Saturday, April 30, 2011

செல்பேசிக்குள் சிறைப்பட்டிருந்த சித்திரங்கள்


ஓய்ந்த நேரத்தில் என் செல்பேசியின் ஒளிப்படங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அவற்றில் சிலவற்றைக் குறிப்புகளோடு பகிர்ந்துகொள்கிறேன். பழைய குமுதத்தைப் புரட்டுவதும் சமயத்தில் இன்பம்தானே !


அருவி
ஆயிரம் சொற்களால் விவரித்தாலும்
அருவி

கட்டுமானப் பணி
விதானப் பூச்சு நடந்துகொண்டிருக்கிறது
சிமெண்டு செய்யும் மாயம்
தொழிலாளிக்கும் வியப்பு !
துளிரும் இலை
அதை உண்ணும்
புழுவின் துளை
அடியில் மலையடுக்கு
இடையில் முகிலடுக்கு
முடியில் வெளியடுக்கு

நீலவானில்
நீந்திச் செல்லும் விமானம் !
காணமுடிகிறதா ?

பாலக்காடு அருகில்
கொடுவாயூர் சிவன் கோவில் குளம் !
உதவியாளரின் தமக்கை திருமணத்திற்குச் சென்றால்
மண்டபத்து எதிரே
மணிப்பவழ நீர்த்தடாகம் !
இறங்கி நீராடினேன்
நீரை
நீந்திக் குடைந்து குளித்தேன் !
குளத்தில் உள்ள முன் தலை
என் தலை !


சாலை வளையுமிடத்தில்
ஒரு சத்திர நிழல்
தூரத்தில் முகில்
மழைக்குத் திரண்ட திரள்


நான் அமர்ந்திருக்கிறேன்
என் கால்மீது அமர்ந்திருக்கிறது
சேவற்குஞ்சு


நான் உறங்குகிறேன்
என்மீது
பூனை உறங்குகிறது


Friday, April 15, 2011

நல்வரவு



உன் மோதிர விரல்கள்

அணிகலனற்று இருக்கின்றன

கணையாழி மீண்டும் வருகிறது !

Wednesday, April 6, 2011

படம் பார்த்தீர்களா ?

நஞ்சுபுரம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இணையதளம் ஒன்று சென்னை மாநகர வசூலில் நஞ்சுபுரம் இரண்டாம் இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. நண்பர்கள் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. திரையுலகில் படத்தைப்பற்றி கருத்தாக என்ன உலவுகிறது என்று விசாரித்ததற்கு ‘புதிது. மதிக்கத்தக்க முயற்சி’ என்று நண்பர்கள் பலர் தெரிவித்தனர்.

அரங்குகளுக்கு வந்து திரைப்படம் பார்க்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடமிருந்து அகன்று கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் வெளியாகும் எல்லாத் திரைப்படங்களையும் திருட்டுக் குறுந்தகடுகளில் அல்லது விரைவில் நிகழும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் நிச்சயமாகப் பார்க்கிறார்கள். திரையுலகம் மீதமிருக்கும் ரசிகர்களைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாக முயன்றுகொண்டிருக்கிறது. நாயக மயக்கங்களுக்குத் தமிழகம் நிரந்தரப் புகலிடம் என்பது மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது.

படத்தைப் பற்றிய விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முன் தீர்மானமற்ற, மேதாவிக் கொழுப்பற்ற, ஆக்கபூர்வமான புதுமுயற்களின் மீது அக்கறையுள்ள விமர்சகனின் மனது நஞ்சுபுரத்தை முழுமையான இதயத்துடன் அங்கீகரிக்கிறது. பரிந்துரைக்கவும் செய்கிறது.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு துறைசார்ந்து பங்கேற்ற ஒவ்வொரு கலைஞரும் தம்மால் இயன்ற சிறப்பானவற்றை வழங்க முற்பட்டிருக்கிறார். ஒளிப்பதிவாகட்டும், படத்தொகுப்பாகட்டும், பாடலிசை/பின்னணி இசையாகட்டும், இயக்கமாகட்டும் !

விறுவிறுவென்று இத்திரைப்படத்திற்குக் கிடைத்த விளம்பரம் பற்பலரையும் கொஞ்சம் பொறாமை கொள்ளத் தூண்டிவிட்டது. அந்தப் பொறாமைக்கு இப்படக்குழுவில் பணியாற்றிய இளைய உள்ளங்களாகிய நாங்கள் சற்றும் இலக்காகிவிடத் தகுதியுடையோர் அல்லோம். உங்கள் நேசிப்புக்கும் அன்புக்கும் மட்டுமே உரிய எளியவர்களே யாம் யாவரும்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா ? படத்தின் உரையாடல்களில் தற்செயலாக இடம்பெற்றுவிட்ட மூன்று சொற்களைத் தவிர ( பி.ஏ. / பிரண்டு / லூசு ) வேறு ஆங்கில வார்த்தைகளே இல்லை எனலாம். படம் முழுக்க ஆண் கதாபாத்திரங்கள் எல்லாரும் வெள்ளை வேட்டி அல்லது லுங்கிகளில் (சோடிப்பாடலில் ஒருநொடி/மற்றும் தோழர் தவிர்த்து) மட்டுமே வருகின்றார்கள். இது சிறிய அளவிலான கலாச்சாரப் பங்களிப்பாகக் கருதப்பட மாட்டாதா என்ன ? மேலும், மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தி.சு.சதாசிவம் அவர்கள்தாம் வைத்தியராக நடித்திருப்பவர்.

சில குறிப்பிடத்தகுந்த விமர்சனங்களை வாசிக்க இங்கே செல்க !

http://ww5.4tamilmedia.com/index.php/cinema/movie-review/3802-nanjupuram-cinema

http://www.mysixer.com/?p=9651

http://chennaionline.com/tamil/cinema/movie-reviews/newsitem.aspx?NEWSID=8be70153-ca3b-4c94-980b-41cf5d5a5f19&CATEGORYNAME=Rview

http://www.lankafocus.com/cinema/?p=11921

http://tamilcinema.com/CINENEWS/REVIEW/2011/nanjupuram.asp

http://expressbuzz.com/entertainment/reviews/nanjupuram/262321.html

http://www.snehasallapam.com/malayalam-movie-discussions/4831-athimanoharam-ee-nanjupuram.html

http://www.getcinemas.com/nanjupuram-review

http://www.cinefundas.com/2011/04/02/nanjupuram-tamil-movie-review

படம் பார்த்திருந்தீர்களானால் உங்கள் கருத்துகளைப் பின்னூட்டமிடுக !