Saturday, May 26, 2012

புல்லறுக்க வந்தவன் தந்த புதையல்


தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் - நா. காமராசன்
புல்லறுக்க வந்தவன் தந்த புதையல்
·         மகுடேசுவரன்


தம் படங்களுக்குப் பாடல்கள் எழுதப் புதுப்புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றைக்கே முனைப்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்ணதாசனோடு எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியான பிரிவு தோன்றியிருந்ததால் அவரை நாடமுடியாத நிலை. மேலும், கண்ணதாசன் சிவாஜியின் படங்களுக்கு அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். ஆகவே, தவிர்க்கவே முடியாமல் வாலி போன்றவர்கள் எம். ஜி. ஆர் படங்களில் தொடர்ந்து எழுதலாயினர். வாலியின் பாடல்கள் கண்ணதாசனே எழுதியவையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தியபோதிலும் கண்ணதாசன் பாடல்களோடு ஒப்பிடுகையில் ஒருபடி தாழ்ந்தே இருந்தன. மேலும் கவிஞர் வாலியும் எல்லாப் படங்களுக்கும் நிறைய பாடல்கள் எழுதி வந்தார். எம்.ஜி.ஆருக்குத் தமிழ் அறிந்த புலவர்கள்மீது அளப்பரிய மதிப்பும் பற்றும் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப் பற்றே தமிழறிஞரான கருணாநிதியோடு அவர் ஆழ்ந்த தோழமை கொள்ளக் காரணம். அவர் எப்போதும் தமிழறிஞர்களையும் புலவர்களையும் மதிப்போடு போற்றியும் ஆதரித்தும் வந்திருக்கிறார் என்பதற்கு நிறைய சாட்சியாளர்களைக் காணமுடிகிறது.

எம்.ஜி.ஆர் தம் படங்களுக்காகப் புதிய சிந்தனையாளர்களைத் தேடியதோடு நில்லாமல் அவர்களுக்குத் தம் படங்களில் இயன்றவிடங்களில் எல்லாம் உரிய வாய்ப்பைத் தந்து ஏற்றிவிட்டிருக்கிறார். தமிழ்த் திரையின் அபூர்வமான படைப்புகளைத் தந்த இயக்குநர் மகேந்திரன் எம்.ஜி.ஆர் தந்து புரந்ததால் ஆளானவர் என்பதை அவரது சுயசரிதைப் பக்கங்கள் கூறுகின்றன. இத்தனைக்கும் மகேந்திரன் எம்.ஜி.ஆரின் படங்கள் எவற்றிலும் பங்கு பெற்றவரோ பணியாற்றியவரோ அல்லர். தம் கடைசிக் காலத்தில்கூட திரைப்படக் கல்லூரிக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றைத் தந்து இயக்குநர் பாடப்பிரிவில் மாணவன் ஒருவனைச் சேர்க்க உதவுகிறார். அப்படிச் சேர்ந்த மாணவர்தான் பிற்காலத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வர்த்தகப் படங்களை வெற்றிகரமாக இயக்கமுடியும் என்பதை நிறுவிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார். அவர் முதலமைச்சராக இருந்தபோதும் கூட யார் அவரைச் சந்திக்கச் சென்றாலும் அவரே முன்வந்து கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘சொல்லுங்க. நான் உங்களுக்கு என்ன செஞ்சு தரணும் ?’ என்பதே.

பஞ்சு அருணாசலம், புலமைப் பித்தன், முத்துலிங்கம் ஆகியோரும் எம்.ஜி.ஆரின் அறிமுகங்களே. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் நா. காமராசன்.

நா. காமராசன் தேனிமாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர். அவ்வூரைச் சேர்ந்த பழங்கவிஞர் கான்முகமது என்பவரிடம் கவிதை இலக்கணத்தைக் கற்றவர். கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றியிருக்கிறார். தாம் கல்லூரியில் தமிழ்ப்பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் பிற வகுப்பு மாணவர்களும் பேராசியர்களும் கதவு ஜன்னல்கள் எல்லாம் முகமாக நின்று தம் பாடங்களை ஆர்வத்தோடு  கவனிப்பார்கள் என்று நா. காமராசன் கூறியிருக்கிறார். முன்னால் சபாநாயகர் காளிமுத்து, எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ஆகியவர்களோடு இளமையில் திராவிட இயக்கத்தின் தனித் தமிழ்நாடு கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார். அதற்காகச் சிறைசென்றிருக்கிறார். சிறையில் அவர் கால்விலங்கு பூட்டப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்தார். தாமரை, முரசொலி, மன்றம், காஞ்சி, காதல், சுரதா, தீபம் ஆகிய பத்திரிகைகளில் அவர் கவிதைகள் எழுதி வெளியிட்டார். தன் இலக்கியத் தாய்வீடு என்று தாமரை இதழைக் குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் இறுதியில் அவர் கவிதைகள் எழுதத் துவங்கினார். அதுவே தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதை வடிவம் துளிர்விடத் துவங்கியிருந்த நேரம். எழுத்து இதழில் கவிதை எழுதியவர்கள் புதுக்கவிதையின் உள்ளடக்கத்தோடு தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் நா. காமராசன் மரபுக் கவிதையைப் போன்றே சந்தச் சொற்றொடர்களில் புதுப் பதச்சேர்க்கைகளைத் தம் கவிதைகளில் பயன்படுத்தினார். அந்த உருவம் அப்போதைய காலகட்டத்தில் மிகவும் புதிதாக இருந்திருக்க வேண்டும். அப்போதைய காலத்திற்கேற்ற புதுமைகளை அவர் செய்ததால் நா. காமராசனின் கவிதைகள் பெரும் புகழைப் பெற்றன. ஒரு வகையில் அவர் வானம்பாடிகளுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இரவெரிக்கும் பரிதியை – ஏழை
விறகெரிக்க வீசுவேன்
ஒளிகள் பேசும் மொழியிலே – நான்
இருள்களோடு பேசுவேன்

என்றெல்லாம் அமைகிறது அவர் கவிதை. இந்தப் போக்கைக் கவிஞர் கண்ணதாசன் போன்ற மரபை மட்டுமே எழுதிய கவிஞர்களும் முன்வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். அதை நா. காமராசனின் ‘சூரிய காந்தி’ கவிதைத் தொகுப்புக்குக் கண்ணதாசன் வழங்கிய முன்னுரையால் உணர முடிகிறது. ‘ஒரு நூலுக்கு முன்னுரை என்பது யானைக்குத் தந்தத்தைப்போல’ என்பது நா. காமராசனின் கருத்து. பிற்காலத்தில் வாரப்பத்திரிகைகளில் வெளியாகி சாதாரணமான வாக்கிய அமைப்புகளாகிப் போன போக்குகளுக்கும் அவரிடமே தோற்றுவாய்களைக் காணமுடிகிறது.

இந்தியாவிற்கு / சுதந்திரம் வந்தபோது / நான் மட்டும் அடிமையானேன் / ஆம் ! அன்றுதான் நான் / ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டேன்.
திருமணத்திற்குப் பிறகு / இரண்டு பேர் ஒருவராய் மாறுகிறார்கள் / அதற்குப் பிறகு / அவர்கள் இரண்டுபேரும் சண்டை போடுகிறார்கள் / ஏன் ? / ‘அந்த ஒருவர்’ / யார் என்று தீர்மானம் செய்வதற்காக.

– என்பதைப் போன்றவற்றை ‘சித்திர மின்னல்கள்’ என தம் தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார்.

உருவகக் கவிதை வடிவத்தை அவரே முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். கறுப்பு மலர்கள் என்னும் அவருடைய சொல்லாட்சி நீக்ரோக்களைப் பற்றிய உருவகம் ஆகும். நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் / ஆடை வாங்குவதற்காக... என்பது விலைமகளைப் பற்றிய அவருடைய புகழ்பெற்ற வரி. நடைப்பிணங்கள் என்ற தலைப்பில் கறுப்பு மலர்கள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மலைவாழ் பளியர் குலத்தின் சோக வாழ்க்கைப் பாடல் ‘நடையிலொரு தவவேகம் / நயனத்தில் புத்த நிழல் / குடிசைகளில் துறவுநெறி / நாங்கள் காட்டு மூலிகைபோல் / கண்டெடுக்க முடியாமல் / ஓட்டைக் குடிசைகளில் / உயிர்வாழும் நடைப்பிணங்கள்’ என்று முடிகிறது. ஒருவேளை தமிழ்ப் புதுக்கவிதையில் எழுதப்பட்ட விளிம்பு நிலை மக்களைப் பற்றிய முதல் வரிகளாக நா. காமராசனின் இவ்வரிகளே இருக்கக் கூடும்.
நா. காமராசனைக் கவிதையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதா. சுரதாவைப் போலவே நா. காமராசனிடமும் புதிய உவமைகளைக் காணமுடிகிறது. உவமை தரும் இன்பம் என்பது யாப்பு நமக்கு நல்கிய அரிய செல்வம். மொழி தள்ளாடி நடந்த ஆதிகாலத்தில் ஒவ்வொன்றும் உவமையின் வழியாகத்தான் எடுத்துச் சொல்லப்பட்டுக் கருத்துப் பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும். உவமை எதிர்பாராத திசையிலிருந்து மின்னலைப் போல் தோன்றும்போது அது உணர்த்த விரும்பும் பொருள் இடியைப் போல் இறங்குகிறது. நா. காமராசன் உவமைகளை உருவாக்குவதில் அதிக ஈடுபாடு காட்டியவர். கரிகால் வளவனின் கால்போல் கறுத்த மேகம் - போர்க்களத்தில் ஓடுகின்ற தேர்கள்போலப் புதுவெள்ளம் - விதைநெல்லின் மூட்டையைப்போல் தூக்கிக்கொண்டு விரித்திருந்த மெத்தைக்குக் கொண்டு போனான் – நிழல்பந்தல் போட்டதுபோல் நின்றிருக்கும் புளியந்தோப்பு – நினைவுகள் திரும்பிவர நீர்வீழ்ச்சி போலழுதாள் – வைகைநதித் தண்ணீர்போல் அடக்கம் - என அவரின் உவமைக் கணக்குகள் ஏராளம்.

ஒரே சொல்லை இருபொருள்படும்படிக் கையாள்வதைச் சிலேடை என்பார்கள். அப்படிப்பட்ட சிலேடை வாக்கியங்களை அமைப்பதில் நா. காமராசன் கெட்டிக்காரர். நா. காமராசனை நான் தேடிப் படிக்கத் தூண்டியவையே அவருடைய சிலேடை வரிகளில் எனக்கேற்பட்ட ஆர்வம்தான்.

வஞ்சிக் கோமான் விழிகள் சந்திக்கின்ற வஞ்சிக்கோ மான்விழிகள் / தன்னிழலைத் தண்ணீரில் விழவைக்காமல் தண்ணிழலை வளர்க்கின்ற மண்டபம் / நிலையான தண்மையுள்ள எழிலே வாழ்வின் நிலையாமைத் தன்மையுள்ள நிழலே / வஞ்சியாளும் சேரமன்னர் வஞ்சியாது இவ்வஞ்சியாளைச் சேர்ந்த மன்னர் / வெஞ்சமரில் வேல்மன்னர் வாள்மன்னர் என் வேல்விழியில் வாழ்மன்னர் / கொஞ்சுகின்ற மலரிதழ்மேல் அரும்பு மீசை கொண்ட மன்னர் கொடையருளில் கொண்டல் மன்னர் - இவையெல்லாம் சிறுவயதில் என்னை உடனே ஈர்த்து நின்றன. பிற்காலத்தில் சிலேடைப் பயன்பாடுகள் வழக்கொழிந்துவிட்டாலும் அது தரும் சுவைக்கென்று ஒரு தனி மதிப்பு என்றும் இருக்கவே செய்யும். சிலேடைகள் தற்காலக் கவிதைகளில் காணப்படாமைக்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது அது புலமையைக் கொண்டு விளையாடும் ஆட்டமாக இருக்கிறது என்பதைத்தான். தற்காலக் கவிஞர்களுக்கு மொழிப்புலமையோடு எந்த ஒட்டுறவும் இல்லை. புழக்கத்தில் உள்ள சிலவாயிரம் சொற்களைக் கொண்டு இங்கே பலருக்கும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் குறைபட்டுக் கூறுவீர்களேயானால் நவீனம் என்ற குத்தை விட்டு உங்களைப் படுக்கப்போட்டுவிடுவார்கள்.    

தொட்டில் குழந்தைக்கு ஒரு தாலாட்டுப்பாடல் வடிவில் அவர் எழுதிய கவிதை ஒன்று.

தொட்டில் துணி முரடோ இல்லை இவன்
தோளெலும்பும் பூதானோ
ஆரோ எவரோ நீ
அடிவயிற்றுப் புதையலோ
உன் உதையெல்லாம் ஒத்தடமோ
உமிழ்நீர் இளநீரோ

புதுக்கவிதையில் நாட்டுப்புறப் பாடல் அமைப்பில் முதலில் எழுதிப் பார்த்தவரும் அவரே.
அழகு என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அவர் பட்டியல் ஒன்றைப் போட்டு எழுதிய வரிகள் இவை. இந்தக் கவிதை பிற்பாடு எப்படிப்பட்ட திரைப்பாடலானது என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மங்கைக்குக் கண்ணழகு ! துள்ளுகின்ற
மானுக்குப் பேரழகு வெள்ளைப்புள்ளி !
செங்கதிர்க்குப் பேரழகு ஒளிநெருப்பு !
சேய்மீன்கள் தானழகு பொய்கைத் தாய்க்கு !
சங்கிற்கு நிறமழகு ! தேய்ந்துபோகும்
சந்தனந்தான் மார்பிற்கு அழகு ! நல்ல
தங்கநகை கழுத்திற்கு அழகு ! என்றன்
தம்பிக்கோ தனியழகு குழந்தைப் பேச்சு !
  • ·           
நீதிக்குத் தலைவணங்கு என்னும் திரைப்படம் வாயிலாக நா. காமராசன் திரைப்பாடல் எழுத வந்தார். அவருடைய நூற்றுக்கணக்கான பாடல்களில் வெற்றிபெற்ற பாடல்கள் பல. கனவுகளே ஆயிரம் கனவுகளே, போய்வா நதியலையே, விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான், ஓ மானே மானே உன்னைத்தானே, மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ, ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே – ஆகிய பாடல்கள் அவர் எழுதியவற்றில் என்னைக் கவர்ந்தவை. மிதமான உருவகமும் தகுதியழகோடு விளங்கும் பொருத்தமான வார்த்தைகளும் நா. காமராசன் பாடல்களின் சிறப்பு. கவிஞனுக்கே உரிய கௌரவத்தோடு,தம்மை முன்னிறுத்தி முந்திக்கொள்ளாமல் தம் பாடல்களின் ஜீவமொழியைத் திரைத்துறைக்கு வழங்கிவிட்டு ஓரமாக நின்றுகொண்டார். தாம் திரைத்துறைக்குப் பாடல் எழுதிய அனுபவங்களைப் பிற்காலத்தில் தம் கவிதையொன்றில் பதிவு செய்கையில் ‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்று கசப்போடு கூறுகிறார். ‘பூபாள ராகம் புயலோடு போனதுபோல் ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்ததுபோல் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்’ என்று மனம் வெதும்பிச் சொன்னார். திரையுலகம் அவருக்கு அநீதி இழைத்திருக்குமெனில் அதற்காக அது வெட்கப்படவேண்டும். உரிய கன்னிமையோடும் தூய பேரழகோடும் வளர்ந்த பெண்களைத் தன்னில் இழுத்து அழுக்காக்கிச் சக்கையாக்கித் துப்பிவிடும் அந்த மாய உலகம் நா. காமராசனுக்கும் அதையே செய்ததில் வியப்பொன்றுமில்லை. இப்படி எத்தனையோ வெள்ளை உள்ளங்களை வாட்டித் துன்புறுத்திப் பாவக்கடலாக மாறி நிற்கும் திரையுலகம் தனக்கான தண்டனையை உரிய மீட்பர் யாருமேயில்லாமல் ‘இடுமுதல் எட்டணாவிற்கு நம்பகமில்லாத ஒரு தொழிலாக மாறி தற்காலத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

ஏ.வி.எம்மின் ‘நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் நா. காமராசன் எழுதிய பாடல் ‘சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்பது. நா. காமராசனின் தமிழ் ஆட்சியும் சொல்லழகும் சந்தத்தோடு மெல்ல வழிந்து இதயத்தை வேதனைக்கடலில் மூழ்கடிக்கும் பாங்கும் அப்பாடலில் உண்டு. கேட்பவர் எவரும் பாடலின் இறுதியில் விழிக்கடை நீர்த்திரளைத் துடைக்காமல் எழமுடியாதபடி இருக்கும் அப்பாடல். பாடிய ஜேசுதாஸின் குரலில் அத்தனை உருக்கம் பாடலெங்கும் பனியாக மூடியிருக்கும்.
நானே எனக்கு நண்பன் இல்லையே என்று போக்கிரித்தனமாக சுற்றியலைந்த நாயகன் காதலுற்றுத் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டு உன்னதமான நிலைக்கு வருவான். அவர்களுடைய காதல் வாழ்வுக்கு சாட்சியாக ஒரு மகள் பிறந்திருப்பாள். அச்செல்ல மகள் தந்தைசொல் மீறித் தன் தலைவனைத் தேடி மணந்து பெற்றவரை நீங்குவாள். தன் இழிவுகள் அனைத்தையும் ஏற்று சகித்து தன்னையும் சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்கிய தன் காதல் மனைவி வெந்து துடிப்பதைக் காணமுடியாத நிலையில் நாயகன் பாடும் பாடல் அது. பிரிவுத் துயரமும் உறவுகளின் நிலையாமையும் அந்தப் பாடல் வரியெங்கும் பிசினாக ஒட்டியிருக்கும்.


சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா ?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா ?

சிட்டுக்குருவி நம் மகள். நம் இல்லக்கூட்டில் செல்லச் சிட்டாகப்பிறந்த ஒரே மகள். உணவையும் உயிரையும் வாயிட்டு ஊட்டி வளர்த்த அன்புச் சிறுவள். அந்தச் சிட்டுக் குருவிக்குச் சிறகு முளைத்துவிட்டது. சிறகு முளைத்ததும் கொஞ்சமும் காத்திருக்காமல் அவசரப்பட்டுப் பறந்து போய்விட்டாளே ! ரத்தத்தைப் பொழிந்து வளர்க்கப்பட்டவள், ரத்த உறவாக என்றும் இருந்து நம்மீது அன்பு செலுத்த வேண்டியவள் – அவளோடு இருந்த அத்தனை உறவும் தன் மணவாளனைத் தேடிப் பறந்ததில் கிளைபோல் முறிந்துவிட்டதே ! நாம் இந்த வாழ்வில் பெற்ற ஒரே பேறு நான் தந்தை என்பதும் நீ தாய் என்பதும்தான். அந்தப் பேற்ற நமக்குப் பிறந்து வழங்கியவள் நம் மகள். அவளே நம்மைத் துறந்து சென்றுவிட்டபிறகு அந்தப் பெருமையைக் கூட நாம் இழந்துவிட்டோமா ? அவளே இல்லையென்றால் நான் தந்தையும் இல்லை, நீ அன்னையும் இல்லையே ! இல்லை இது வெறும் கனவுதானா ? அல்லது அப்போதைக்கு நின்று நிலவிப் பின் மறந்தி நீங்கிவிடவேண்டிய நினைவா ? சொந்தம் என்பது பிறப்போடு வருவது. பந்தம் என்பது வாழ்வின் நிகழ்வுகளில் வந்து சேர்வது. அப்படி நெஞ்சோடு பந்தமாக வந்து சேர்ந்தவை எல்லாமே என்றும் தொடரும் தொடர்கதையா ? அல்லது அவ்வப்போது முடிந்துவிடும் சிறுகதையா ?

நாம் போடும் மேடைகளே நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம்
கூடி வாழக் கூடு தேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம் ?
தாயென்னும் பூமாலை தரை மேலே வாடுதே !

இந்த உலகில் நாம் நடந்துகொள்ளும் நிகழ்வுகள் எல்லாமே நாடக மேடை நிகழ்வுகளே. அவை வெறும் போலிகள். நாம் நம்பிப் பயணிக்கும் ஓடங்களாகிய உறவுகள் எல்லாமே மூழ்கி உருவழியும் காகித ஓடங்களே. பாசம் என்றா சொல்ல முடியும் ? எல்லாமே வெறும் வேஷம் என்பதாகத்தானே இருக்கிறது ? அல்லது காலம் இட்டுக் காட்டுகிற வண்ணக்கோலங்களா இவையெல்லாம் ? ஜோடிக்குருவிகளாக இருந்த நம்மோடு கூடிவாழ்வதற்காக நம் உறவுக் கூட்டுக்கு ஓடி வந்த ஜீவன் நம் மகள். சிறகு முளைத்ததால் ஆடிப் பாடி மகிழ்வதற்காக நம் பாதுகாப்பான கூட்டைவிட்டு அது காட்டுக்குப் பறந்து போய்விட்டதே. அந்தக் காட்டில் அந்தச் சிறுகுருவியைக் கொத்தித் தின்பதற்காக எத்தனை எத்தனை பருந்துகளும் வல்லூறுகளும் வட்டமிடுகின்றனவோ ! அந்தத் துயரத்தில் அவளைப் பெற்ற தாயென்னும் இந்தப் பூமாலை தரைமேலே வாடி வதங்குகின்றதே !

காலங்கள் மாறிவரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலைக் கூறுவதெங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை
பாச தீபம் கையில் ஏந்தி வாழவந்த வேளை
கண்கள் ஆடப் பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே !

புரிகிறது. காலங்கள் மாறிவருகின்றன. அதற்கேற்ப மாறிவிட்ட காட்சிகளைத்தான் இங்கே காண்கிறேன். என் மகள் பிரிந்துபோனது பருவத்தின் நிர்ப்பந்தம், ஒருநாள் மனம் மாறித் திரும்பவருவாள் என்றெல்லாம் நியாயங்கள் சில இருக்கலாம். ஆனால், அந்த நியாயங்கள் எங்களுக்கு ஆறுதலைக் கூறுவதில்லை. மஞ்சளும் குங்குமமும் மார்புச் சந்தனமும் சூடுகின்ற எங்கள் கன்னிப் பாவை எங்கள் குலவிளக்கு. பாசத்தின் ஒளிவிளக்கைத் தன் திருக்கரங்களில் ஏந்தி எங்களோடு வாழ்வதற்காக வந்த வேளை இது என்று எண்ணியிருந்தோம். தன் கண்கள் ஒருவனைக் கண்டு காதலில் ஆடிவிட்டதால் அவள் புதிதாக அடைந்திருக்கும் பெண்மை அவளது எண்ணத்திற்கு ஒத்துப்பாடி விட்டதால் இன்பம் கண்டு மகிழும் வழியில் வளர்ந்த மங்கையாகிச் சென்றுவிட்டாள். சரி அதற்காக அவளைச் சபிக்கவா முடியும் ? தாயும் தந்தையுமாகிய நாங்கள் கெட்டு அழிவுற்று வாடி நின்றாலும் அவள் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும் !

மகளைப் பெற்றவர்கள் எவரும் இந்தப் பாடலின் ஆழத்தை இன்னும் அதிகமாக உணர முடியும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னை அடர்த்தியான மௌனம் சூழ்ந்துகொள்ளும். அது நானும் மகளைப் பெற்றவன் என்பதாலோ என்னவோ ! 

நன்றி: காட்சிப்பிழைதிரை (திரைப்பட மாதாந்திர ஆய்விதழ்)

Tuesday, May 15, 2012

மூணாறு



இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நன்றாகத் தெரிந்துவிட்டதால் இந்தக் கோடைக்கு கோடை வாசஸ்தலத்திற்கு மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்வதாக முடிவெடுத்தேன். கோடை காலத்தில் கோடை வாசஸ்தலங்களை எட்டியும் பார்க்கக் கூடாது என்று சபதமே எடுத்திருந்தேன். அங்குள்ளவர்களும் மக்களே, அங்குள்ளவையும் மேடு பள்ளங்களாலான புவியியல் தோற்றங்களே என்கிற தெளிவு மட்டுமே காரணமில்லை. அதுநாள்வரை இல்லாத புதுவெறியோடு ஊருலகத்தில் உள்ள அத்தனை மக்களும் புற்றீசல் போலப் படையெடுத்து அச்சிறுநகரங்களைப் புகையாலும் புழுதியாலும் நெருக்கடியாலும் கழுத்தைத் திருகிக் குற்றுயிராக்கி விடுகிறார்கள் என்பதுதான் முதல் காரணம். மலையூர்களுக்குச் செல்ல விரும்பினால் கோடை துவங்குவதற்கும் கார்காலம் முடிவதற்கும் இடையிலுள்ள ஒரு பருவத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குளிர் பிடிக்கும் என்றால்  நடுங்கும் குளிர் மாதங்களும் கூட பயணத்திற்கு ஏற்றவைதாம்.




அருகில் உள்ள உதகையும் கோடைக்கானலும் எனக்கு வாந்தி வருகிற அளவிற்கு ஒவ்வாமை ஏற்படுத்திய இடங்கள் என்பதால் மூணாறுக்குச் செல்வதாக இறுதியாயிற்று. மூணாற்றில் ஹைடல் பார்க், மாட்டுப் பட்டி அணை, சில காட்சி முனைகள், இரவிகுளம் வரையாட்டுப் பூங்கா ஆகியன பார்க்கவேண்டியவை என்றாலும் செல்லும் வழியில் மறையூர் தொல்குடிகளின் கல்லறை மேடு, தூவானம் அருவி, லாகூன் அருவி ஆகியனவும் காண்பதற்கு அழகியவை. எங்களுக்கு உடுமலைப் பேட்டையிலிருந்து மூணாறு 89 கிலோமீட்டர்கள் என்பதால் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்தின் யானைத்தடங்கள் வழியாக அமராவதி அணையின் கரையைப் பிடித்தபடிதான் செல்ல வேண்டும். ஊர் வழமையான ஒரு மலையூர் என்றாலும் செல்வழிக் காட்சிகளும் பசுமையும் கண்களுக்கு விருந்து.


போகும்போது மொத்தம் ஆறு இடங்களில் வண்டிகளை சாரை சாரையாக நிற்கவைத்து வண்டி ஓட்டுநரைக் குச்சுக்கு வரவழைத்து வண்டி எண், வகை, புறப்பாடு போய்ச்சேர் இடங்கள், உரிமையாளர் பெயர், கையெழுத்து என கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். மறக்காமல் இருபது ரூபாய் கொடுங்கள் என்று லஞ்சத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த லஞ்சப் பொறுக்கிகள் உள்ளவரை இந்த தேசத்தை எந்த அன்னா ஹசாரேவும் காப்பாற்ற முடியாது.


மறையூரைத் தாண்டி ஓர் பள்ளத்தில் சினிமா ஷூட்டிங் கும்பல் காணப்பட்டது. சாலையோரத்தில் நின்ற அந்தக் கும்பலின் வண்டிகளில் இளவட்ட சினிமா முயற்சியாளர்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். உடைகளுக்கான வேனிலிருந்து ஒருவர் பழைய புடவைகளைச் சாலையில் விரித்து வைத்து சுத்தியால் கொட்டி மேலும் கந்தலாக்கிக்கொண்டிருந்தார். யார் நடிகர்கள் என்று கேட்டோம். முரளியோட பையனும் அரவான் ஹீரோயினும் என்ற பதில் கிடைத்தது. படத்தின் பெயர் என்ன? என்றேன். ’பரதேசி’ என்று உங்களைத் திட்டும் பாவனையில் சொன்னான் ஒருவன். படத்தின் இயக்குநர் யார் என்றதற்குப் ‘பாலா’ என்றார்கள். சாலையில் சேலையை விரித்து வைத்துக் கந்தலாக்கிக்கொண்டிருந்ததற்கான காரணம் எனக்குக் கிடைத்துவிட்டது. பாலாவைச் சந்திக்கலாமா என்று ஓர் எண்ணம் தோன்றியது. புத்தகக் கண்காட்சியில் சுரேஷ் கண்ணனுடன் பாலா வந்தபோது ‘உங்களைப் பற்றி பாலுமகேந்திரா சார் நிறைய சொல்லியிருக்கார்’ என்று அவர் என்னோடு உரையாடிய ஞாபகம் வந்தது. வேண்டவே வேண்டாம்…. தன் பட ஷூட்டிங்கில் அதன் டைரக்டர் ஒரு மசை நாயைப்போல் காணப்படுவான் என்று என் ஞானம் சொல்லியதால் அப்படியே எஸ்கேப்.



மூணாறு போய்ச் சேர்ந்ததும் கிழவி கெட்ட வார்த்தை பேசத் துவங்கியதுபோல் அத்தனை மழை. அந்த மழை ஓர் இரண்டு மணி நேரம் எங்களை ஒரு தாழ்வாரத்தில் கட்டிப் போட்டுவிட்டது. சாலைகள் எல்லாம் நசுங்கிப் பிதுங்கும் வண்ணம் ஒரே வாகன நெரிசல். கேரள மஞ்சள் தோலர்களும் திருத்தமான மீசைக்காரர்களும் எங்கும் திரிகிறார்கள் என்றாலும் தமிழுக்குக் குறையில்லாத ஊர் மூணாறு. அந்தக் கருப்பு ஆட்டோக்களும் ஜீப்புகளும் ஆட்களைப் பிதுங்கப் பிதுங்க அள்ளிப்போட்டுக்கொண்டு எந்தப் பள்ளத்திலும் விழாமல் பாய்கின்ற இலாகவத்திற்கு எதையும் ஈடாகத் தரலாம்.

திரும்பி வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. வழியில் புலியோ யானையோ சாலையின் குறுக்கே நின்றால் என்ன செய்வது என்ற அச்சம் வேறு. நல்லவேளை ஒரே ஒரு காட்டுப் பன்றி மட்டும் குறுக்கிட்டு ஓடியது. 

Wednesday, May 2, 2012

தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் - ஆபாவாணன்


ஆபாவாணன்
அகன்ற திரையில் தோன்றிய சுடர்
மகுடேசுவரன்



திரைப்படத்திற்குப் பாடல் எழுதவேண்டும் என்ற விருப்பம் கவிதையெழுதப் பிள்ளையார் சுழியிட்ட எவருக்கும் இயல்பாக எழும் உணர்ச்சிதான். இங்கே பலருடைய கவிதைக் கூருணர்வுகள் முதலில் விழித்து எழுவதே திரைப்படப்பாடல்கள் வழியாகத்தான் என்பது நம்முடைய சமூக எதார்த்தம். அந்த உணர்ச்சி மேலீட்டால் திரைப்படத் தயாரிப்பு உலகுக்குள் நுழைந்து வெல்லவேண்டும் என்று தத்தம் முயற்சியைத் துவங்கியவர்களே அநேகர். 

‘நான்  கண்மாய்க்கரையில் அமர்ந்திருக்க, ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு என்னும் பாட்டொலி எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும். அதைக் கேட்டுவிட்ட பிறகு ஒரு நிமிடம் கூட என்னால் என் ஊரில் இருக்கமுடியவில்லை. திரைத்துறையை நோக்கி ஓடி வந்தேன்என்று இயக்குநர் சீமான் பேசியதை ஒருமுறை கேட்டிருக்கிறேன். பாட்டெழுதுவது என்னும் முயற்சியை முன்னிட்டு இங்கே வந்து அலைந்தவர்கள் பிறகு திரைத்துறையின் வெவ்வேறு துறைகளுக்குள்ளும் நுழைந்து வேறு வேறு ஆளாகிவிடுகின்றனர். 

அண்மையில் சிறந்த குணச்சித்திர நடிகருக்காக தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமைய்யா பாடல் எழுதுவதற்காக வந்தவர்தான். நஞ்சுபுரம் பாடல் வெளியீட்டு விழாவில் நான் சந்தித்துப் பேசிய நடிகர் அமரசிகாமணி தாமும் ஒரு கவிஞர்தாம் என்றார். கவிஞர் என்று சொல்லிக்கொள்வதே தமக்கு உண்மையான பெருமை என்றார். இங்குள்ள எத்தனையோ பட முதலாளிகள் முதல் விளக்குத் தொழிலாளிகள் வரை, பாடல் எழுதுவதற்காகவே தம் பயணத்தை மேற்கொண்டு பிறகு தடம் மாறித் தம் ஜீவனத்தைத் திரையுலகின் ஏதோ ஒரு துறையில் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓர் இயக்குநராவது என்று திரையுலகுக்குள் திரிந்து பிறகு ‘இந்த இருக்கை கொஞ்சம் காலியாக இருக்கும் போலுள்ளதே’ என்று பாடல் எழுதத் துவங்கியவர்களே தற்காலத்திய பாடலாசிரியர்கள். அந்த இயக்குநர் புத்திதான் தமிழைப் பலிபோட்டு ஹிட்டுக்காக எந்த எல்லைக்கும் வெட்கமின்றி இறங்கக்கூடிய மனத்தை அவர்களுக்குத் தந்துவிட்டிருக்கிறது. அவர்களால் அதிகபட்சம் காட்சிரூபமான ஒரு வரியை உருவாக்க முடிகிறதேயன்றி மொழிச்சாதனை நிகழ்த்தப்பட்ட சிந்தனைப் பாய்ச்சலுள்ள புத்தெழிலான ஒருவரியைத் தவறியும்கூட இயற்ற முடிவதில்லை. மேலும், இவர்களுக்குப் பாடல் எழுதுவதெல்லாம் ஒரு சப்பை மேட்டர். தம் கூடாநட்புகள் மற்றும் கூழைக்கும்பிடுகள் வழியாக ஹீரோவாகிப் பவுடர் போட்டுக்கொண்டு நாயகியின் கூந்தல் மணத்தை முகர்ந்தபடி சுவரொட்டிகளில் காட்சிப்படவே துடித்துக்கொண்டிருக்கிறார்கள். தன்னைக் கவிஞன் என்று பொதுத்தளத்தில் அறிவித்துக்கொள்பவன், தன் சொல்லும் செயலும் நடத்தையும் வாய்கூறும் ஒற்றைக் கருத்தும் நிகரற்ற பண்புடைமையோடும் வழிகாட்டும் பாங்கோடும் இருக்கவேண்டும் என்பதைக் கைக்கொள்ளவேண்டாவா ? இல்லை, இவற்றை எதிர்பார்க்கும் நாம்தாம் ஏமாளிகளா ?

திரையுலகைப் புரட்டிப் போட்ட வெற்றிகள் எத்தனையோ அதன் வரலாற்றுப் பக்கங்களில் காணப்படுகின்றன. எங்கிருந்தோ வந்து இணையில்லாத சாதனையை நிகழ்த்திவிட்டு இன்று அதன் சுவடுகூடத் தெரியாமல் ஒதுங்கியிருப்பவர்கள் ஓராயிரத்திற்கும் மேலிருக்கக் கூடும். இவர்களில் பலரும் திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களாக அதன் கலாபூர்வமான பங்களிப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு சாதித்தவர்களாக இருப்பர். ஆனால், அதன் வர்த்தகக் கோட்டைக்குள் தனிப்பெரும் ஆற்றலுடன் நுழைந்து அதுவரை இருந்த ஜாம்பவான்களை விழிவிரியப் பார்க்க வைத்தவர்கள் மிகச் சிலரே.

எந்த வாணிகமானாலும் சரி, அது வரலாற்று அறிவோடும் அனுபவத் தீர்க்கத்தோடும் உரிய பக்கபலத்தோடும் முயன்றால் மட்டுமே வெற்றியாகக் கனியக்கூடியது. வர்த்தக முன்னோடிகளுக்கு இணையான வெற்றியைப் புதிதாக நுழைந்தவர்கள் பெற்றுவிடுவது என்பது திரைத்துறையைப் பொறுத்தவரையில் இன்னும் கடினமானது. புதியவர்கள் அத்தகையவொரு உடைப்பை நிகழ்த்திவிட்டால் அதுவரை கோலோச்சியிருந்தவர்கள் செல்லுபடியாகாமல் ஒதுங்கவேண்டியிருக்கும் என்பதால் மூத்தவர்கள் அவர்களை ஊக்குவதில், ஏற்றிவிடுவதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். இன்றும் அந்நிலையில் எவ்வொரு மாற்றமுமில்லை. அப்படிப்பட்ட சூழல் நிலவிய காலத்தில், திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையைப் பயின்று, ஒரு திரைப்படத்தை நண்பர்களோடு இணைந்து உருவாக்கி அதற்காக வருடக்கணக்கில் தணிக்கைப் பிரச்சனைகளோடு போராடி, பிறகு ஒருவழியாகப் படத்தை வெளியிட்டு பெரிய வெற்றியை ஈட்டிக்காட்டியவர் ஆபாவாணன். அந்தப் படம் ஊமை விழிகள்.   


கொங்கு நாட்டு மாவட்டமான ஈரோட்டை அடுத்த குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஆபாவாணன். ஆறுமுகம், பாவாயி என்கிற அவர்தம் பெற்றோரின் முதலிரண்டு எழுத்துகளைச் சேர்த்துத் தம் பெயரை அமைத்துக்கொண்டவர். இது ஆபாவாணன் தம் பெயர்க்காரணமாகக் கூறியது. தமிழ் வழக்குப்படி தந்தை பெயரை முதலாகக் கொள்வதில்லையே, தாய் பெயரைத் தானே முதலாகக் கொள்ளவேண்டும் (‘நாரதரே... அம்மையப்பன் என்றுதானே சொல்கிறோம் ! அப்பன் அம்மை என்றா சொல்கிறோம் ?) என்று யாராவது கேட்டால் அதற்கும் என்னிடம் ஒரு விளக்கமுண்டு. ஆ என்றால் பசு. பா என்றால் பாடல். பசுவின் பாடல் என்ன ? அம்மா என்பதே பசுவின் பாடல். ஆபாவாணன் என்றால் அம்மாவின் அன்பன் என்றே பொருள் கொள்ளலாம். அவரின் பெயர்ப்புனைவே இனிய தமிழ் விளையாட்டுதான்.   

ஏற்கனவே ராஜராஜசோழன் போன்ற சினிமாஸ்கோப் படங்கள் வந்திருந்தாலும் ஊமைவிழிகள் என்னும் அவரின் சினிமாஸ்கோப் படமே தமிழ்த்திரையின் சதுரச் சட்டகத்தைச் செவ்வகச் சட்டகமாக்கியது. இந்த மாற்றம் ஒற்றை வரியில் சொல்லிச் சென்றுவிடக்கூடிய சாதாரண மாற்றமன்று. தமிழ்த் திரை வரலாற்றை ஊமை விழிகளுக்கு முன், ஊமை விழிகளுக்குப் பின் எனப் பகுப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.

நம் படுகிடையான இரட்டைக் கண்களுக்கு உண்மையான பிரம்மாண்டமான அகன்ற காட்சிகள் காணக் கிடைத்தது ஆபாவாணனால்தான். வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சினிமாஸ்கோப் காட்சிகள் பார்ப்போரைச் சிலிர்ப்பூட்டின. சினிமாஸ்கோப்பில் வெளியான அகல்திரைக் காட்சிகள் பார்வையாளனைத் தம் நிகழ்த்துவெளிக்குள் உறிஞ்சி இழுத்து நிறுத்தி அதீத அனுபவத்தைத் தரும் புதிய திரை வகைமையைத் தோற்றுவித்தன. அந்தக் காலங்களில் ‘திருட்டு வீடியோ கேசட்’ என்ற துன்பத்தில் உழன்ற திரைத்துறையை அகல்திரைப்படங்களே மீட்டன. சதுரக் காட்சித்திரையுள்ள தொலைக்காட்சிப் பெட்டி இயல்பாகவே மற்ற திரைப்படங்களைக் காட்டியதுபோல் அகல்திரைப் படங்களைக் காட்ட முடியாமல் பாதித்திரையளவுக்கே காட்டி நின்றது. அது மக்களைக் கவரவில்லையாதலால் மீண்டும் திரையரங்குகள் நிரம்பி வழிந்தன.


1985-இல் வெளியான ஊமை விழிகளைக் கண்டதும் உடனே திரையுலகம் சினிமாஸ்கோப் என்னும் அகல்திரைத் தொழில்நுட்பத்திற்குப் பாய்ந்து மாறிவிடவில்லை. ஏனென்றால், அதுவரை சதுரச் சட்டகத்துக்குள்ளாக சிந்தித்துக்கொண்டிருந்த சீனியர் இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் செவ்வகச் சட்டகத்துக்குக் காட்சியமைக்கும் தகுதியும் நாட்டமும் கொஞ்சமும் இல்லாதவர்களே. அவர்களால் சினிமாஸ்கோப்பில் சிந்திக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. சினிமாஸ்கோப் வருகையால்தான் பாக்யராஜ் என்னும் துலக்கமான திரைக்கதைக் கலைஞர் தம் சந்தை மதிப்பிழந்தார் என்பது என் அசைக்க முடியாத கணிப்பு. மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் ஆகியவற்றில் பெற்ற புகழைக் காட்டிலும் ரோஜா, பம்பாய் போன்ற படங்களால் பெற்று, மணிரத்னம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதற்கும் சினிமாஸ்கோப்பே காரணம்.

ஊமைவிழிகளுக்குப் பின்பும்கூட, முடிந்தவரை பெரிய நிறுவனங்களின் படங்களும் பெரிய நட்சத்திரங்களின் படங்களும் சதுரச் சட்டகத்திற்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தன. உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் படங்கள் கூட 1992-இல் வெளியான தர்மதுரை வரை சதுரப்படங்களாகவே வந்தன. தளபதி என்ற படத்திலிருந்துதான் ரஜினிகாந்தின் தமிழ்ப்படங்கள் அகல்திரைப் படங்களாகின்றன (அதற்கும் முன்பாக நாட்டுக்கொரு நல்லவன் என்ற பெயரில் மொழிமாற்றமான கன்னடப்படம் மற்றும் சில இந்திப் படங்கள்). 

அதேவேளையில், பாலுமகேந்திரா போன்ற மரபான திரைக்கலை மன்னர்கள் சதுரச் சட்டகத்தின்மீதே அளப்பரிய விருப்பம் கொண்டிருந்தனர். சினிமாவிற்குரிய உச்ச பட்சக் கலாரூபமான காட்சிச் சட்டகம் என்பது சதுரவடிவச் சட்டகமே, அதில் கருப்பு வெள்ளைக் காட்சிகளே இன்னும் வலிமையானவை – இதுவே பாலுமகேந்திராவின் இலக்கணம். அவர் அகன்ற திரைப் படங்களே இயல்பாகிப் போன காலத்திலும் ‘ஜூலி கணபதி என்ற சதுரப் படத்தை எடுத்தார். பிறகுதான் தம் ஒரே சினிமாஸ்கோப் படமான ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தை உருவாக்கினார். பாலுமகேந்திராவோடு நான் இது குறித்து உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னது இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. ‘நானும் முடிஞ்ச வரைக்கும் இழுத்துப் பார்த்தேன் மகுடேசுவரன். அப்புறம் நானும் விட்டுவிட வேண்டியாதாப் போச்சு’.



திரைக்கலையில் நகைச்சுவை, சமூகச் சித்தரிப்பு, குடும்ப நிகழ்வுகள், என எதையும் வலிமையோடு காட்சிப்படுத்த முடியும் என்றாலும் இன்னும் நெருக்கமான மிகத் தோதான வகைமை திரில்லர் எனப்படும் மிரட்சிப் படங்களே. அதற்கு அடுத்த இடம் காதல் வகைமைப் படங்களுக்கு.

ஆபாவாணன் தம் முதல் படத்தை திரில்லர் வகையில் ஆக்கியதே அவரது தெளிவுக்குச் சான்று. பிறகு தமிழ்த் திரையரங்குகள் எத்தகைய படங்களுக்காக மக்கள் திரளால் நிரம்பி வழிகிறது என்பதைத் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திரையரங்கு உரிமையாளர்களைச் சந்தித்து ஆய்வு செய்து தெளிவு பெற்றதாகச் சொல்கிறார். அவர் திரைத்துறையில் நுழைந்த காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் டி. ராஜேந்தரின் படங்கள் எல்லாப் பிரிவு அரங்குகளிலும் கூட்ட நெரிசலால் திணறுகின்றன என்பதைக் கண்டறிந்தார். அதைத்தவிர எம்.ஜி.ஆரின் திரைப்பட மறுவெளியீடுகளுக்கு அப்போதும் பெரும் வரவேற்பு இருந்ததாம். ஆகவே, தம் பிற்காலத்திய படங்களை ரஜினிகாந்த, டி. ராஜேந்தர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்கள் கொண்டிருந்த உள்ளடக்கங்களோடு உருவாக்கினார். அப்படி அவர் செய்த படம்தான் உழவன் மகன். வெற்றி பெறவேண்டும் என்று தம் முனைப்பைச் செலுத்தியதால் அவர் அதைப் பெறமுடியாத திசையில் பிறழ்ந்து சென்று விட்டார் எனக் கருத இடமுண்டு.



ஆபாவாணன் வருகையால் நிகழ்ந்த இன்னொரு நிரூபணம் மிக முக்கியமானது. எண்பதுகளில் ஒருவர் திரைத்துறையில் கர்த்தாவாக விரும்பினால் ஒன்று அவர் திரைப்புள்ளி எவருடைய நண்பராகவோ உறவாக இருந்தால்தான் நுழையவே முடியும். எத்தனை இலட்சங்களைக் கொட்டியிறைக்கக் கூடியவராக இருந்தாலும் அத்தொழிலை அடிமுதல் முடிவரை கற்றுத்தர ஒருவரும் முன்வரமாட்டார்கள். நாடகத்திலிருந்தவர்கள் வந்தாலும் சிலரைத் தவிர மற்றவர்கள் தெப்புத் தேறி திரைப்படத்துறையோடு தாக்குப் பிடிக்கமுடியாமல் திணறினார்கள். அப்படியில்லாதவர்கள் திரைத்துறையில் நுழைய ஒரே வழிதான் இருந்தது. அது காலை முதல் மாலை அந்தத் திரைப்புள்ளியின் வீட்டு வாசலிலோ அலுவலக வாசலிலோ பரிதாபமாகத் தவங்கிடப்பது. அப்படி மாதக் கணக்கில், ஏன் வருடக் கணக்கில் காத்திருந்தால் மட்டுமே அந்த மகானுபவரின் கருணைப் பார்வை படும். பிறகு அவர் போனால் போகிறது என்று தம் கடைப்பொடியாளாகச் சேர்த்துக் கொள்வார். அதற்கும் மேல் ஒருவர் கெட்டிக்காரர் என்றால்தான் தம் குருவின் அத்தனை கீழ்மைகளோடும் அனுசரித்துப் போய் திரைக்கலை விவகாரங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு எந்த நாகரீகத்திற்கும் உட்பட்டிராத ஒரு குருகுலப் படிப்பாகவே திரையுலக நுழைவு இருந்தது. திரைப்படக் கலையைக் கற்றுத் தரும் கல்லூரி இருப்பதுவும் அங்கிருந்து திறமையானவர்கள் உருவாக இயல்வதும் எட்டாக்கனியாக இருந்தது. அந்தச் சூழலில் திரைக்கலையைப் பயின்று, முயன்று வெல்லவும் முடியும் என்று ஊர் அதிரும்படி முழங்கி நிறுவியது ஆபாவாணன் குழுவினரின் நுழைவு. அந்தத் தொடக்கமே இன்று ஊர்தோறும் படப்பயிற்சி நிலையங்கள் முளைத்துப் பெருகியதற்கும் விசுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டத்தோடு தொலைக்காட்சி உருவாக்கங்களில் இளையவர்கள் புகுந்து விளையாடுவதற்கும் மூல ஊற்று. திரைத்துறை என்னும் இரும்புக் கோட்டையைத் தகர்த்து அதன் ஆக்கவினைகள் யாருக்கும் உரியவையே என்று ஆபாவாணன் நிறுவினார்.



என் ஊர் திரைப்படத்தைத் தவிர்த்து எந்த வெளிப்போக்குக்கும் வழியில்லாத ஊராகையால் நான் நிறையத் தமிழ்த் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்தவன். நான் பார்த்தவரையில் ஆபாவாணனின் ‘இணைந்த கைகள்’ என்ற திரைப்படம் வெளியானபோது திரண்ட ஜனக்கூட்டத்தைப் போல் இன்னொரு கூட்டத்தை நான் இன்றுவரை காணவில்லை. கோயம்புத்தூரில் அந்தத் திரைப்படத்திற்காகத் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது.

ஆபாவாணன் தாம் தோல்வி முகத்தில் இருந்தபோது இறுதியாக உருவாக்கிய திரைப்படம் ‘கறுப்பு ரோஜா’. தமிழ்த்திரையரங்குகள் இன்று டிடிஎஸ் என்னும் ஒலிப்புரட்சியால் அலறுகின்றனவே, அந்தத் தொழில்நுட்பத்தை முதலில் தம் படமான கறுப்பு ரோஜாவின் மூலமாகக் கொணர்ந்தவரும் அவரே.

இதுவரை இக்கட்டுரையின் பொருளுக்கு வெளியே அதிகம் பகர்ந்து சென்றுவிட்டேன் என்றாலும் அவை ஆபாவாணனின் சாதனைப் பட்டியலாக எங்கும் பதிவு செய்யப்படாதிருந்ததால் முக்கியத்துவம் கருதிச் சொல்லவேண்டியதாயிற்று. ஒரு பாடலாசியராகவும் ஆபாவாணன் மிகவும் மதிக்கத்தக்கவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஊமை விழிகளில் அவர் எழுதிய அத்தனை பாடல்களும் தேர்ந்த பாடலாசியரால் மட்டுமே இயற்ற வல்ல தரத்தோடு இடம்பெற்றன. அவர் தயாரித்த படங்கள் அனைத்திலும் (செந்தூரப்பூவே தவிர்த்து) அவர் எல்லாப் பாடல்களையும் எழுதினார். எந்தப் பாடலும் தகுதிப்பாடான தரத்திற்கு வெளியில் இல்லை. அவர் கண்டுபிடித்த இசையமைப்பாளர்கள் மனோஜ்-கியான் இசையில் அவர் எழுதிய எல்லாப் பாடல்களையும் இன்றும் விரும்பிக் கேட்கலாம்.

மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா ? பூமரத்து நிழலெடுத்துப் போர்வையாக்கி மூடவா ?...என்னும் சுகமான வரிகளைத் தமிழால் ஊறிக் கவிதையுணர்வால் பித்தடைந்து முதிர்ந்த கவிஞர் ஒருவரைத் தமக்குள் மறைத்து வைத்திருப்பவர்தான் எழுதமுடியும். ‘இதயத்தில் தோன்றும் காதல் நிலவே... உதயத்தை நீயேன் மறுத்துவிட்டாய் ?’ என்று கேள்வி எழுப்பவும் முடியும். ‘நிலைமாறும் உலகில்... நிலைக்கும் என்ற கனவில்...’ என்று எவ்வளவோ உயரத்தில் இருந்து ஒரு பாடலின் முதல் வரியைத் துவக்க முடியும். அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்த் தாலாட்டு’ என்று உள்ளத்தின் பசிக்கு மட்டுமே உணவாகக் கூடிய சொற்றொடர்களை அமைக்க முடியும். ஒரு தயாரிப்பாளராக, ஒரு திரைவர்த்தகத் தொடரோட்டத்தில் வென்றவராக, யாருக்கும் தம் முகத்தைக் கூடக் காட்டியிராத எளியவராக இருந்த ஆபாவாணன் இயற்றிய இப்பாடல்கள் எனக்குப் பெருத்த ஆச்சரியத்தையும் அவர்மீது அளப்பரிய மரியாதையையும் தோற்றுவிக்கின்றன.



தோல்வியில் இழப்பில் கையறுநிலையில் கலங்கும் மனித மனத்தை ஆறுதல்படுத்தி ஆற்றுப் படுத்தும் வல்லமை நிச்சயம் இசைப்பாடலுக்கு உண்டு. இந்த வகைமைப் பாடல்களில் கண்ணதாசன் இயற்றிய ‘மயக்கமா கலக்கமா ?’ என்னும் பாடலுக்கே முதலிடம் என்றாலும் அது ஆன்மீகத் தத்துவச் சகதியில் கொஞ்சம் அதிகமாகவே அழுந்தியிருக்கும்.  ஆனால் அந்தக் குழப்பம் எதுவுமில்லாமல் அதற்கு இணையான் இன்னொரு பாடல் உண்டென்றால் அது ஆபாவாணன் இயற்றிய ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..?’ என்னும் பாடல்தான். இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் மந்திரக் குரல் வேந்தர் என்பது அரிய சிறப்பு.  

தமிழ்த் திரைப்படப் பாடல் வரலாற்றில் ‘வெற்றி’ என்ற வார்த்தையில் துவங்கும் பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஆனால், தோல்வி என்ற சொல்லில் துவங்கும் பாடல் இதுவொன்றாகத்தான் இருக்க முடியும். தோல்வியிலிருந்து எழுந்து நகரும் இடம்தான் வெற்றி என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அந்தச் சொல்லில் தம் பாடலைத் துவக்குவதில் அவருக்குத் துளியும் தயக்கம் இருந்திருக்கவில்லை. 

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா ?

உடமையை இழந்தோம்
உரிமையை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா ?

உணர்வைக் கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?

விடியலுக்கில்லை தூரம்
விடியும் ! மனதில் இன்னும் ஏன் பாரம் ?

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ?

யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா ?

ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா ?

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

வாழ்வை சுமையென நினைத்துத்
தாயின் கனவை மிதிக்கலாமா ?

இந்தப் பாடலுக்குப் பொழிப்புரை எதுவும் தேவையிருக்காது. இதன் சொற்கள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் புதுப்புதுத் திறப்புகளைத் தோற்றுவிக்கட்டும்.