Monday, November 18, 2013



இந்திய அணி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்றிருந்தது. ஸ்ரீகாந்த் தலைமையேற்ற அந்த அணிதான் இதுவரை அமைந்ததிலேயே மட்டமான அணி. 

டெண்டுல்கர் என்கிற பதினாறு வயதுப்பையனும் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது அவர் டெண்டுல்கர்தான். சச்சின் என்பதெல்லாம் பிற்பாடு வந்த பழக்கம். 

மதியம் விடுமுறை என்றதால் நண்பர்களோடு பள்ளியைவிட்டு வெளியேறிய எங்கள் கூட்டம் அருகிலிருந்த சாலிடர் டிவி கடையைநோக்கி ஓடியது. அங்கே பாகிஸ்தானுடன் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடிக்கொண்டிருந்தது.

ஸ்ரீகாந்த் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை எல்லாம் காற்றில் துழாவிக்கொண்டிருந்தார். ஏழெட்டு ஓவர்களுக்குப் பிறகு ஒரு ஃபோர் அடிப்பதுதான் அப்போதைய மரபு. ஐம்பது ஓவர்களில் 190 ஓட்டங்கள் என்பதை இலக்காக்கினாலே ’துரத்துவது கடினம்’ என்பார்கள் வர்ணனையாளர்கள். அந்த மாதிரி இலக்கைத்தான் பாகிஸ்தான் அணி நிர்ணயித்திருந்தது.

இலக்கைத் துரத்திய இந்திய அணி அடுத்தடுத்து முன்வரிசை வீரர்களை இழந்தது. ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். ஐந்தாறு விக்கெட்டுகள் சாய்ந்திருந்ததால் சாலிடர் டிவி கடைமுன் கூடிய கூட்டம் கலையத் தொடங்கியது. நானும் கிளம்ப எத்தனிக்கும்போதுதான் நண்பன் என்னை நிறுத்தினான். ‘இருடா... டெண்டுல்கர்னு புது ஆளு. எப்படி ஆடறான்னு பார்த்துட்டுப் போவோம்’ என்றான்.

நம்பிக்கையில்லாமல் பார்த்தேன். பாகிஸ்தான் அணியில் அப்துல் காதிர் என்று ஒரு சுழற்பந்து வீச்சாளர். கிலுகிலுப்பை ஆட்டுவது மாதிரி பந்தை எறிவதற்கு முன் ஒரு சுழற்று சுழற்றி வடகிழக்கிலிருந்து தென்மேற்காகப்போய்ப் பின் பந்து வீசுவார். டெண்டுல்கர் என்ற அந்த சின்ன பையன் அவர் பந்துவீச்சை எதிர்கொள்ள வந்து நிற்கிறார்.

வெற்றிக்கு அருகில் இருக்கும்போது பாகிஸ்தான் வீரர்கள் முகத்தில் ஓர் அலட்சிய பாவனை அப்பிக்கொள்ளும். மைதானத்திற்குள் சக வீரர்களுடன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்துப் பேசிக்கொள்வார்கள். அப்படி ஓர் அளவளாவலை முடித்துக்கொண்டு பந்து வீச வந்த அப்துல் காதிர் அந்தச் சின்ன பையனுக்குப் பந்து வீசத் தொடங்கினார்.

பந்து வீசிய அப்துல் காதிர் வானத்தைப் பார்த்தது மட்டும்தான் தெரிந்தது. ஆட்டம் நடந்தது பாகிஸ்தான் மண்ணில் என்பதால் பார்வையாளர் தரப்பில் திடுமென மைதானக் கூச்சல் அடங்கியது. நடுவர் ஆறு என்று இருகை உயர்த்தினார். கடைமுன் தொங்கிய முகங்களோடு பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. ‘பரவால்லயே. காதிர் பால்ல சிக்ஸ் அடிச்சிட்டாம்பா’ என்றார் ஒருவர்.

‘ஏதோ ஞாபகத்தில அந்தப் பந்தைப் போட்டுட்டேன்’ என்கிற தோரணையோடு அடுத்த பந்தை வீசினார் அப்துல் காதிர். டெண்டுல்கர் என்னும் அந்த இளம்வீரர் இறங்கி வீசினார் பாருங்கள், அதுவும் ஆறு. அடுத்தடுத்த பந்துகளும் ஆறும் நான்கும். இப்படி அந்த ஓவரில் சுமார் இருபத்தைந்து ரன்களைக் குவித்தார் டெண்டுல்கர்.

அப்போதெல்லாம் ஆட்டம் தொடங்கி எட்டாவது ஓவரில்தான் இருபத்தைந்து ரன்கள் என்பது அணியின் ஸ்கோராக இருக்கும். டெண்டுல்கர் ஒரே ஓவரில் வான வேடிக்கை காட்டியதால் இந்தியா ஜெயித்துவிடுமோ என்ற நம்பிக்கை தோன்றியது. அந்தப் போட்டியில் இந்தியா தோற்றது என்றாலும் டெண்டுல்கர் என்ற அந்தப் பெயர் காற்றின் திசையெங்கும் பரவத் தொடங்கியது.

'காதிர் வீசிய சுழற்பந்தில் டெண்டுல்கர் விட்ட முதல்சிக்ஸை லைவாகப் பார்த்த’ பெருமைக்குரியவர்களில் நானும் ஒருவன். அன்றிலிருந்து இரண்டாயிரத்து ஐந்துவரை டெண்டுல்கர் ஆடிய அனைத்து ஆட்டங்களையும் கண்கொட்டாமல் பார்த்திருக்கிறேன். அவர் ஆட்டங்களைக் கண்ணுற்ற தருணங்கள் நம் ரசனையின் மதிப்பான பொழுதுகள்.

இனி கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்கு அந்தப் பழைய மயக்கத்தை மக்கள் காட்டமாட்டார்கள். சச்சின் டெண்டுல்கரைப் போன்ற இன்னொருவர் அந்த வெற்றிடத்தை நிரப்பப் போவதும் இல்லை.

டெண்டுல்கர் விரைவில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்றுணர்ந்திருந்ததால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஆடிய ஆட்டங்கள் எதையும் பார்க்கவில்லை. அவர்பற்றிய செய்திகளிலும் நான் ஈடுபாடு காட்டவில்லை. அப்படி விலக்கிக்கொண்டதால்தான் இந்தப் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.

அறியாச் சிறுவனாக சர்வதேச அரங்கில் நுழைந்த அந்தச் சிறிய வீரர் எத்தனை மைதானங்களை, எத்தனை விளையாட்டுத் தருணங்களை, எத்தனை பந்தெறிவுகளை, எத்தனை ஏற்ற இறக்கங்களை, எத்தனை சவால்களை, எத்தனை வெற்றி தோல்விகளை - பார்த்திருப்பார்...! அந்தக் களத்திலிருந்து வெளியேறி வெளியே நிற்கவேண்டிய இந்தக் கணம் யாராலும் எளிதில் கடந்துபோகக் கூடியதன்று. அந்த மனத்திடத்தை அவர் பெறவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.