Friday, September 9, 2016

கவிஞர். மகுடேசுவரன் - நேர்காணல்

- வெயிலான் & மழைக்காதலன்



திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளியில் பயின்ற தமிழ் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்வதாய் சொல்லும் கவிஞர். திரு.மகுடேசுவரன், நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான கவிஞர். இலக்கியம், கவிதை மட்டுமன்றி, தமது தேடல்கள் மூலம் பலதுறைகள் குறித்தும் கருத்துச் செறிவுடன் பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர்.  தற்போது, முகநூலில் ஆயிரக்கணக்கானோர் பின் தொடரும் புகழும் கொண்டவர்.
  • தமிழ் மீதான அளவு கடந்த பற்றுக்கு காரணம் என்ன?
திருப்பூரில் உள்ள நஞ்சப்பா பள்ளியின் தமிழ் ஆசிரியர்களிடம் பயின்றது தான் தமிழ் மீதான பற்றுக்கு காரணம்.அதிலும், மரியாதைக்குரிய கதிர்வேல் ஐயா பள்ளியிறுதியில் கற்பித்த எளிமையான, தனித்துவமான கற்பித்தல் முறையால், தமிழ் மீது அளப்பறிய ஆர்வம் ஏற்பட்டது.

  • கவிதைகள் எழுதத் தொடங்கியது எப்போது?
இளமையிலேயே வாசிப்பு அனுபவம் உண்டு. அதற்கு வசதியாக பள்ளியின் அருகிலேயே நூலகம் இருந்தது. கோகுலம், பூந்தளிர் உள்ளிட்ட சிறுவர் பத்திரிகைகளில் மரபுக் கவிதைகள் பல எழுதியிருக்கிறேன். நவீன இலக்கியம் பரிச்சயமானவுடன் 1992 -இல் கணையாழியில் கவிதைகள் பிரசுரமாயின. தொடர்ச்சியாக பிற பத்திரிகைகளிலும் என்னுடைய கவிதைகள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தன. இது வரை 11 கவிதைத் தொகுதிகள், 5 கட்டுரைத் தொகுப்புகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.

  • தங்களின் தொழில் மற்றும் அது தொடர்பான அனுபவம்?
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஏற்றுமதி ஆலோசனை நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறேன். திருப்பூரின் பொற்காலமான தொண்ணூறுகளில், குறைவான நிர்வாகப் பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருந்த சிறு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அரசு தொடர்பான ஆவணப் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம்.
கோட்டா (Quota) முறையிலான ஏற்றுமதியும் நடைமுறையில் இருந்ததால், ஆலோசனை நிறுவனங்களின் தேவையும் அதிகம் இருந்தது. திருப்பூரின் தலையாய பிரச்சனையான சாயக்கழிவுகள் பிரச்சனைக்குப் பின், எங்களின் தொழிலுக்கும் இறங்குமுகம்தான்.

  • சாயக்கழிவு, இப்படி பூதாகரமான பிரச்சனையாக மாறும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கவில்லையா? வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்தார்களா?

சாயப்பட்டறைச் சங்கங்கள் சாயக்கழிவு தொடர்பான வழக்குகளை சந்தித்துக் கொண்டு தான் இருந்தார்கள். திருப்பூர் ஒரு தொழில் நகரம்.பின்னலாடைத் தொழில் மாபெரும் வளர்ச்சியடைந்த நிலையில், இந்தத் தொழிலை நம்பி தமிழ்நாடே வேலை நாடி இங்கு வந்தது. மற்ற தொழில்களைப் போல இங்கும் கழிவுகள் உருவாகத்தான் செய்யும். அது போலவே மிகுந்த வளர்ச்சி பெற்ற இந்தத் தொழிலிலும் கழிவுப் பொருள்கள் உருவாகின்றன. முதலில் பள்ளங்களில் கழிவுநீர் வடிந்து, ஆற்றில் ஓடி, அணைகளில் சேர்ந்ததால் நிலத்தடி நீர் மாசுபட்டது. இதற்கான தீர்வை அரசாங்கம்தான் செய்ய வேண்டும்.  அரசு ஏன் கைவிட்டது? என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை.  நிலத்தடி நீர் மாசுபாட்டால் ஏற்பட்ட அழுத்தங்களில், விவசாயிகளின் அழுத்தமும் முக்கியமான ஒன்று. அரசு சரியான நேரத்தில் உகந்த நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகியிருக்காது.  அனைத்தையும் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் வேடிக்கைதான் பார்த்தன. நிரந்தரத் தீர்வுக்கு முயலவில்லை.

  • திருப்பூரின் பல்வேறு சங்கங்கள் அவ்வப்போது ஏற்பட்ட சின்ன பிரச்சனைகளைச் சமாளிப்பதிலும், வழக்கைச் சந்திப்பதிலுமே ஈடுபட்டார்களே தவிர, தீர்வுகளை நோக்கி செயல்பட்டார்களா?
சின்ன சின்ன தீர்வுகளை முயன்று பார்த்தார்கள். சில முறைகள் மூலம் கழிவுகளை சுத்திகரிக்க முயன்றார்கள். அது தோல்வியில்தான் முடிந்தது. சாயக்கழிவுகளின் நச்சுத் தன்மையையாவது குறைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், சங்கங்களுக்கு வழக்குகளே மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது.




  • திருப்பூர் மண்ணின் தொழிலதிபர்களை விட, பிற ஊர்களிலிருந்து வந்து தொழில் தொடங்கியவர்கள் வெற்றி பெற முடியாது என்று ஒரு கருத்து நிலவுகிறதே,  அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
திருப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர்களுக்கு ஒரு முன்வாய்ப்பு (அட்வான்டேஜ்) இருப்பது இயற்கைதான். பின்னலாடை சார்தொழில்களிலும், தங்கள் நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவுகளிலும் முக்கியமான பொறுப்புகளில் தமது உறவுக்காரர்களை நியமிப்பார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் முட்டுக் கொடுத்து, தோள் கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்துக் கொண்டுவிடுவார்கள். நகர் நாடி பிற ஊர்களில் இருந்து வந்து, பணியாளர்களாகச் சேர்ந்து, தொழில் கற்று, பின் தனியாக தொழில் தொடங்குபவர்கள் அடுத்த வகையினர். தொழிலாளர்களாகச் சேர்பவர்கள், அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறி, விரைவில் முதலாளிகளாக ஆகும் சாத்தியம் திருப்பூரில் மட்டுமே உண்டு. இந்தத் தொழிலதிபர்களும் அடிப்படையிலிருந்து தொழில் கற்று வந்ததால், நல்ல முறையிலேயே தொழில் நடத்தி வருகிறார்கள். ஒரு சிலர் சறுக்கியிருக்கலாம். அதுவும் நிகழக்கூடியதே.

  • நீங்கள் ஒரு ஏற்றுமதி ஆலோசகராகவும் இருப்பதால், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?
புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள், நல்ல பயிற்சி, தொடர்புகள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். வியாபாரத்தினுடைய அனைத்து நுணுக்கங்களையும் கற்று வரவேண்டும். இப்போது, தொழிலாளர்களின் கிடைப்பு மிகவும் அரிதாக இருக்கிறது. கிடைத்த தொழிலாளர்களைத் தக்கவைப்பதும் சிரமமாக இருக்கிறது. மின்வெட்டு போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தொழில்சார்ந்த கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பாராத திசைகளிலிருந்து பல தடைகள் வரும். ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கும் திறமையும் வேண்டும். தொழில்வெற்றி என்பது தானாய்ப் பழுத்து மடியில் விழும் கனியா என்ன !

  • தங்கள் நிறுவனங்களில், நவீன முறைகளைப் புகுத்துவதால் ஏற்றுமதியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்களா?
இதற்குத்தான் தொண்ணூறுகளைத் திருப்பூரின் பொற்காலம் என்று சொல்கிறோம். அப்போது வீட்டின் ஒரு பகுதியிலேயே 4 தையல் இயந்திரங்களைக் கொண்டு, ஆயத்த ஆடைகள் தயாரித்து விற்பனை செய்து விட முடியும். காலப்போக்கில் சிறுதொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளாகி, மிகப்பெரும் ஆலைகளாக மாறியபின், கார்பரேட் முறையைப் பின்பற்றுவது, பாதுகாப்பு முறைகள், தரக்கட்டுப்பாடு போன்றவை மிக அவசியமாகின்றன. இந்த கார்பரேட் அழுத்தங்களைத் தாக்குப் பிடித்த ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கார்பரேட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிற சிறு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. அன்றேல் பெருநிறுவனத்தின் பணிக்கிளைபோல் ஆகிவிட்டன.

  • என்னதான் நவீன இயந்திரங்கள், கணினி மயம், நிர்வாக மாற்றங்கள் இருந்தாலும், இன்னமும் குறித்த நேரத்திற்குள் சரக்குகளைத் துறைமுகங்களுக்கு அனுப்ப முடிவதில்லையே ஏன்?
எப்பொழுதுமே நமக்கு, உற்பத்தியில் ஈடுபடுவதற்குப் போதிய அல்லது அளப்பரிய நேரம் தரப்படுவதில்லை. பின்னலாடை ஏற்றுமதி ஒரு பருவகால வியாபாரம். குளிராடைகள், கோடைகால ஆடைகள் இரண்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டு பருவங்களுக்கும் இடையே உள்ள நேரத்தில்தான் நமக்குப் பணி. இதனால் நமக்குக் குறுகிய அவகாசமேகிடைக்கிறது. இந்தக் காலப்போதாமை தான் திருப்பூரை எப்போதுமே அழுத்திக் கொண்டிருக்கிறது. எல்லாமே சரியாக இருந்தாலும், நடைமுறையில் எதிர்பாராத பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. தொழிலாளர் பற்றாக்குறை, மின்வெட்டு, நூல் விலையேற்றம் மற்றும் சார் தொழில்களில் தாமதம் போன்ற ஏதாவது ஒன்று காரணமாகி விடுகிறது.

  • ஏற்றுமதிக்கு அரசின் சலுகைக் குறைப்பு, ரத்து போன்ற சுமைகள் அதிகரிக்கும் வேளையில், வியாபார லாபத்தைக் குறைத்துக் கொண்டே போவது, இத்தொழிலின் வளர்ச்சிக்கு உகந்ததா?
இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னலாடைத் தொழிலில் உறுதியான வளர்ச்சி இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. இது உடுக்கை செய்யும் தொழில். உடைகளுக்கான தேவைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். இந்தியாவில் உள்ள மக்களுக்கான உள்ளாடைகள், ஆயத்த ஆடைகளைத் தயார் செய்தாலே தொழில் நீடித்திருக்கும் என்பது என் கருத்து.



  • திருப்பூரைத் தவிர, மற்ற ஊர்களில் தொடங்கிய பின்னலாடைத் தொழில் வளர்ச்சி அடையாததற்கான காரணம் என்ன?
திருப்பூர் ஒற்றைத் தொழில் நகரம். பின்னலாடைக்கான சார்தொழில்கள் திருப்பூரிலும், அதைச் சுற்றியும்தான் இருக்கின்றன. ஆதலால், பின்னலாடைத் தொழிலைத் திருப்பூரில் மட்டுமே வெற்றிகரமாகச் செய்ய முடியும். இதை விட்டு, வேறு ஊர்களுக்குச் சென்று பின்னலாடைத் தொழில் செய்வது, ஒரு சாகசக் கிளர்ச்சியை ஊட்டக்கூடுமே ஒழிய, வெற்றி தராது.

  • திருப்பூரின் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாய் இருக்கின்றனவா?
நிச்சயமாகப் போதாது. இருபது வருடங்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றைக் கடக்க தரைப்பாலம் உட்பட இரு பாலங்கள்தான் இருந்தன. திருப்பூர் ஒரு மாவட்டத் தலைநகர், தனிப்பாராளுமன்றத் தொகுதி, வடக்கு, தெற்கு என இரு சட்டமன்றத் தொகுதிகள், மாநகராட்சி அந்தஸ்து போன்றவைகளைப் பெற்று பெருநகராகி இருக்கிறது. அதற்கேற்ற சாலை வசதிகளோ, மேம்பாலங்களோ, தரைப்பாலங்களோ இதர வசதிகளோ இல்லாமல் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. ஆறுகள், ஏரிகள் பாதுகாப்பு, கழிவுநீர் வாய்க்கால் வசதி, உள்கட்டமைப்பு வசதிகள், நல்ல மின்னழுத்தங்களுடன் கூடிய மின் இணைப்பு வசதி போன்ற பலவும் இந்நகருக்கு வேண்டியனவாய் இருக்கின்றன.

  • திருப்பூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் முன்பு என்னென்ன நீர்நிலைகள் எங்கெங்கு இருந்தன?

தவறாது பொழியும் மழையினால், சுற்றிலும் ஏராளமான நீர்நிலைகள் இருந்தன. நொய்யலாறு காட்டாறாகப் பாய்ந்து, அந்நியப் படையெடுப்புகளைத் தடுத்து நகருக்கு அரணாக விளங்கியது. ஊரைச் சுற்றிலும் ஏராளமான பெருங்குளங்கள் இருந்தன. குளத்துப்பாளையம் குளம், உதகையின் பின்புறமுள்ள அமைதிப் பள்ளத்தாக்கின் நீர்ப்பிடிப்பை கொண்டு வந்து சேர்க்கும் குளமாக இருந்திருக்கிறது. நீர்வழித்தடங்களை ஆராய்ந்தால் அது புலப்படும். பூம்புகார்ப் பகுதியில் இருக்கும் ஒரு ஏரி சுல்தான் பேட்டை தொடங்கி, பொழியும் மழை நீரை, சின்னகரை வழியாகக் கொண்டுவந்து சேர்த்துக்கொள்ளும் இடமாக இருந்தது. அந்த ஏரி நிரம்பி, மேவி ஜம்மனை ஆறாக நொய்யலில் கலந்தது. பள்ளி செல்லும்போது அந்த ஏரி வழியாகச் செல்வேன். ஜம்மனை ஆற்றில் இரண்டு கரையும் தேக்கி வெள்ளம் போனதையும் பார்த்திருக்கிறேன். இப்படி சுற்றிலும் நல்ல நீர் நிலைகள் நிறைந்து, நல்ல நிலத்தடி நீர் கிடைக்கக் கூடிய ஊராக இருந்தது. இன்றைக்கும் கோவில்வழி பகுதியில் நிலத்தடி நீர், குடிநீராக உபயோகிக்கும் வகையில்தான் இருக்கிறது. சாயப்பட்டறைகளின் பெருவளர்ச்சிக்குப் பின் நீர் மாசுபட்டிருக்கிறது.


  • புதிய ஆட்சியர் அலுவலகம் கூட ஒரு நீர்நிலையின் மீது தான் கட்டப்பட்டு இருக்கிறது என ஒரு முகநூலில் தகவலாக எழுதியிருந்தீர்கள், அது குறித்து?
பல்லடத்திலிருந்து, பொள்ளாச்சியை நோக்கிச் செல்லும்போது பார்த்தால், இடையில் ஒரு பெரும் கரிசல்காடு வரும். சுல்தான்பேட்டை வரை நீண்டு இருக்கும் அந்தக் கரிசல் காட்டில் இப்போது காற்றாலைகள் பெருகி விட்டன. ஒரு ஆரஞ்சுச் சுளை மாதிரியான அந்தக் கரிசல் பகுதி பொங்கலூர்வரை இருக்கும். அந்த மழையிலிருந்து, பல்லடத்தின் மேடான பூமலூர் போன்ற பகுதிகளில் பெய்யும் மழை முதற்கொண்டு, எல்லாம் திரண்டு, ஏதோவொரு நீர்க்கால்வாய் பிடித்துப் பிடித்து இரண்டு கால்வாயாக வருகின்றன. சின்ன கரையில் இருக்கும் பாலம் கூட அந்த நீர்வரத்துக்காகத்தான். சின்ன கரை ஓடை முருகம்பாளையம் வழியாக வந்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடத்துக்கு வந்து சேரும். அது முழுக்க நீர் நிறைந்த பகுதியாகத்தான் இருந்தது. அந்த ஏரி நிரம்பும் போது, பல்லடம் சாலையின் கரையில் நீர் தளும்பும். முன்பு ஒரு முறை வெள்ளம் வந்த போது, எல்.ஆர்.ஜி கல்லூரி முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தது. பல்லடம் சாலையின் மறுபுறமும் ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபமருகில் ஒரு பாறை அகழ்ந்த குளம் இருந்தது. இந்த ஏரி நிறைந்து, சந்தைப்பேட்டை வழியாக ஜம்மனை ஆறாக வந்து சேர்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக வறண்ட, தூர்ந்த நீர்நிலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களாக மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. பெரும்பாலான பேருந்து நிலையங்கள் நீர்நிலைகளின் மேலேயே அமைந்திருக்கின்றன. சென்னையில் பெய்த பெருமழைபோல் இங்கும் பெய்யும்போதுதான் இதன் பாதிப்பு நமக்குத் தெரியவரும். ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள ஏரிக்கு வரும் நீரை, நேரடியாக ஜம்மனை ஆற்றில் கலக்கும்படியான ஏற்பாடுகளை இப்போது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஆனால், ஒரு ஏரியைக் கொன்று, நம் போக்கில் நீரைத் திருப்புவது சரியான முறை கிடையாது. இப்படி நீர்த்தேக்கத்தை அடைக்கும் போது, நிலத்தடி நீர் குறையும் அபாயம் இருக்கிறது.

  • இதைத் தவிர மற்ற நீர் நிலைகள்?
அது போக, குளத்துப்பாளையம் ஏரி, சாமளாபுரம் நஞ்சராயன் குளம் இவையெல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கு நீர்வரத்து மிகவும் குறைவாகவே இருக்கிறது. பூண்டி கோவிலுக்குப் பின் வரும் ஓடை, நல்லாறு வழியாக வரும் நீர் தான் குளத்துப்பாளையம் குளத்தில் சேரும். அப்படிப் பூண்டியிலிருந்து வரும் ஓடைகள்தாம் பிரிட்ஜ்வே காலனியில் இருக்கும் இரு பாலங்களுக்கும் புகுந்து வெளியேறும். பெயரிலேயே பாலத்தின் வழி (ப்ரிட்ஜ்வே) என்றிருக்கிறது பாருங்கள். முதல் பாலத்தின் எதிரில், வாலிபாளையம் செல்லும் சாலையே ஓடைத்தடத்தில்தான் அமைந்துள்ளது. அந்த ஓடை தான் ஸ்ரீசக்தி தியேட்டர் அருகில் ஆற்றில் கலக்கிறது. ஓடைத்தடத்தில் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளால், அதன் அகலம் இப்போது மிகவும் குறுகி விட்டது.

  • திருப்பூரின் உடனடியாகத் தீர்க்கவேண்டிய பிரச்சனை என்று எதனைக் காண்கிறீர்கள்?

தொழிலாளர்களின் வினைபடு ஆற்றலை முழுமையாக மழுங்கடித்த மதுக்கடைகள்தாம் திருப்பூரை அழுத்திக்கொண்டிருக்கும் தலையாய பிரச்சனை. வாரத்தின் முதலிரண்டு நாள்கள் பணியாற்றினால் போதும் வாரம் முழுமைக்கும் குடிபோதையில் மூழ்கியிருக்கலாம் என்ற போக்கு தலைதூக்கியிருக்கிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் நேரந்தொடங்கி மூடும் நொடிவரை குடித்துத் தீர்க்கிறார்கள். புறநகர்க் கடைகளில் மதுக்கடையையொட்டிய நூறடிகளுக்குக் குடித்துக்கொண்டே இருப்பவர்களைத்தான் பார்க்க முடிகிறது. உழைப்பாற்றல் இழந்து நடைபிணங்களைப்போல் உலவும் குடிவெறியர்களிடம் இவ்வூர் சிக்கித் திணறுகிறது. வடநாட்டுத் தொழிலாளர்கள் படைபடையாய்க் குவிந்துவிட்டனர். இது பெரிய பண்பாட்டு நெருக்கடியாக மாறியிருக்கிறது.

  • திருப்பூரில், இலக்கியம் மற்றும் புத்தக வாசிப்பு ஆர்வம் எப்போது தொடங்கியது?
முன்பிருந்தே திருப்பூரானது தொழிற்சங்கங்கள் ஊன்றிப் பரவியிருக்கும் இடதுசாரி பூமி. இயல்பாகவே, தொழிற்சங்கங்கள் வாசிப்பை ஊக்குவிக்கும். இடதுசாரிக் கூட்டங்கள் பெருமளவில் சிறப்பாக நடக்கும் இடம். எப்போதுமே வாசிப்புக்கு இங்கே அதற்குரிய இடம் தரப்பட்டு வந்திருக்கிறது. எழுத்தாளர்கள். கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், யூமா வாசுகி, நான் மற்றும் இடதுசாரி இலக்கியங்கள் எழுதுபவர்கள் பலர் இங்கே தொண்ணூறுகளில் உருவானார்கள். சுப்ரபாரதிமணியன் வானம்பாடிகள் காலத்திலேயே எழுதத் தொடங்கியவர். அப்போது சில அமைப்புகளும் இருந்தன. கனவு இலக்கிய வட்டம், கே.பி.கே.செல்வராஜ் அவர்களின் முத்தமிழ்ச் சங்கம் ஆகியவை அடிக்கடி இலக்கியக் கூட்டங்கள் நடத்தியன. திருப்பூர்த் தமிழ்ச்சங்கம் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு வழங்க ஆரம்பித்தது. ஒரு சுமுகமான இலக்கியச் சூழல் நிலவியபடியே இருந்தது. திருப்பூரில் இருந்ததால்தான் எல்லா இலக்கியவாதிகளையும் இங்கேயே நேரில் பார்க்கக்கூடிய சூழல் வாய்த்தது.

  • எழுத்தாளர். சுஜாதாவுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவு குறித்து?
கணையாழியில் என் முதல் கவிதை வெளியானதில் இருந்து சுஜாதா என்னைத் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருந்தார். கணையாழி மற்றும் இதர பிரபல பத்திரிகைகளில் என்னைப் பற்றி அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தார். கூட்டங்களிலும் என்னை மேற்கோள் காட்டிப் பேசினார். புதிதாக கவிதை எழுதத் தொடங்கிய எனக்கு, அவருடைய தொடர்ந்த ஊக்கமும், அறிவுரைகளும்தான், கவிதைகளில் அடுத்தடுத்த நிலையை எட்டுவதற்கு உந்துதலாக இருந்தது.

  • சமூக வலைத்தளங்களில் கிடைத்திருக்கும் இத்தகைய வரவேற்பை எதிர்பார்த்தீர்களா?
இத்தகைய வரவேற்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. உங்களைப் போன்ற நண்பர்கள் சொல்லி ஐந்து வருடங்களுக்கு முன் வலைத்தள உலகுக்கு வந்தபோது, என் எழுத்துகளுக்குப் போதுமான எதிர்வினைகள் இல்லை. யார் படிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. 2012-இல் முகநூலில் எழுதத் தொடங்கிய பின்னர்தான் இணையத்தின் தாக்கம் புரிந்தது. என் எழுத்துகளைப் படிப்பவர்கள், பல்வேறு தரப்பினர், மிகவும் தேடல் உடையவர்கள், நமக்குக் கற்றுக் கொடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள், எழுதியதின் மறுபகுதியைப் புரிய வைக்கக் கூடியவர்கள் என அனைவரும் இருந்தார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் என் எழுத்துகளைப் படிக்கிறார்கள். என்னுடைய கடைசி ஐந்தாறு புத்தகங்கள், முகநூலில் எழுதி அதன்பின் தொகுக்கப்பட்டவைதாம்.



  • பிறமொழிச் சொற்கள் கலக்காமல், தனித்தமிழில் பேசுவது தற்போது சாத்தியமா?
நாம் சாதாரண உரையாடல்களில் பேரளவில் மிகுதியான தமிழ் சொற்களைத்தான் பயன்படுத்துகிறோம். பிறமொழிச் சொற்கலப்பு வடமொழியும், ஆங்கிலமும் தான். எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் கலந்திருக்கும்1200 வடமொழிச் சொற்களுக்கும் உகந்த தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டு விட்டன. பத்து வருடங்களுக்கு முன் பிரச்சாரம் என்று சொல்லி வந்ததை இப்போது பரப்புரை என்று சொல்கிறோம். பேச்சில் ஆங்கிலச் சொற்கள் உள்ளே ஏறிக்கொண்டிருப்பதை நாம் தடுத்தால் தனித்தமிழில் பேசுவது சாத்தியமே.தனித்தமிழுக்கான இடம் என்னவென்றால், தலைமுறை தலைமுறையாக இங்கே இருக்கும் மலையாளியோ, தெலுங்கரோ தத்தமது வீட்டில் அவர்களது தாய்மொழியைத்தான் பேசுகிறார்கள். அது போல, தமிழுக்கு எவ்வளவுதான் ஆபத்துகள் உருவாகினாலும், தமிழர்கள் தம் வீட்டில் தமிழில்தான் பேசுவார்கள். நாம் பேசுவது தனித்தமிழ் தான். நான்கு பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கும். அதற்கு நிகரான தமிழ்ச்சொல்லை இணைத்துப் பேசினால் போதும். நாம் ஒரு மோகத்தினால் ஆங்கிலத்தில் பேசுகிறோம். அனைவருக்குமே ஆங்கிலம் தெரியும் ஒரு நிலை வரும்போது, ஆங்கிலத்தின் மீது மோகம் இருக்காது. ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் இருக்காது. அந்த நிலை வரும்போது அனைவருமே தமிழில் தான் பேசுவார்கள். ஆகவே, தனித்தமிழ் சாத்தியம் தான்.

  • திருப்பூரில் இடதுசாரிகளின் பங்கு?
திருப்பூர் அரசியல்ரீதியாக இடதுசாரிகள் பலம்பெற்ற ஒரு தொழில் நகரம். பஞ்சாலைகள் நிரம்பிய பஞ்சு நகரமாக இருந்தபோது, ஆலைத் தொழிலாளர்கள் பெருமளவில் இடதுசாரி அமைப்புகளில் இருந்தார்கள். அப்போதிலிருந்து தொழிலாளர்களுக்குப் பக்கபலமாக நின்று உரிமைகளைப் பெற்றுத் தருவதிலிருந்து, அனைத்து தேவைகளுக்காகவும் இன்று வரையிலும் போராடிப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அரசியலைப் பொறுத்தவரை கோவை, திருப்பூர் இரு மாவட்டங்களுமே இடதுசாரி மாவட்டங்கள் தான். அவர்கள் நல்ல அரசியல் செல்வாக்குடனே இருக்கிறார்கள்.

  • பெயர்ச் சொற்களை அப்படியே தமிழ்படுத்துவது சரியா? (எடுத்துக்காட்டாக Facebook– முகநூல், Twitter – கீச்சு)
உலக அளவில் எம்மொழிச்சொற்கள் என்றாலும் அவற்றைப் பெயர்ச் சொல், வினைச்சொல் என்று இரண்டு வகைக்குள் அடக்கலாம். ஒரு மொழியின் வினைச்சொல்லை, இன்னொரு மொழிக்கு பொருள்கூறும்பொருட்டுத்தான் மாற்ற முடியும். உதாரணத்துக்கு Come – வா, Go – போ என்றால் தமிழ்படுத்துவது ஆகாது. அர்த்தங்கூறுவதாகத்தான் ஆகும். ஆனால், பெயர்ச்சொல்லைத்தான் நீங்கள் இன்னொரு மொழிக்கு மாற்ற முடியும். ஒரு பெயர் இன்னொரு மொழியில் அதனுடைய பெயரில் ஆகும். எல்லாச் சொற்களையும் மாற்றிவிடவும் முடியாது. அவனுடைய ஜனவரி பிப்ரவரியை நாமொன்றும் செய்ய இயலாது. நம்முடைய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலுக்கு ஆங்கிலத்தில் சொற்கள் இருக்க வாய்ப்பில்லை. அதனால் எதையுமே பெயர்படுத்தலாம். அதற்குரிய வாய்ப்பு இருக்கும்போது பெயராக்கம் கட்டாயம் நிகழவேண்டும். அப்படி ஆக்கமுடியாத சில அசையொலிகளும் இருக்கும். இப்போது Yahoo என்பது அரிஸ்டாட்டில் கண்டுபிடித்த உடனே சொன்ன ஒரு சொல். இது ஒரு அசைச்சொல். இதை மொழிபெயர்க்க வேண்டாம். ஆனால், Facebook என்பதை முகநூல் என்று ஆக்கிக் கொள்ளலாம். ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்கள் அடங்கிய, தனக்குத் தெரிந்ததை எழுதக்கூடிய முகம் தெரிவிக்கின்ற ஒன்று. நான் முகநூலுக்கு வந்த புதிதில் வதனப்புத்தகம் என்று அழைத்தார்கள். பிறகு முகப்புத்தகம் என்றார்கள். வதனம் என்பது வடமொழி. இதை முகநூல் என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது Facebook நிறுவனமே முகநூல் என்றுதான் குறிப்பிடுகிறது. இப்படித் திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஒரு சொல் பயன்பாட்டுக்கு வருகிறது. என்போன்றோர் எங்கள் முயற்சியைக் கைவிட்டு பிறர்போலவே வதனப்புத்தகம் என்று கூறிக்கொண்டிருந்தால் இது நிகழ்ந்திருக்குமா?



  • நீங்கள் பணியாற்றிய திரைப்படத்தில் பாடல்களும், வசனங்களும் பிறமொழிக் கலப்பின்றி தமிழிலேயே வந்திருந்தது. இதற்காக நீங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் என்ன?
நான் பணியாற்றிய திரைப்படமான ‘நஞ்சுபுரம்’ ஒரு கிராமத்துக் கதையாதலால், கதாபாத்திரங்கள் கிராமத்து மொழியில்தான் பேச வேண்டும். ஆதலால், முழுக்க தமிழில்தான் பேச வேண்டும். இருப்பினும், பிண்ணனிக்குரல் பதிவின்போது, எட்டுச்சொற்கள் ஆங்கிலத்தில் வந்துவிட்டன. ஆனாலும் மொத்தத் திரைப்படத்தையும் தமிழ் உரையாடலால் ஆக்கியது இயற்கையாய் நிகழ்ந்த சாதனைதான். அதே போல், நகரத்துக் கதைக்கும் வசனங்களைத் தமிழில் எழுதிவிடலாம். முன்னர், தனித்தமிழ் வலிந்து பேசுவதுபோல் தோன்றும். ஆனால், இப்போது ஊடகங்களும் தனித்தமிழில் பேசவும், எழுதவும் ஆரம்பித்து விட்டன. தினசரிகளும் தமிழ்ச்சொற்களை உபயோகித்துக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களில் நீங்கள் தமிழில் எழுதும்போது, அவர்கள் மறுப்பதில்லை. இப்போது வெளியே வந்த ’பாகுபலி’ திரைப்படத்தில் கூட, தமிழிலிலேயே வசனங்கள் நன்றாகப் பயன்படுத்தப்பட்டன. இம்சைஅரசன் திரைப்படத்தில் வசனங்கள் செந்தமிழில் இருந்ததை யாருமே குறையாக உணரவில்லையே. மக்கள் ஏற்றுக்கொண்டு இப்படங்கள் எல்லாம் வெற்றி பெறவும் செய்தன.

  • ‘நஞ்சுபுரம்’ திரைப்படத்திற்கு பின் வேறு வாய்ப்புகள் கிடைக்க வில்லையா? அல்லது கொள்கை போன்ற வேறு காரணங்களால் தவிர்த்து விட்டீர்களா?
திரைப்படங்களுக்கு பணியாற்ற அழைத்தால் மட்டுமே செல்வேன். வாய்ப்புத் தேடி நான் செல்வதில்லை. நஞ்சுபுரத்துக்குப் பின் மூன்று திரைப்படங்களுக்கு பணியாற்றினேன். சில படங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தாமதமாக வரலாம். தொடர்ந்து பணியாற்றுவதற்கு நான் சென்னையில் இருக்க வேண்டும். ஆனால், நான் திருப்பூரில் வசிப்பது திரைத்துறை முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைதான்.

  • இப்போதைய தமிழ்த் திரைப்பாடல்களின் நிலை?
பட்டுக்கோட்டையாரும், கண்ணதாசனும் எழுதிய திரைப்பாடல்களை ஒப்பிடும்போது மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்றால், திரைப்பாடல்கள் எழுதுமிடத்தில் கவிஞர்கள் இல்லை. மெட்டுக்கு வரிகளை நிரப்பத் தெரிந்த எல்லோரும் பாட்டு எழுதுகிறார்கள். அதிலும், தமிழ் அறிந்த கவிஞர்கள் எவருமில்லை. திரைத்துறையினரே எது வெற்றி பெறும் என்ற மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். கவிஞர். தாமரை கூட அண்மையில், நான் இதுவரை எழுதிய பாடல்கள் 500, தவிர்த்த பாடல்கள் 1000 என்று மனம் நொந்து எழுதியிருந்தார்கள். மதுக்குடிப் பாடல்கள் தான் அதிகம் வரும் நிலைதான் தற்போது இருக்கிறது.

  • தங்களின் ‘காமக்கடும்புனல்’ கவிதைத் தொகுதி வெளிவந்த போது சர்ச்சைகள் வந்ததா?
காமக்கடும்புனல், நவீன கவிதை எல்லைக்குள், அதற்கான சுதந்திரத்திற்குள் எழுதப்பட்டது. அதற்குரிய எதிர்வினையைப் பெற்றது. பாராட்டும் விமர்சனமும் கிடைத்தன. விமர்சனங்களை நான் ஏற்றுக் கொண்டேன். இந்தத் தொகுப்பு அதிகமானவர்களைச் சென்றடைந்தது. அதன் மூலம் என்னை அடைபவர்களும் இருக்கிறார்கள். இலக்கியத்தில் இது ஒரு சோதனை முயற்சி. ஒரே பொருளில் 400 கவிதை எழுதுதல் என்பதுதான் இந்தத் தொகுப்பு முயற்சிக்கு ஆதாரம். கவிதைக்கு அகநானூறு, புறநானூறு என்ற மரபு இருக்கிறது. அகத்தில் உள்ளது அகப்பொருள் சொல்லும். புறத்தில் உள்ளது புறப்பொருள் சொல்லும். நம்மிடம் பல பெருந்தொகை நூல்கள் இருக்கையில், புதுக்கவிதை நூல் ஏன் 400 – 500 கவிதைகளைக் கொண்டதாக இருக்கக் கூடாது? அது ஏன் ஒரே பொருளில் பாடப்பட்டதாக இருக்கக் கூடாது? என்பது தான் அந்த நூல் எழுதுவதற்கான தேடல். எந்தப் பொருளை எடுக்கலாம் என்று நினைத்த போது, பேசாப் பொருளாக இருந்தது காமம், அதை எடுத்து, முயன்று ஒரே பொருளில் 400 கவிதைகள் என்ற எண்ணிக்கையில் எழுதியதுதான் இந்தத் தொகுப்பு.

  • பயணங்களின் மீது உங்களுக்கு தீராக்காதல் இருக்கிறது. எதற்காக இத்தனை பயணங்கள்?
கவிஞராக நிலக்காட்சியின் மீது தீராத இன்பம், புதுப்புது நிலக்காட்சிகளைக் காண்பதில் விருப்பம் உண்டு. எல்லாக் கவிஞர்களும் அவ்விதமே இருப்பார்கள். பல்வேறு நிலங்களின் மக்கள் முகங்களைப் பார்ப்பதும் சலிக்காத இன்பம். நாம் வாழும் நிலத்திலேயே கிடைக்கும் அனுபவங்கள் போதா. அதிகபட்சமாக இந்தியாவையாவது சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது ஆவல். அதற்கேற்ற தோழமைகளும் அமைந்தார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், நீர் வளம் மிக்க இடங்களுக்கு அடிக்கடி சென்று விடுவோம். யாருமே எளிதில் நுழைய முடியாத கோதாவரிக் காடுகளுக்குள் சென்று வந்தோம். ஆபத்துகள் நிறைந்த அடர்த்தியான ஒரிசாக் காடுகளில் திரிந்திருக்கிறோம்.

  • பயணித்த இடங்களில் மிகவும் பிடித்தது எது?
கோதாவரி நதிக்கரை. ராஜமுந்திரியில் இருந்து பத்ராச்சலம் வரையிலான 40 கிலோ மீட்டர் படகுப்பயணம், அங்கே கோதாவரி ஆறு கிழக்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து வருகிறது. சுற்றிலும் மலைகள், இடையில் உள்ள பள்ளத்தாக்கு மாதிரியான இடத்தில் ஆறு மெதுவாக வளைந்து, நெளிந்து பயணிக்கிறது. இடையிடையே பல சிற்றாறுகள் வந்து இணையும். நதிக்கரையில் இருக்கும் சிறு கிராமங்கள் அதீத வளத்துடன், பசுமை குன்றாமல் இருக்கும். அந்த இடங்களும், பயணமும் எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது அந்தப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் படகுப்பயணம் சாத்தியமா எனத் தெரியவில்லை. வாய்ப்பிருந்தால், திரும்பவும் செல்வேன். காவேரி மேற்குத் தொடர்ச்சி மலையை கடக்கும் இடமான, திரிவேணி சங்கம் என்ற இடமும் பிடித்த ஒன்று. காவேரி குடகிலிருந்து இறங்கி, கபினி ஆறெல்லாம் சேர்ந்து, மைசூரிலிருந்து, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி வரும்வரை இது காண்பதற்கினிய இடமாக இருக்கும்.



  • கொங்கு தமிழை உங்கள் எழுத்துகளில் அதிகம் பயன்படுத்தப்படாதது ஏன்?
கொங்கு தமிழ் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தரவுகள் சேகரித்திருக்கிறேன். என்னுடைய கணிப்பின்படி கொங்குப் பகுதி பண்பாட்டுச் செழிப்புள்ளதாகவும், தொழில் வளர்ச்சி மிக்கதாகவும் இருப்பதற்குக் காரணமே, கொங்கு மொழியில் உள்ள அடிப்படையான மரியாதைதான். மொழியில் வரும் மரியாதை மனத்திலும், பண்பாட்டிலும் ஊறியிருப்பதால்தான் சொல்லுக்குப் பயந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றக் கூடிய மனிதர்கள். சொன்ன வாக்கைக் காப்பாற்றும் இந்தப் பண்புதான் தொழில் வளர்ச்சிக்கு உதவியது. கொங்கு மொழியை எழுத்தில் கையாண்டவர்களில், சி.ஆர். ரவீந்திரன், பெருமாள் முருகன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்போது எழுதக்கூடியவர்களில் வா.மு.கோமு தொடங்கி தாராபுரம் என் ஸ்ரீராம் வரை பலரும் பங்களிக்கின்றன.ர் கவிதைகளில், நான் கொங்கு மொழி சார்ந்து சில பரிசோதனைக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். கவிதையின் உச்சமாக இருக்கையில்மட்டுமே கொங்கு மொழியில் எழுதுவேன். கொங்கு மொழியே ஒரு கவிதைதான். நான் சொல்லாராய்ச்சி செய்யும் போது, அதனுடைய அளவுகோலாக கொங்கு மொழியைத்தான் எடுத்துக் கொள்கிறேன். கொங்கு மொழி வழக்கில் இலங்கும் தூய தமிழ்ச்சொற்களை மட்டும் தனியாகச் சேகரித்து வைத்திருக்கிறேன். இது சார்ந்து பெரிய நூல் எழுதும் திட்டம் இருக்கிறது. நான் பிற்பாடு புனைவு எழுதினால், கொங்கு மொழியின் அத்தனை அம்சங்களையும் வெளிக்கொணர்வதாக அது இருக்கும். அந்தளவுக்கான சேகரம் என்னிடமிருக்கிறது.

  • திருக்குறள் விளக்கவுரை எழுதும் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது?
திருக்குறள் விளக்கவுரை எழுதி முற்றுப்பெற்று அச்சுக்குப் போய் விட்டது. அதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அப்புத்தகப் பிரதிகளை அதிகமான எண்ணிக்கையில் அச்சிட்டால்தான் குறைந்த விலையில் கொடுக்க முடியும். அதற்கான பணிகள் சென்னையில் பதிப்பகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இடையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பணியில் தாமதம் ஏற்பட்டு விட்டது. திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் விளக்கவுரை எழுதி இதுவரை வெளிவந்திருக்கின்றன. நான் எழுதியது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். முன் எழுதியவர்கள், குறளைத் தம் கொள்கையுடன் தொடர்புபடுத்தி, முன்னிறுத்தி எழுதியிருக்கிறார்கள். நான் குறளுக்கு அதன் மிகச்சிறந்த அர்த்தம், பொருள் என்னவோ அதை உரையாக எழுதியிருக்கிறேன்.

  • வரவிருக்கும் உங்கள் புத்தகங்கள்?
’விலைகள் தாழ்வதில்லை’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத் தொகுப்பு வரவிருக்கிறது. பொருளாதாரம் பயணம் நகைச்சுவை, பல்சுவைத்தமிழ் என அதில் சுவையான கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும். திருக்குறள் விளக்கவுரை ஏப்ரலில் சென்னைப் புத்தக் கண்காட்சிக்கு வந்துவிடும். மேலும், ஒரு கவிதைத் தொகுப்புக்காக கவிதைகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.