைக் 
கொஞ்சிக் கெஞ்சி வேலை வாங்குகிறோம் 
சொந்த வாகனத்தை அனுப்பி 
அவன் முற்றத்தில் காத்திருந்து 
அழைத்து  வருகிறோம் 
அனுப்பி வைக்கிறோம் 

நாங்களும் 
முன்னாள் விவசாயிகளே !
நாங்களும் 
மண்ணில் புரண்டெழுந்தவர்களே !
என்ன கொஞ்சம் முன்னதாய் 
மண்ணை விட்டு வெளியேறிவிட்டோம்  

இங்கே எதுவும் 
உவந்து ஏற்ற தொழிலில்லை 
ஊரோடு ஒத்துவாழ ஏற்றதுதான் 
உயிரோடிருக்க வேண்டுமென்று ஏற்றதுதான் 

ஈடுபட்ட தொழிலில் 
பாடுபட்டு உழைத்தோம் 
அதில் பாசாங்கு செய்தோமில்லை 

யாம் 
வண்ணமிட்ட துணிகள் 
வானவில்லைப் பழித்தன என்பது வரலாறு 
யாம் 
சாயமிட்ட துணிகள் 
சந்தையை வென்றன என்பது சரித்திரம் 

ஒன்றும் தெளிவாக இல்லை 

நதிகளை நாங்களா கெடுத்தோம் ?
நதிகளை 
நீரின்மை  கெடுத்தது !
நதிகள் 
இங்கே வெறும் பழைய நீர்த்தடங்களே. 

நீர்மம் பள்ளத்தை நோக்கித்தானே பாயும் !
மேட்டை நோக்கித் திருப்ப 
எம்மால்  எப்படி முடியும் ?

துரதிர்ஷ்ட வசமாக 
பள்ளத்தில் ஒரு நதிப்படுகை இருந்துவிட்டது 
அந்த நதித்தடத்தில் தான்
எங்கள் பாட்டனின் புதைமேடும் இருக்கிறது 

எங்கள் முன் 
உலகமயமாக்கல் என்னும் சவாலை 
நிறுத்தியிருக்கிறீர்கள்
அந்த யுத்தத்தில் 
நாங்கள் 
நிராயுதபாணியாக நின்றுகொண்டிருக்கும்போது 
நீங்கள் 
எங்கள் கெண்டைக்கால் நரம்பை வெட்டுகிறீர்கள் !

ஒன்றை மறவாதீர் !

தமிழகத்தில் 
ஊருக்கு நுறு பேர் 
உண்ணுவது 
திருப்பூர் போடும் சோற்றைத்தான். 

பேருந்தை விட்டிறங்கியதும் 
உங்களை 
ஒரு வேலைக்கு அழைத்துக்கொள்ளும் ஊர் இது. 

அரசே !
நீ இதுகாறும் வகித்த 
மௌன வேடம் போதும்.
இந்தக் கழிவை 
உன் கமண்டலத்தில் பிடி.
கடலில் கலப்பாயோ 
அல்லது 
காற்றில் கலப்பாயோ 
என்ன செய்யவேண்டுமோ அது 
உனக்கே தெரியும்.