Saturday, November 5, 2016



கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா ? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா ? அவர் இராமாயணத்தைத் தமிழ்க் காவியமாக எழுதியதாலா ? இல்லை. கம்பர் நாளொன்றுக்கு ஏழ்நூறு செய்யுள்களை இயற்றுவார். பார்க்கும் பொருளெல்லாம் அவருக்குக் கவிதைப் பொருளே. ஒன்றைக் கண்ட நொடியில் அடைமழை பொழிவதுபோல் வெண்பாக்களோ விருத்தங்களோ கூறவல்லவர் கம்பர். அதனால்தான் அவர் கவிச்சக்கரவர்த்தி. தமிழ்க் கவிஞர் பெருமக்களுள் கம்பர் அளவுக்கு அரசனை எதிர்த்து நின்றவர் வேறு யாருமிலர் என்றே தோன்றுகிறது. கம்பர் அடையாத பெருமையுமில்லை. கம்பர் படாத துன்பமுமில்லை.
கம்பர் சோழ நாட்டில் உள்ள திருவழுந்தூர் என்ற ஊரில் பிறந்தவர். கம்பரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். சிலர் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பர். கம்பரின் குடும்பத்தார் அங்கிருந்த காளி கோவிலில் பூசை செய்யும் உரிமை பெற்றிருந்தனர். இளமை முதலே மடைதிறந்த வெள்ளம்போல் செய்யுள் இயற்றும் திறமையைப் பெற்றிருந்தார். கம்பர் கவிதை இயற்றும்பொழுது காளி தேவியே தீப்பந்தம் பிடித்ததாகச் செவிவழிக் கதைகள் உள்ளன.
இளமையிலேயே கவிபுனையும் ஆற்றலோடு விளங்கிய கம்பரைப் பற்றிக் கேள்வியுற்ற திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல், அவர்க்கு அனைத்து வகையான கல்வியையும் புகட்டினார். சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்ட கம்பர் பிற்காலத்தில் அவரைப் புகழ்ந்து பலவிடங்களில் பாடியிருக்கிறார்.
கம்பரின் கவியாற்றலை அறிந்த சோழ மன்னன் குலோத்துங்கன் அவரை வரவழைத்துத் தம் அவையில் வீற்றிருக்கச் செய்தான். சோழனின் அவையில் தலைமைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர்.
கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் அழைத்த சோழ மன்னன், இராமகாதையைத் தமிழிற் செய்யுமாறு வேண்டிக்கொண்டான். அதன்படி கம்பர் இயற்றிய பெருங்காவியமே ‘கம்ப இராமாயணம்.” இராமசரிதையைத் தமிழ் நிலத்திற்கேற்றவாறு புதிதாய்ப் பாடினார் கம்பர்.
மன்னன் கட்டளையிட்டதும் ஒட்டக்கூத்தர் இராப்பகலாக உட்கார்ந்து இராமகாதையை எழுதிக்கொண்டிருந்தார். கம்பர் மன்னனின் கட்டளை பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கணிகையர் வீடுகளில் தவங்கிடந்தார். கம்பரின் இந்தப் போக்கால் சினமுற்ற சோழன் இருவரையும் அழைத்து ‘இராமாயணம் எழுதும் பணி எந்நிலையில் இருக்கிறது ?’ என்று வினவினான். ஒட்டக்கூத்தர் தாம் பாதிவரை எழுதி முடித்துவிட்டதாகக் கூறினார்.
ஒட்டக்கூத்தர் எழுதியதைவிட தாம் மிகுதியாய் எழுதியதாய்க் கூறவேண்டுமென்று விரும்பிய கம்பர், தாம் முக்கால்வாசி முடித்துவிட்டதாய்க் கூறினார். உண்மையில் அவர் ஒரு பாட்டைக்கூட எழுதியிருக்கவில்லை. ஐயுற்ற மன்னன் கம்பரிடம் அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றைக் கூறும்படி கேட்க, கம்பர் மடைதிறந்த வெள்ளம்போல் எண்ணற்ற செய்யுள்களைக் கூறினாராம். அதனால் மகிழ்ந்த மன்னன் தன் ஐயம் தீர்ந்தான்.
கம்பர் கூறிய அந்தச் செய்யுள்களுக்கு முன், கம்பர் எழுதிய இராமாயணத்தின்முன் - தாம் எழுதியவை நிகரில்லை என்றுணர்ந்த ஒட்டக்கூத்தர், அவற்றையெல்லாம் கிழித்தெறிந்தாராம். அது கேள்வியுற்ற கம்பர், அவரிடம் சென்று அவரைத் தேற்றி, ஒட்டக்கூத்தர் எழுதிய உத்தரகாண்டத்தைத் தம் நூலோடு சேர்த்துக்கொண்டார்.
கம்ப இராமாயணத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றச் சென்றார் கம்பர். அங்கிருந்தவர்கள் தில்லைத் தீட்சிதர்கள் பரிந்துரைத்தால் அரங்கேற்ற ஒப்புவதாகக் கூறினர். அதனால் கம்பர் தில்லைக்குச் சென்றார். மூவாயிரம் தீட்சிதர்களிடம் ஒருமனமாக எப்படி ஒப்புதல் பெறுவது என்று கம்பர் திகைத்து நின்றார் அங்கே.
அவ்வமயம் அங்கே பாம்பு கடித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவனைக் கவிபாடி உயிர்ப்பித்தார்.
மங்கையொரு பங்கர் மணிமார்பில் ஆரமே,
பொங்குகடல் கடைந்த பொற்கயிறே, – திங்களையும்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே,
ஏறிய பாம்பே இறங்கு.
– என்பது அவர் பாடிய பாடல்களில் ஒன்று.
கம்பர் பாடியதால் உயிர்பெற்றெழுந்தான் சிறுவன். அதனால் அகமகிழ்ந்த மூவாயிரம் தில்லைத் தீட்சிதர்கள் ஒருங்கே மனமொப்பி கம்பர் இராமாயணம் பாட இசைவெழுதித் தந்தனர்.
அந்த இசைவைப் பெற்றுக்கொண்டு திருவரங்கம் வந்த கம்பர் சடகோபர் அந்தாதி பாடித் தொடங்கி, கம்ப இராமயணத்தை அரங்கேற்றினார். இதனால் கம்பரின் புகழ் நாடெங்கும் பரவிற்று.
ஒருமுறை குலோத்துங்கச் சோழன் மேல்மாடத்தில் உலவுகையில் ‘இப்புவியெல்லாம் எனக்கடிமை” என்றான். வேந்தனைவிடவும் கவிஞனே உயர்வு என்பதை உணர்த்த விரும்பிய கம்பர் ‘புவியெல்லாம் உனக்கடிமை. நீவிர் எனக்கடிமை” என்றாராம். இதனால் சோழன் கம்பரைச் சினந்துவிட்டான்.
தம்மைக்காட்டிலும் சடையப்ப வள்ளலையே புகழ்ந்து பாடுவதால் கம்பர்மீது சோழனுக்கு ஏற்கெனவே வெறுப்பு இருந்தது. அதன்பிறகு அங்கிருக்கத் தகாதென்று உணர்ந்த கம்பர், “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ….” என்றவாறு சோழ நாட்டை நீங்கினார். பிறகு பாண்டிய நாட்டுக்கும் ஓரங்கல் நாட்டுக்கும் சென்றிருந்தார்.
சோழனை நீங்கியதும் கம்பர் வறுமையுற்றார். குறுநெல்மணிக்காகப் பாட வேண்டிய துயருற்றார்.
ஆந்திரத்திலுள்ள ஓரங்கல் நாட்டுக்குச் சென்று ‘பிரதாப உருத்திரன்” என்னும் மன்னனின் அன்பைப் பெற்று வாழ்ந்தார். கம்பரின் கவியாற்றலால் ஈர்க்கப்பட்ட பிரதாபன் அவர்க்கு வேண்டியன அனைத்தும் செய்து அவரைச் சோழநாட்டுக்குக் கொணர்ந்து சேர்ப்பித்தான்.
கம்பனின் மகன் அம்பிகாபதி கதை நமக்குத் தெரியும். சோழன் மகளைக் காதலுற்றதால் அவன் கொல்லப்பட்டான். நாமறியாத இன்னொன்றும் உள்ளது. கம்பருக்குக் காவேரி என்றொரு மகளும் இருந்தாள். கவிஞனின் மகள் பேரழகியாய் இருப்பாள்தானே ? கம்பர் மகள் காவேரியும் காவிரியை நிகர்த்த பேரழகி. அவள்மீது தீராத காமமுற்ற சோழன்மகன் ஒருவன் அவளைத் தொடர்ந்து துரத்தி வந்தான். இவனிடம் சிக்கிச் சின்னாபின்னப்படுவதைவிட உயிர்துறத்தலே மேலென்று நினைத்த கம்பன் மகள், காவிரி வெள்ளத்தில் குதித்து உயிர்நீத்தாள்.
மகனையும் மகளையும் இழந்த கொடுந்துயர் தாளாமல்தான் கம்பர் சோழ நாட்டை நீங்கினார் என்பாரும் உளர்.
பிறநாட்டு அரசனின் அன்பைப் பெற்றவராய் நாடு திரும்பியிருக்கும் கம்பரைக் கண்டு சோழன் அஞ்சினான். கம்பரிடம் சோழமன்னன் குலோத்துங்கன் நைச்சியமாய் மீண்டும் நட்பு பேணிக் கொன்றுவிட்டான்.
அரண்மனைக்குக் கம்பரை வரவழைத்து அவர்மீது புலியை ஏவினான். கம்பரைக் கண்டு அந்தப்புலி கொல்நினைவின்றி அன்பு காட்டி நின்றதாம். அதனால் சோழனே அம்பெய்தி கம்பரைக் கொன்றான். அம்புபட்ட மார்போடு கம்பர் விட்ட சாபம்தான் சோழர் பரம்பரையை வேரோடு சாய்த்து உருத்தெரியாமல் ஆக்கிற்று.
மரணத்தறுவாயில் கம்பர் பாடிய பாட்டு :-
வில்லம்பு சொல்லம்பு மேதகவே யானாலும்
வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து – வில்லம்பு
பட்டுருவிற்று என்னை; என் பாட்டம்பு நின்குலத்தைச்
சுட்டெரிக்கும் என்றே துணி.
அதன்பின் பகைவர்கள் படையெடுத்து வந்து சோழ தேசத்தைக் கைப்பற்றினர். சோழர் பரம்பரை அழிவுற்று மண்ணோடு மண்ணாய்ப் போனது.
சோழனால் தம் மக்களைப் பறிகொடுத்த கம்பர் இறுதியில் அவனாலேயே கொல்லப்பட்டுத் தம் இன்னுயிரை இழந்தார்.
கம்ப இராமாயணத்தின் இலக்கிய நலன்கள்தாம் நாமறிந்தவை. அதை இயற்றிய கம்பர் தம் வாழ்வில் அரச பீடத்தைத் தொடர்ந்து உறுத்தினார். நாம் கற்பனையிலும் நினையாத போராட்ட வாழ்வைத்தான் வாழ்ந்து மறைந்தார்.


மேலை நாடுகளில் ஷேக்ஸ்பியரைப் பற்றி எண்ணற்ற நூல்களும் திரைப்படங்களும் வெளியாகின்றன. ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வாழ்க்கையைவிடவும் கொந்தளிப்பும் உயிர்ப்பதைபதைப்பும் காவியத் துயரங்களும் மிகுந்த வாழ்வு கம்பருடையது.
- கவிஞர் மகுடேசுவரன் 

Friday, September 9, 2016

கவிஞர். மகுடேசுவரன் - நேர்காணல்

- வெயிலான் & மழைக்காதலன்



திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளியில் பயின்ற தமிழ் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்வதாய் சொல்லும் கவிஞர். திரு.மகுடேசுவரன், நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான கவிஞர். இலக்கியம், கவிதை மட்டுமன்றி, தமது தேடல்கள் மூலம் பலதுறைகள் குறித்தும் கருத்துச் செறிவுடன் பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர்.  தற்போது, முகநூலில் ஆயிரக்கணக்கானோர் பின் தொடரும் புகழும் கொண்டவர்.
  • தமிழ் மீதான அளவு கடந்த பற்றுக்கு காரணம் என்ன?
திருப்பூரில் உள்ள நஞ்சப்பா பள்ளியின் தமிழ் ஆசிரியர்களிடம் பயின்றது தான் தமிழ் மீதான பற்றுக்கு காரணம்.அதிலும், மரியாதைக்குரிய கதிர்வேல் ஐயா பள்ளியிறுதியில் கற்பித்த எளிமையான, தனித்துவமான கற்பித்தல் முறையால், தமிழ் மீது அளப்பறிய ஆர்வம் ஏற்பட்டது.

  • கவிதைகள் எழுதத் தொடங்கியது எப்போது?
இளமையிலேயே வாசிப்பு அனுபவம் உண்டு. அதற்கு வசதியாக பள்ளியின் அருகிலேயே நூலகம் இருந்தது. கோகுலம், பூந்தளிர் உள்ளிட்ட சிறுவர் பத்திரிகைகளில் மரபுக் கவிதைகள் பல எழுதியிருக்கிறேன். நவீன இலக்கியம் பரிச்சயமானவுடன் 1992 -இல் கணையாழியில் கவிதைகள் பிரசுரமாயின. தொடர்ச்சியாக பிற பத்திரிகைகளிலும் என்னுடைய கவிதைகள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தன. இது வரை 11 கவிதைத் தொகுதிகள், 5 கட்டுரைத் தொகுப்புகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.

  • தங்களின் தொழில் மற்றும் அது தொடர்பான அனுபவம்?
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஏற்றுமதி ஆலோசனை நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறேன். திருப்பூரின் பொற்காலமான தொண்ணூறுகளில், குறைவான நிர்வாகப் பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருந்த சிறு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அரசு தொடர்பான ஆவணப் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம்.
கோட்டா (Quota) முறையிலான ஏற்றுமதியும் நடைமுறையில் இருந்ததால், ஆலோசனை நிறுவனங்களின் தேவையும் அதிகம் இருந்தது. திருப்பூரின் தலையாய பிரச்சனையான சாயக்கழிவுகள் பிரச்சனைக்குப் பின், எங்களின் தொழிலுக்கும் இறங்குமுகம்தான்.

  • சாயக்கழிவு, இப்படி பூதாகரமான பிரச்சனையாக மாறும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கவில்லையா? வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்தார்களா?

சாயப்பட்டறைச் சங்கங்கள் சாயக்கழிவு தொடர்பான வழக்குகளை சந்தித்துக் கொண்டு தான் இருந்தார்கள். திருப்பூர் ஒரு தொழில் நகரம்.பின்னலாடைத் தொழில் மாபெரும் வளர்ச்சியடைந்த நிலையில், இந்தத் தொழிலை நம்பி தமிழ்நாடே வேலை நாடி இங்கு வந்தது. மற்ற தொழில்களைப் போல இங்கும் கழிவுகள் உருவாகத்தான் செய்யும். அது போலவே மிகுந்த வளர்ச்சி பெற்ற இந்தத் தொழிலிலும் கழிவுப் பொருள்கள் உருவாகின்றன. முதலில் பள்ளங்களில் கழிவுநீர் வடிந்து, ஆற்றில் ஓடி, அணைகளில் சேர்ந்ததால் நிலத்தடி நீர் மாசுபட்டது. இதற்கான தீர்வை அரசாங்கம்தான் செய்ய வேண்டும்.  அரசு ஏன் கைவிட்டது? என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை.  நிலத்தடி நீர் மாசுபாட்டால் ஏற்பட்ட அழுத்தங்களில், விவசாயிகளின் அழுத்தமும் முக்கியமான ஒன்று. அரசு சரியான நேரத்தில் உகந்த நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகியிருக்காது.  அனைத்தையும் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் வேடிக்கைதான் பார்த்தன. நிரந்தரத் தீர்வுக்கு முயலவில்லை.

  • திருப்பூரின் பல்வேறு சங்கங்கள் அவ்வப்போது ஏற்பட்ட சின்ன பிரச்சனைகளைச் சமாளிப்பதிலும், வழக்கைச் சந்திப்பதிலுமே ஈடுபட்டார்களே தவிர, தீர்வுகளை நோக்கி செயல்பட்டார்களா?
சின்ன சின்ன தீர்வுகளை முயன்று பார்த்தார்கள். சில முறைகள் மூலம் கழிவுகளை சுத்திகரிக்க முயன்றார்கள். அது தோல்வியில்தான் முடிந்தது. சாயக்கழிவுகளின் நச்சுத் தன்மையையாவது குறைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், சங்கங்களுக்கு வழக்குகளே மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது.




  • திருப்பூர் மண்ணின் தொழிலதிபர்களை விட, பிற ஊர்களிலிருந்து வந்து தொழில் தொடங்கியவர்கள் வெற்றி பெற முடியாது என்று ஒரு கருத்து நிலவுகிறதே,  அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
திருப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர்களுக்கு ஒரு முன்வாய்ப்பு (அட்வான்டேஜ்) இருப்பது இயற்கைதான். பின்னலாடை சார்தொழில்களிலும், தங்கள் நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவுகளிலும் முக்கியமான பொறுப்புகளில் தமது உறவுக்காரர்களை நியமிப்பார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் முட்டுக் கொடுத்து, தோள் கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்துக் கொண்டுவிடுவார்கள். நகர் நாடி பிற ஊர்களில் இருந்து வந்து, பணியாளர்களாகச் சேர்ந்து, தொழில் கற்று, பின் தனியாக தொழில் தொடங்குபவர்கள் அடுத்த வகையினர். தொழிலாளர்களாகச் சேர்பவர்கள், அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறி, விரைவில் முதலாளிகளாக ஆகும் சாத்தியம் திருப்பூரில் மட்டுமே உண்டு. இந்தத் தொழிலதிபர்களும் அடிப்படையிலிருந்து தொழில் கற்று வந்ததால், நல்ல முறையிலேயே தொழில் நடத்தி வருகிறார்கள். ஒரு சிலர் சறுக்கியிருக்கலாம். அதுவும் நிகழக்கூடியதே.

  • நீங்கள் ஒரு ஏற்றுமதி ஆலோசகராகவும் இருப்பதால், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?
புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள், நல்ல பயிற்சி, தொடர்புகள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். வியாபாரத்தினுடைய அனைத்து நுணுக்கங்களையும் கற்று வரவேண்டும். இப்போது, தொழிலாளர்களின் கிடைப்பு மிகவும் அரிதாக இருக்கிறது. கிடைத்த தொழிலாளர்களைத் தக்கவைப்பதும் சிரமமாக இருக்கிறது. மின்வெட்டு போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தொழில்சார்ந்த கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பாராத திசைகளிலிருந்து பல தடைகள் வரும். ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கும் திறமையும் வேண்டும். தொழில்வெற்றி என்பது தானாய்ப் பழுத்து மடியில் விழும் கனியா என்ன !

  • தங்கள் நிறுவனங்களில், நவீன முறைகளைப் புகுத்துவதால் ஏற்றுமதியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்களா?
இதற்குத்தான் தொண்ணூறுகளைத் திருப்பூரின் பொற்காலம் என்று சொல்கிறோம். அப்போது வீட்டின் ஒரு பகுதியிலேயே 4 தையல் இயந்திரங்களைக் கொண்டு, ஆயத்த ஆடைகள் தயாரித்து விற்பனை செய்து விட முடியும். காலப்போக்கில் சிறுதொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளாகி, மிகப்பெரும் ஆலைகளாக மாறியபின், கார்பரேட் முறையைப் பின்பற்றுவது, பாதுகாப்பு முறைகள், தரக்கட்டுப்பாடு போன்றவை மிக அவசியமாகின்றன. இந்த கார்பரேட் அழுத்தங்களைத் தாக்குப் பிடித்த ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கார்பரேட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிற சிறு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. அன்றேல் பெருநிறுவனத்தின் பணிக்கிளைபோல் ஆகிவிட்டன.

  • என்னதான் நவீன இயந்திரங்கள், கணினி மயம், நிர்வாக மாற்றங்கள் இருந்தாலும், இன்னமும் குறித்த நேரத்திற்குள் சரக்குகளைத் துறைமுகங்களுக்கு அனுப்ப முடிவதில்லையே ஏன்?
எப்பொழுதுமே நமக்கு, உற்பத்தியில் ஈடுபடுவதற்குப் போதிய அல்லது அளப்பரிய நேரம் தரப்படுவதில்லை. பின்னலாடை ஏற்றுமதி ஒரு பருவகால வியாபாரம். குளிராடைகள், கோடைகால ஆடைகள் இரண்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டு பருவங்களுக்கும் இடையே உள்ள நேரத்தில்தான் நமக்குப் பணி. இதனால் நமக்குக் குறுகிய அவகாசமேகிடைக்கிறது. இந்தக் காலப்போதாமை தான் திருப்பூரை எப்போதுமே அழுத்திக் கொண்டிருக்கிறது. எல்லாமே சரியாக இருந்தாலும், நடைமுறையில் எதிர்பாராத பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. தொழிலாளர் பற்றாக்குறை, மின்வெட்டு, நூல் விலையேற்றம் மற்றும் சார் தொழில்களில் தாமதம் போன்ற ஏதாவது ஒன்று காரணமாகி விடுகிறது.

  • ஏற்றுமதிக்கு அரசின் சலுகைக் குறைப்பு, ரத்து போன்ற சுமைகள் அதிகரிக்கும் வேளையில், வியாபார லாபத்தைக் குறைத்துக் கொண்டே போவது, இத்தொழிலின் வளர்ச்சிக்கு உகந்ததா?
இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னலாடைத் தொழிலில் உறுதியான வளர்ச்சி இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. இது உடுக்கை செய்யும் தொழில். உடைகளுக்கான தேவைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். இந்தியாவில் உள்ள மக்களுக்கான உள்ளாடைகள், ஆயத்த ஆடைகளைத் தயார் செய்தாலே தொழில் நீடித்திருக்கும் என்பது என் கருத்து.



  • திருப்பூரைத் தவிர, மற்ற ஊர்களில் தொடங்கிய பின்னலாடைத் தொழில் வளர்ச்சி அடையாததற்கான காரணம் என்ன?
திருப்பூர் ஒற்றைத் தொழில் நகரம். பின்னலாடைக்கான சார்தொழில்கள் திருப்பூரிலும், அதைச் சுற்றியும்தான் இருக்கின்றன. ஆதலால், பின்னலாடைத் தொழிலைத் திருப்பூரில் மட்டுமே வெற்றிகரமாகச் செய்ய முடியும். இதை விட்டு, வேறு ஊர்களுக்குச் சென்று பின்னலாடைத் தொழில் செய்வது, ஒரு சாகசக் கிளர்ச்சியை ஊட்டக்கூடுமே ஒழிய, வெற்றி தராது.

  • திருப்பூரின் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாய் இருக்கின்றனவா?
நிச்சயமாகப் போதாது. இருபது வருடங்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றைக் கடக்க தரைப்பாலம் உட்பட இரு பாலங்கள்தான் இருந்தன. திருப்பூர் ஒரு மாவட்டத் தலைநகர், தனிப்பாராளுமன்றத் தொகுதி, வடக்கு, தெற்கு என இரு சட்டமன்றத் தொகுதிகள், மாநகராட்சி அந்தஸ்து போன்றவைகளைப் பெற்று பெருநகராகி இருக்கிறது. அதற்கேற்ற சாலை வசதிகளோ, மேம்பாலங்களோ, தரைப்பாலங்களோ இதர வசதிகளோ இல்லாமல் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. ஆறுகள், ஏரிகள் பாதுகாப்பு, கழிவுநீர் வாய்க்கால் வசதி, உள்கட்டமைப்பு வசதிகள், நல்ல மின்னழுத்தங்களுடன் கூடிய மின் இணைப்பு வசதி போன்ற பலவும் இந்நகருக்கு வேண்டியனவாய் இருக்கின்றன.

  • திருப்பூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் முன்பு என்னென்ன நீர்நிலைகள் எங்கெங்கு இருந்தன?

தவறாது பொழியும் மழையினால், சுற்றிலும் ஏராளமான நீர்நிலைகள் இருந்தன. நொய்யலாறு காட்டாறாகப் பாய்ந்து, அந்நியப் படையெடுப்புகளைத் தடுத்து நகருக்கு அரணாக விளங்கியது. ஊரைச் சுற்றிலும் ஏராளமான பெருங்குளங்கள் இருந்தன. குளத்துப்பாளையம் குளம், உதகையின் பின்புறமுள்ள அமைதிப் பள்ளத்தாக்கின் நீர்ப்பிடிப்பை கொண்டு வந்து சேர்க்கும் குளமாக இருந்திருக்கிறது. நீர்வழித்தடங்களை ஆராய்ந்தால் அது புலப்படும். பூம்புகார்ப் பகுதியில் இருக்கும் ஒரு ஏரி சுல்தான் பேட்டை தொடங்கி, பொழியும் மழை நீரை, சின்னகரை வழியாகக் கொண்டுவந்து சேர்த்துக்கொள்ளும் இடமாக இருந்தது. அந்த ஏரி நிரம்பி, மேவி ஜம்மனை ஆறாக நொய்யலில் கலந்தது. பள்ளி செல்லும்போது அந்த ஏரி வழியாகச் செல்வேன். ஜம்மனை ஆற்றில் இரண்டு கரையும் தேக்கி வெள்ளம் போனதையும் பார்த்திருக்கிறேன். இப்படி சுற்றிலும் நல்ல நீர் நிலைகள் நிறைந்து, நல்ல நிலத்தடி நீர் கிடைக்கக் கூடிய ஊராக இருந்தது. இன்றைக்கும் கோவில்வழி பகுதியில் நிலத்தடி நீர், குடிநீராக உபயோகிக்கும் வகையில்தான் இருக்கிறது. சாயப்பட்டறைகளின் பெருவளர்ச்சிக்குப் பின் நீர் மாசுபட்டிருக்கிறது.


  • புதிய ஆட்சியர் அலுவலகம் கூட ஒரு நீர்நிலையின் மீது தான் கட்டப்பட்டு இருக்கிறது என ஒரு முகநூலில் தகவலாக எழுதியிருந்தீர்கள், அது குறித்து?
பல்லடத்திலிருந்து, பொள்ளாச்சியை நோக்கிச் செல்லும்போது பார்த்தால், இடையில் ஒரு பெரும் கரிசல்காடு வரும். சுல்தான்பேட்டை வரை நீண்டு இருக்கும் அந்தக் கரிசல் காட்டில் இப்போது காற்றாலைகள் பெருகி விட்டன. ஒரு ஆரஞ்சுச் சுளை மாதிரியான அந்தக் கரிசல் பகுதி பொங்கலூர்வரை இருக்கும். அந்த மழையிலிருந்து, பல்லடத்தின் மேடான பூமலூர் போன்ற பகுதிகளில் பெய்யும் மழை முதற்கொண்டு, எல்லாம் திரண்டு, ஏதோவொரு நீர்க்கால்வாய் பிடித்துப் பிடித்து இரண்டு கால்வாயாக வருகின்றன. சின்ன கரையில் இருக்கும் பாலம் கூட அந்த நீர்வரத்துக்காகத்தான். சின்ன கரை ஓடை முருகம்பாளையம் வழியாக வந்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடத்துக்கு வந்து சேரும். அது முழுக்க நீர் நிறைந்த பகுதியாகத்தான் இருந்தது. அந்த ஏரி நிரம்பும் போது, பல்லடம் சாலையின் கரையில் நீர் தளும்பும். முன்பு ஒரு முறை வெள்ளம் வந்த போது, எல்.ஆர்.ஜி கல்லூரி முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தது. பல்லடம் சாலையின் மறுபுறமும் ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபமருகில் ஒரு பாறை அகழ்ந்த குளம் இருந்தது. இந்த ஏரி நிறைந்து, சந்தைப்பேட்டை வழியாக ஜம்மனை ஆறாக வந்து சேர்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக வறண்ட, தூர்ந்த நீர்நிலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களாக மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. பெரும்பாலான பேருந்து நிலையங்கள் நீர்நிலைகளின் மேலேயே அமைந்திருக்கின்றன. சென்னையில் பெய்த பெருமழைபோல் இங்கும் பெய்யும்போதுதான் இதன் பாதிப்பு நமக்குத் தெரியவரும். ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள ஏரிக்கு வரும் நீரை, நேரடியாக ஜம்மனை ஆற்றில் கலக்கும்படியான ஏற்பாடுகளை இப்போது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஆனால், ஒரு ஏரியைக் கொன்று, நம் போக்கில் நீரைத் திருப்புவது சரியான முறை கிடையாது. இப்படி நீர்த்தேக்கத்தை அடைக்கும் போது, நிலத்தடி நீர் குறையும் அபாயம் இருக்கிறது.

  • இதைத் தவிர மற்ற நீர் நிலைகள்?
அது போக, குளத்துப்பாளையம் ஏரி, சாமளாபுரம் நஞ்சராயன் குளம் இவையெல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கு நீர்வரத்து மிகவும் குறைவாகவே இருக்கிறது. பூண்டி கோவிலுக்குப் பின் வரும் ஓடை, நல்லாறு வழியாக வரும் நீர் தான் குளத்துப்பாளையம் குளத்தில் சேரும். அப்படிப் பூண்டியிலிருந்து வரும் ஓடைகள்தாம் பிரிட்ஜ்வே காலனியில் இருக்கும் இரு பாலங்களுக்கும் புகுந்து வெளியேறும். பெயரிலேயே பாலத்தின் வழி (ப்ரிட்ஜ்வே) என்றிருக்கிறது பாருங்கள். முதல் பாலத்தின் எதிரில், வாலிபாளையம் செல்லும் சாலையே ஓடைத்தடத்தில்தான் அமைந்துள்ளது. அந்த ஓடை தான் ஸ்ரீசக்தி தியேட்டர் அருகில் ஆற்றில் கலக்கிறது. ஓடைத்தடத்தில் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளால், அதன் அகலம் இப்போது மிகவும் குறுகி விட்டது.

  • திருப்பூரின் உடனடியாகத் தீர்க்கவேண்டிய பிரச்சனை என்று எதனைக் காண்கிறீர்கள்?

தொழிலாளர்களின் வினைபடு ஆற்றலை முழுமையாக மழுங்கடித்த மதுக்கடைகள்தாம் திருப்பூரை அழுத்திக்கொண்டிருக்கும் தலையாய பிரச்சனை. வாரத்தின் முதலிரண்டு நாள்கள் பணியாற்றினால் போதும் வாரம் முழுமைக்கும் குடிபோதையில் மூழ்கியிருக்கலாம் என்ற போக்கு தலைதூக்கியிருக்கிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் நேரந்தொடங்கி மூடும் நொடிவரை குடித்துத் தீர்க்கிறார்கள். புறநகர்க் கடைகளில் மதுக்கடையையொட்டிய நூறடிகளுக்குக் குடித்துக்கொண்டே இருப்பவர்களைத்தான் பார்க்க முடிகிறது. உழைப்பாற்றல் இழந்து நடைபிணங்களைப்போல் உலவும் குடிவெறியர்களிடம் இவ்வூர் சிக்கித் திணறுகிறது. வடநாட்டுத் தொழிலாளர்கள் படைபடையாய்க் குவிந்துவிட்டனர். இது பெரிய பண்பாட்டு நெருக்கடியாக மாறியிருக்கிறது.

  • திருப்பூரில், இலக்கியம் மற்றும் புத்தக வாசிப்பு ஆர்வம் எப்போது தொடங்கியது?
முன்பிருந்தே திருப்பூரானது தொழிற்சங்கங்கள் ஊன்றிப் பரவியிருக்கும் இடதுசாரி பூமி. இயல்பாகவே, தொழிற்சங்கங்கள் வாசிப்பை ஊக்குவிக்கும். இடதுசாரிக் கூட்டங்கள் பெருமளவில் சிறப்பாக நடக்கும் இடம். எப்போதுமே வாசிப்புக்கு இங்கே அதற்குரிய இடம் தரப்பட்டு வந்திருக்கிறது. எழுத்தாளர்கள். கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், யூமா வாசுகி, நான் மற்றும் இடதுசாரி இலக்கியங்கள் எழுதுபவர்கள் பலர் இங்கே தொண்ணூறுகளில் உருவானார்கள். சுப்ரபாரதிமணியன் வானம்பாடிகள் காலத்திலேயே எழுதத் தொடங்கியவர். அப்போது சில அமைப்புகளும் இருந்தன. கனவு இலக்கிய வட்டம், கே.பி.கே.செல்வராஜ் அவர்களின் முத்தமிழ்ச் சங்கம் ஆகியவை அடிக்கடி இலக்கியக் கூட்டங்கள் நடத்தியன. திருப்பூர்த் தமிழ்ச்சங்கம் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு வழங்க ஆரம்பித்தது. ஒரு சுமுகமான இலக்கியச் சூழல் நிலவியபடியே இருந்தது. திருப்பூரில் இருந்ததால்தான் எல்லா இலக்கியவாதிகளையும் இங்கேயே நேரில் பார்க்கக்கூடிய சூழல் வாய்த்தது.

  • எழுத்தாளர். சுஜாதாவுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவு குறித்து?
கணையாழியில் என் முதல் கவிதை வெளியானதில் இருந்து சுஜாதா என்னைத் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருந்தார். கணையாழி மற்றும் இதர பிரபல பத்திரிகைகளில் என்னைப் பற்றி அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தார். கூட்டங்களிலும் என்னை மேற்கோள் காட்டிப் பேசினார். புதிதாக கவிதை எழுதத் தொடங்கிய எனக்கு, அவருடைய தொடர்ந்த ஊக்கமும், அறிவுரைகளும்தான், கவிதைகளில் அடுத்தடுத்த நிலையை எட்டுவதற்கு உந்துதலாக இருந்தது.

  • சமூக வலைத்தளங்களில் கிடைத்திருக்கும் இத்தகைய வரவேற்பை எதிர்பார்த்தீர்களா?
இத்தகைய வரவேற்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. உங்களைப் போன்ற நண்பர்கள் சொல்லி ஐந்து வருடங்களுக்கு முன் வலைத்தள உலகுக்கு வந்தபோது, என் எழுத்துகளுக்குப் போதுமான எதிர்வினைகள் இல்லை. யார் படிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. 2012-இல் முகநூலில் எழுதத் தொடங்கிய பின்னர்தான் இணையத்தின் தாக்கம் புரிந்தது. என் எழுத்துகளைப் படிப்பவர்கள், பல்வேறு தரப்பினர், மிகவும் தேடல் உடையவர்கள், நமக்குக் கற்றுக் கொடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள், எழுதியதின் மறுபகுதியைப் புரிய வைக்கக் கூடியவர்கள் என அனைவரும் இருந்தார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் என் எழுத்துகளைப் படிக்கிறார்கள். என்னுடைய கடைசி ஐந்தாறு புத்தகங்கள், முகநூலில் எழுதி அதன்பின் தொகுக்கப்பட்டவைதாம்.



  • பிறமொழிச் சொற்கள் கலக்காமல், தனித்தமிழில் பேசுவது தற்போது சாத்தியமா?
நாம் சாதாரண உரையாடல்களில் பேரளவில் மிகுதியான தமிழ் சொற்களைத்தான் பயன்படுத்துகிறோம். பிறமொழிச் சொற்கலப்பு வடமொழியும், ஆங்கிலமும் தான். எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் கலந்திருக்கும்1200 வடமொழிச் சொற்களுக்கும் உகந்த தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டு விட்டன. பத்து வருடங்களுக்கு முன் பிரச்சாரம் என்று சொல்லி வந்ததை இப்போது பரப்புரை என்று சொல்கிறோம். பேச்சில் ஆங்கிலச் சொற்கள் உள்ளே ஏறிக்கொண்டிருப்பதை நாம் தடுத்தால் தனித்தமிழில் பேசுவது சாத்தியமே.தனித்தமிழுக்கான இடம் என்னவென்றால், தலைமுறை தலைமுறையாக இங்கே இருக்கும் மலையாளியோ, தெலுங்கரோ தத்தமது வீட்டில் அவர்களது தாய்மொழியைத்தான் பேசுகிறார்கள். அது போல, தமிழுக்கு எவ்வளவுதான் ஆபத்துகள் உருவாகினாலும், தமிழர்கள் தம் வீட்டில் தமிழில்தான் பேசுவார்கள். நாம் பேசுவது தனித்தமிழ் தான். நான்கு பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கும். அதற்கு நிகரான தமிழ்ச்சொல்லை இணைத்துப் பேசினால் போதும். நாம் ஒரு மோகத்தினால் ஆங்கிலத்தில் பேசுகிறோம். அனைவருக்குமே ஆங்கிலம் தெரியும் ஒரு நிலை வரும்போது, ஆங்கிலத்தின் மீது மோகம் இருக்காது. ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் இருக்காது. அந்த நிலை வரும்போது அனைவருமே தமிழில் தான் பேசுவார்கள். ஆகவே, தனித்தமிழ் சாத்தியம் தான்.

  • திருப்பூரில் இடதுசாரிகளின் பங்கு?
திருப்பூர் அரசியல்ரீதியாக இடதுசாரிகள் பலம்பெற்ற ஒரு தொழில் நகரம். பஞ்சாலைகள் நிரம்பிய பஞ்சு நகரமாக இருந்தபோது, ஆலைத் தொழிலாளர்கள் பெருமளவில் இடதுசாரி அமைப்புகளில் இருந்தார்கள். அப்போதிலிருந்து தொழிலாளர்களுக்குப் பக்கபலமாக நின்று உரிமைகளைப் பெற்றுத் தருவதிலிருந்து, அனைத்து தேவைகளுக்காகவும் இன்று வரையிலும் போராடிப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அரசியலைப் பொறுத்தவரை கோவை, திருப்பூர் இரு மாவட்டங்களுமே இடதுசாரி மாவட்டங்கள் தான். அவர்கள் நல்ல அரசியல் செல்வாக்குடனே இருக்கிறார்கள்.

  • பெயர்ச் சொற்களை அப்படியே தமிழ்படுத்துவது சரியா? (எடுத்துக்காட்டாக Facebook– முகநூல், Twitter – கீச்சு)
உலக அளவில் எம்மொழிச்சொற்கள் என்றாலும் அவற்றைப் பெயர்ச் சொல், வினைச்சொல் என்று இரண்டு வகைக்குள் அடக்கலாம். ஒரு மொழியின் வினைச்சொல்லை, இன்னொரு மொழிக்கு பொருள்கூறும்பொருட்டுத்தான் மாற்ற முடியும். உதாரணத்துக்கு Come – வா, Go – போ என்றால் தமிழ்படுத்துவது ஆகாது. அர்த்தங்கூறுவதாகத்தான் ஆகும். ஆனால், பெயர்ச்சொல்லைத்தான் நீங்கள் இன்னொரு மொழிக்கு மாற்ற முடியும். ஒரு பெயர் இன்னொரு மொழியில் அதனுடைய பெயரில் ஆகும். எல்லாச் சொற்களையும் மாற்றிவிடவும் முடியாது. அவனுடைய ஜனவரி பிப்ரவரியை நாமொன்றும் செய்ய இயலாது. நம்முடைய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலுக்கு ஆங்கிலத்தில் சொற்கள் இருக்க வாய்ப்பில்லை. அதனால் எதையுமே பெயர்படுத்தலாம். அதற்குரிய வாய்ப்பு இருக்கும்போது பெயராக்கம் கட்டாயம் நிகழவேண்டும். அப்படி ஆக்கமுடியாத சில அசையொலிகளும் இருக்கும். இப்போது Yahoo என்பது அரிஸ்டாட்டில் கண்டுபிடித்த உடனே சொன்ன ஒரு சொல். இது ஒரு அசைச்சொல். இதை மொழிபெயர்க்க வேண்டாம். ஆனால், Facebook என்பதை முகநூல் என்று ஆக்கிக் கொள்ளலாம். ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்கள் அடங்கிய, தனக்குத் தெரிந்ததை எழுதக்கூடிய முகம் தெரிவிக்கின்ற ஒன்று. நான் முகநூலுக்கு வந்த புதிதில் வதனப்புத்தகம் என்று அழைத்தார்கள். பிறகு முகப்புத்தகம் என்றார்கள். வதனம் என்பது வடமொழி. இதை முகநூல் என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது Facebook நிறுவனமே முகநூல் என்றுதான் குறிப்பிடுகிறது. இப்படித் திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஒரு சொல் பயன்பாட்டுக்கு வருகிறது. என்போன்றோர் எங்கள் முயற்சியைக் கைவிட்டு பிறர்போலவே வதனப்புத்தகம் என்று கூறிக்கொண்டிருந்தால் இது நிகழ்ந்திருக்குமா?



  • நீங்கள் பணியாற்றிய திரைப்படத்தில் பாடல்களும், வசனங்களும் பிறமொழிக் கலப்பின்றி தமிழிலேயே வந்திருந்தது. இதற்காக நீங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் என்ன?
நான் பணியாற்றிய திரைப்படமான ‘நஞ்சுபுரம்’ ஒரு கிராமத்துக் கதையாதலால், கதாபாத்திரங்கள் கிராமத்து மொழியில்தான் பேச வேண்டும். ஆதலால், முழுக்க தமிழில்தான் பேச வேண்டும். இருப்பினும், பிண்ணனிக்குரல் பதிவின்போது, எட்டுச்சொற்கள் ஆங்கிலத்தில் வந்துவிட்டன. ஆனாலும் மொத்தத் திரைப்படத்தையும் தமிழ் உரையாடலால் ஆக்கியது இயற்கையாய் நிகழ்ந்த சாதனைதான். அதே போல், நகரத்துக் கதைக்கும் வசனங்களைத் தமிழில் எழுதிவிடலாம். முன்னர், தனித்தமிழ் வலிந்து பேசுவதுபோல் தோன்றும். ஆனால், இப்போது ஊடகங்களும் தனித்தமிழில் பேசவும், எழுதவும் ஆரம்பித்து விட்டன. தினசரிகளும் தமிழ்ச்சொற்களை உபயோகித்துக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களில் நீங்கள் தமிழில் எழுதும்போது, அவர்கள் மறுப்பதில்லை. இப்போது வெளியே வந்த ’பாகுபலி’ திரைப்படத்தில் கூட, தமிழிலிலேயே வசனங்கள் நன்றாகப் பயன்படுத்தப்பட்டன. இம்சைஅரசன் திரைப்படத்தில் வசனங்கள் செந்தமிழில் இருந்ததை யாருமே குறையாக உணரவில்லையே. மக்கள் ஏற்றுக்கொண்டு இப்படங்கள் எல்லாம் வெற்றி பெறவும் செய்தன.

  • ‘நஞ்சுபுரம்’ திரைப்படத்திற்கு பின் வேறு வாய்ப்புகள் கிடைக்க வில்லையா? அல்லது கொள்கை போன்ற வேறு காரணங்களால் தவிர்த்து விட்டீர்களா?
திரைப்படங்களுக்கு பணியாற்ற அழைத்தால் மட்டுமே செல்வேன். வாய்ப்புத் தேடி நான் செல்வதில்லை. நஞ்சுபுரத்துக்குப் பின் மூன்று திரைப்படங்களுக்கு பணியாற்றினேன். சில படங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தாமதமாக வரலாம். தொடர்ந்து பணியாற்றுவதற்கு நான் சென்னையில் இருக்க வேண்டும். ஆனால், நான் திருப்பூரில் வசிப்பது திரைத்துறை முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைதான்.

  • இப்போதைய தமிழ்த் திரைப்பாடல்களின் நிலை?
பட்டுக்கோட்டையாரும், கண்ணதாசனும் எழுதிய திரைப்பாடல்களை ஒப்பிடும்போது மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்றால், திரைப்பாடல்கள் எழுதுமிடத்தில் கவிஞர்கள் இல்லை. மெட்டுக்கு வரிகளை நிரப்பத் தெரிந்த எல்லோரும் பாட்டு எழுதுகிறார்கள். அதிலும், தமிழ் அறிந்த கவிஞர்கள் எவருமில்லை. திரைத்துறையினரே எது வெற்றி பெறும் என்ற மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். கவிஞர். தாமரை கூட அண்மையில், நான் இதுவரை எழுதிய பாடல்கள் 500, தவிர்த்த பாடல்கள் 1000 என்று மனம் நொந்து எழுதியிருந்தார்கள். மதுக்குடிப் பாடல்கள் தான் அதிகம் வரும் நிலைதான் தற்போது இருக்கிறது.

  • தங்களின் ‘காமக்கடும்புனல்’ கவிதைத் தொகுதி வெளிவந்த போது சர்ச்சைகள் வந்ததா?
காமக்கடும்புனல், நவீன கவிதை எல்லைக்குள், அதற்கான சுதந்திரத்திற்குள் எழுதப்பட்டது. அதற்குரிய எதிர்வினையைப் பெற்றது. பாராட்டும் விமர்சனமும் கிடைத்தன. விமர்சனங்களை நான் ஏற்றுக் கொண்டேன். இந்தத் தொகுப்பு அதிகமானவர்களைச் சென்றடைந்தது. அதன் மூலம் என்னை அடைபவர்களும் இருக்கிறார்கள். இலக்கியத்தில் இது ஒரு சோதனை முயற்சி. ஒரே பொருளில் 400 கவிதை எழுதுதல் என்பதுதான் இந்தத் தொகுப்பு முயற்சிக்கு ஆதாரம். கவிதைக்கு அகநானூறு, புறநானூறு என்ற மரபு இருக்கிறது. அகத்தில் உள்ளது அகப்பொருள் சொல்லும். புறத்தில் உள்ளது புறப்பொருள் சொல்லும். நம்மிடம் பல பெருந்தொகை நூல்கள் இருக்கையில், புதுக்கவிதை நூல் ஏன் 400 – 500 கவிதைகளைக் கொண்டதாக இருக்கக் கூடாது? அது ஏன் ஒரே பொருளில் பாடப்பட்டதாக இருக்கக் கூடாது? என்பது தான் அந்த நூல் எழுதுவதற்கான தேடல். எந்தப் பொருளை எடுக்கலாம் என்று நினைத்த போது, பேசாப் பொருளாக இருந்தது காமம், அதை எடுத்து, முயன்று ஒரே பொருளில் 400 கவிதைகள் என்ற எண்ணிக்கையில் எழுதியதுதான் இந்தத் தொகுப்பு.

  • பயணங்களின் மீது உங்களுக்கு தீராக்காதல் இருக்கிறது. எதற்காக இத்தனை பயணங்கள்?
கவிஞராக நிலக்காட்சியின் மீது தீராத இன்பம், புதுப்புது நிலக்காட்சிகளைக் காண்பதில் விருப்பம் உண்டு. எல்லாக் கவிஞர்களும் அவ்விதமே இருப்பார்கள். பல்வேறு நிலங்களின் மக்கள் முகங்களைப் பார்ப்பதும் சலிக்காத இன்பம். நாம் வாழும் நிலத்திலேயே கிடைக்கும் அனுபவங்கள் போதா. அதிகபட்சமாக இந்தியாவையாவது சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது ஆவல். அதற்கேற்ற தோழமைகளும் அமைந்தார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், நீர் வளம் மிக்க இடங்களுக்கு அடிக்கடி சென்று விடுவோம். யாருமே எளிதில் நுழைய முடியாத கோதாவரிக் காடுகளுக்குள் சென்று வந்தோம். ஆபத்துகள் நிறைந்த அடர்த்தியான ஒரிசாக் காடுகளில் திரிந்திருக்கிறோம்.

  • பயணித்த இடங்களில் மிகவும் பிடித்தது எது?
கோதாவரி நதிக்கரை. ராஜமுந்திரியில் இருந்து பத்ராச்சலம் வரையிலான 40 கிலோ மீட்டர் படகுப்பயணம், அங்கே கோதாவரி ஆறு கிழக்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து வருகிறது. சுற்றிலும் மலைகள், இடையில் உள்ள பள்ளத்தாக்கு மாதிரியான இடத்தில் ஆறு மெதுவாக வளைந்து, நெளிந்து பயணிக்கிறது. இடையிடையே பல சிற்றாறுகள் வந்து இணையும். நதிக்கரையில் இருக்கும் சிறு கிராமங்கள் அதீத வளத்துடன், பசுமை குன்றாமல் இருக்கும். அந்த இடங்களும், பயணமும் எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது அந்தப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் படகுப்பயணம் சாத்தியமா எனத் தெரியவில்லை. வாய்ப்பிருந்தால், திரும்பவும் செல்வேன். காவேரி மேற்குத் தொடர்ச்சி மலையை கடக்கும் இடமான, திரிவேணி சங்கம் என்ற இடமும் பிடித்த ஒன்று. காவேரி குடகிலிருந்து இறங்கி, கபினி ஆறெல்லாம் சேர்ந்து, மைசூரிலிருந்து, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி வரும்வரை இது காண்பதற்கினிய இடமாக இருக்கும்.



  • கொங்கு தமிழை உங்கள் எழுத்துகளில் அதிகம் பயன்படுத்தப்படாதது ஏன்?
கொங்கு தமிழ் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தரவுகள் சேகரித்திருக்கிறேன். என்னுடைய கணிப்பின்படி கொங்குப் பகுதி பண்பாட்டுச் செழிப்புள்ளதாகவும், தொழில் வளர்ச்சி மிக்கதாகவும் இருப்பதற்குக் காரணமே, கொங்கு மொழியில் உள்ள அடிப்படையான மரியாதைதான். மொழியில் வரும் மரியாதை மனத்திலும், பண்பாட்டிலும் ஊறியிருப்பதால்தான் சொல்லுக்குப் பயந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றக் கூடிய மனிதர்கள். சொன்ன வாக்கைக் காப்பாற்றும் இந்தப் பண்புதான் தொழில் வளர்ச்சிக்கு உதவியது. கொங்கு மொழியை எழுத்தில் கையாண்டவர்களில், சி.ஆர். ரவீந்திரன், பெருமாள் முருகன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்போது எழுதக்கூடியவர்களில் வா.மு.கோமு தொடங்கி தாராபுரம் என் ஸ்ரீராம் வரை பலரும் பங்களிக்கின்றன.ர் கவிதைகளில், நான் கொங்கு மொழி சார்ந்து சில பரிசோதனைக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். கவிதையின் உச்சமாக இருக்கையில்மட்டுமே கொங்கு மொழியில் எழுதுவேன். கொங்கு மொழியே ஒரு கவிதைதான். நான் சொல்லாராய்ச்சி செய்யும் போது, அதனுடைய அளவுகோலாக கொங்கு மொழியைத்தான் எடுத்துக் கொள்கிறேன். கொங்கு மொழி வழக்கில் இலங்கும் தூய தமிழ்ச்சொற்களை மட்டும் தனியாகச் சேகரித்து வைத்திருக்கிறேன். இது சார்ந்து பெரிய நூல் எழுதும் திட்டம் இருக்கிறது. நான் பிற்பாடு புனைவு எழுதினால், கொங்கு மொழியின் அத்தனை அம்சங்களையும் வெளிக்கொணர்வதாக அது இருக்கும். அந்தளவுக்கான சேகரம் என்னிடமிருக்கிறது.

  • திருக்குறள் விளக்கவுரை எழுதும் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது?
திருக்குறள் விளக்கவுரை எழுதி முற்றுப்பெற்று அச்சுக்குப் போய் விட்டது. அதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அப்புத்தகப் பிரதிகளை அதிகமான எண்ணிக்கையில் அச்சிட்டால்தான் குறைந்த விலையில் கொடுக்க முடியும். அதற்கான பணிகள் சென்னையில் பதிப்பகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இடையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பணியில் தாமதம் ஏற்பட்டு விட்டது. திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் விளக்கவுரை எழுதி இதுவரை வெளிவந்திருக்கின்றன. நான் எழுதியது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். முன் எழுதியவர்கள், குறளைத் தம் கொள்கையுடன் தொடர்புபடுத்தி, முன்னிறுத்தி எழுதியிருக்கிறார்கள். நான் குறளுக்கு அதன் மிகச்சிறந்த அர்த்தம், பொருள் என்னவோ அதை உரையாக எழுதியிருக்கிறேன்.

  • வரவிருக்கும் உங்கள் புத்தகங்கள்?
’விலைகள் தாழ்வதில்லை’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத் தொகுப்பு வரவிருக்கிறது. பொருளாதாரம் பயணம் நகைச்சுவை, பல்சுவைத்தமிழ் என அதில் சுவையான கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும். திருக்குறள் விளக்கவுரை ஏப்ரலில் சென்னைப் புத்தக் கண்காட்சிக்கு வந்துவிடும். மேலும், ஒரு கவிதைத் தொகுப்புக்காக கவிதைகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
















Saturday, April 2, 2016

கவிஞர் மகுடேசுவரனுடன் கேள்வியும் பதிலும்



புத்தகம் பேசுது’ இதழில் வெளியான என் ‘ஒரு புத்தககம் பத்துக் கேள்விகள்’ பகுதி. கேள்விகள் அனுப்பித் தரப்பட்டன. பதில்கள் எழுதித் தரப்பட்டன.
-----------------
தமிழினி வெளியீடாக மகுடேசுவரன் எழுதியுள்ள ‘விலைகள் தாழ்வதில்லை’ என்னும் நூல் திருப்பூர்ப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியாகிறது. புத்தகத்தின் முன்னட்டைக் குறிப்பே அது பொருளாதாரவியல் குறித்துப் பேசும் கட்டுரைகள் சிலவற்றைத் தாங்கியுள்ளதைக் கூறுகிறது. தமிழ்ச்சூழலில் பொருளாதாரம் உள்ளிட்ட பிற பெருந்துறைகள்பற்றி எழுதப்படும் நல்ல நூல்களுக்கு என்றும் தேவைப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்தான் மகுடேசுவரனின் ‘விலைகள் தாழ்வதில்லை’ நூல் கூடுதலான கவனம் பெறுகிறது. நூல்குறித்தும் நூலாசிரியரின் ஒட்டுமொத்தச் செயற்களத்தின் ஈடுபாடுகள் குறித்தும் எழுப்பட்ட பத்துக் கேள்விகளும் அவற்றுக்குரிய பதில்களும் :-

1. பங்குச் சந்தைகள் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் பொது மனநிலையை இந்நூல் எவ்வாறு அணுகப் போகிறது ?

தற்காலப் பொருளாதாரப் போக்கின் அடிப்படையில் பார்க்கையில் பங்குச் சந்தைகளின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களின் தேவைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் உரசும் எல்லாக் காரணிகளும் பங்குச் சந்தைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தீர்மானிக்கின்றன என்பதுகூட உண்மைதான். பெருநிறுவன மதிப்புகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் பங்குச் சந்தைகளை ஊன்றிக் கவனிப்பதும் அறிவை வளர்த்துக்கொள்வதும் நம்மைத் தாக்கும் அலைகள் எத்தகையன என்பதைக் கணிக்க உதவும். அரசு நிறுவனங்களின் மதிப்புகள்கூட அவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டதால் விண்ணளவு உயர்ந்திருக்கின்றன. யார்வேண்டுமானாலும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டு விருப்பமற்றவர்கள் அதன் போக்குகளைக் கவனிக்கலாம். முதலீடு என்று பெருந்தொகையைக் குறிக்கவில்லை. அங்கே செய்யப்படும் சில நூறுகளும் ஆயிரங்களும்கூட முதலீடுதான். நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், எண்ணெய் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றின் பங்குகளில் முதலிடுவதுகூட நம்மை நாம் ஆதரிப்பது போன்றதுதான். மதிப்பின் ஏற்றத்தாழ்வுகளோடு நிரந்தரமாகப் போராடமல் வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் அதைப் பார்க்க வேண்டும்.

2. பங்குச் சந்தைகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் செபியின் செயல்பாடுகள் எவ்வாறுள்ளன ? அது சிறு முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்குத் துணை நிற்கின்றதா ?

நன்கு கண்காணிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டின் பன்னாட்டுத் துயரத்திற்குப் பிறகு பேரளவில் அதிர்வுகளை ஊட்டிய நிகழ்வுகள் எதுவுமில்லை. அத்தகைய இடர்கள் எல்லாக் கைகளையும் மீறிய நிதிச்சந்தைகளின் நெரிக்கட்டுகள் என்றுதான் கருதப்படுகின்றன. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியச் சந்தைகள் முன்னிலும் வலுவோடு எழுந்து நின்றன. அதற்கு செபியின் கண்காணிப்புத் தீவிரம்கூட ஒரு காரணம்தான். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முறைகேடு நம் பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட அண்மைக்காலக் கரும்புள்ளி என்று வைத்துக்கொண்டால்கூட, அந்நிறுவனத்தைக் கைம்மாற்றி நிவாரணம் கண்டதை மறப்பதற்கில்லை. இப்போதெல்லாம் கருத்துகளைப் பரப்பிவிட்டு, ஒரு நிறுவனப் பங்குவிலையைச் செயற்கையாக உயர்த்துவதற்கோ தாழ்த்துவதற்கோ வழியில்லாதபடி செபியின் விதிகள் தடுக்கின்றன. செபியில் பதிந்துகொண்டவர்கள் அன்றி பிறர் அச்செயலில் ஈடுபடக்கூடாது. நிறுவனங்களின் செயல்பாடுகளும் காலாண்டு முடிவுகளும்தாம் அங்கே விலைகளைத் தீர்மானிக்கின்றன.

3. கடந்த இருபத்தைந்தாண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைக் குறித்து…

நிச்சயமாய்க் கடந்த இருபத்தைந்தாண்டுகள் மிகவும் கரடுமுரடான பாதைகளைத்தான் நம் பொருளாதாரம் கடந்து வந்திருக்கிறது. உலக நாடுகளுக்கிடையில் இத்தனை ஊடுபாவு உறவுகள் பொருளாதார நலன்கள் சார்ந்தே ஏற்பட்டிருக்கின்றன. நாம் அத்தகைய ஒரு திறப்பில் அடியெடுத்து வைத்தது தவிர்க்க முடியாத கட்டாயத்தால்தான். எல்லாத் துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் நம் நாட்டிலும் நுழைந்திருக்கின்றன. அரசு நிர்வாகம் சார்ந்த இணையோட்டம் அவற்றுக்குப் போதவில்லை என்றாலும் இருக்கின்ற சாத்தியங்களுக்குள் இயன்றவற்றைச் செய்திருக்கிறோம். நாடளவில் நல்ல இணைப்புச் சாலைகள் தோன்றியிருக்கின்றன. பெருநகரங்கள் பன்மடங்கு வளர்ந்திருக்கின்றன. ஊடகத்துறை, கட்டுமானம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் விரிவுகளைக் கண்கூடாகக் காண்கிறோம். இயற்கை வளங்கள் கண்டறியப்பட்டு அசுர வேகத்தில் நுகரப்படுவது கவலைக்குரிய ஒன்றுதான். இந்தச் சூறாவளியில் இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை, சிறுதொழில்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தீர்க்கப்படவில்லை. ஏராளமான ஊர்ப்புறத் தொழில்கள் அழிந்துவிட்டன. கிராமங்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்வது என்று தவிக்கின்றன.



4. அடுத்த பத்தாண்டுகளுக்கு உலக அளவில் பொருளாதாரப் போக்குகள் எவ்வாறு இருக்கக்கூடும் ? குறிப்பாக, இந்தியாவிற்கு.

அடுத்த பத்தாண்டுகள் இதே அலைவரிசையில்தான் உலக நிகழ்வுகள் இருக்கும். எண்ணெய் அரசியல் மீண்டும் சூடுபிடிக்கும்போது அவற்றை வழக்கம்போல் மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தோற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இது என் ஊகம்தான். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்து - ஏனெனில் இது இருதரப்புக்கும் முக்கியம் - நாடுகளுக்குள் நல்ல உறவுகள் ஏற்படும். சொத்துடைமை விலையேற்றங்கள் இதே ஏறுவிகிதத்தில் இருக்குமா என்பதைச் சொல்வதற்கில்லை. தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து பாதியாகியிருந்தபோதும் டாலருக்கு நிகரான உரூபாய் விலைவீழ்ச்சியால் நம்மால் அதை நுகரமுடியவில்லை. மக்கள்தொகை மிக்குள்ள நாடுகளில் வேலையின்மையும் மூத்த வயதினர் தொகையும் அதிகரிக்கும். 2025-க்குப் பிறகு இந்த வளர்ச்சி நிரலில் ஒரு அமைதி ஏற்படும். அதற்குப் பிறகு நாம் கடந்து வந்த பாதையை கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவைகூட எழலாம். அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு நம் தேசம் மீண்டும் விவசாயத்திற்கும், தற்சார்புப் பொருளாதாரத்திற்கும் திரும்பக்கூடும் என்று நான் கணிக்கிறேன். ஏனென்றால் உணவுப்பொருள் உற்பத்தியின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் உக்கிரமாய் உணரவில்லை என்றே நினைக்கிறேன்.

5. தற்போது முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அதிகம் எழுதுகின்றீர்கள். அவற்றின் செயல்பாடுகள் திருப்தியளிக்கின்றனவா ?

முகநூல், கீச்சர் போன்ற சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன என்றால் மிகையில்லை. முன்பெல்லாம் ஒரு கவிதை எழுதி, அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு, மாதக்கணக்கில் பிரசுரத்திற்காகக் காத்திருப்போம். பதினெட்டு மாதங்கள் கழித்துப் பிரசுரமானதெல்லாம் எனக்கு நேர்ந்திருக்கிறது. ஆனால், இன்று எழுதி முற்றுப்புள்ளியிட்டு அடுத்த நொடியில் முகநூலில் பதிவேற்றம் செய்ய முடிகிறது. அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்தப் படைப்புக்கான எதிர்வினைகளைப் பெற முடிகிறது. இது ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் தரும் கிளர்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள். தன் வாசகரோடு இடம் தொலைவு பொழுது தாண்டி எப்போதும் தொடர்பில் இருப்பதைப்போன்ற உணர்வு. நாம் எழுதுவதை உலகளாவிய தமிழர்கள் படிக்கின்ற வாய்ப்பு. எல்லாவற்றிலும் உள்ளது போன்று இதிலும் சில தீமைகள் உள்ளன என்றாலும் நிகரமாக இவற்றால் பயனே மிகுதி. நான் எழுதுவதை நாடோறும் இருபதாயிரம் வாசகர்கள் படிக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் இணையவழிப்பட்ட என் தமிழ் கற்பிப்பில் பயன் பெற்றுள்ளார்கள். இதைவிட வேறென்ன வேண்டும் ?

6. இணையத்தில் பரவலாகப் பேசப்படும் இணையச்சமன் (நெட் நியூட்ராலிடி) விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதே…

இணையம் என்பது எல்லார்க்குமானது என்று இறும்பூது எய்தியிருக்கிறோம். இதன் பயனாளிகள் எல்லாச் சேவைகளையும் விட்டுவிட்டு இணையத்தில் குதிப்பதால் ஏற்பட்ட கலவரம்தான் இணையச் சமநிலைக்கு ஏற்பட்டுள்ள இடர். என்வினவி (வாட்சப்) போன்ற இணையச் செயலிகள் தமக்குள் பேசிக்கொள்ளும் வசதியையும் கொண்டுவந்திருக்கின்றன. ஏற்கெனவே குறுஞ்செய்தியில் பணம் பார்த்த தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்கள் என்வினவி, முகநூல் போன்றவற்றின் வருகையால் வருமானத்தை இழந்தன. இத்தோடு பேசும் சேவை, காணொளித் தொடர்புச் சேவையையும் வழங்கினால் எண்களை அழைத்துத் தொலைபேசும் வழக்கமே இல்லாதொழியும் என்று அஞ்சுகின்றன. இணையத் தொடர்பின் வழி இந்த செயலிகளைப் பயன்படுத்தி இருதரப்பும் பேசவும் காணவும் செய்யலாம். அதனால் இவற்றுக்கு ஒரு வரையறையைக் கோருகின்றன. ஆனால், இணையத்தின் பலம் அதன் கட்டற்ற சுதந்திரமே என்பதால் இவற்றுக்கு எதிராக எதைச் செய்தாலும் அது தற்காலிகமாகவே இருக்கும். அறிவியலின் எல்லா சாத்தியங்களையும் ஏற்றுக்கொள்வதே தீர்வு.



7. என்வினவி என்றதும் நினைவுக்கு வருகிறது. நீங்கள் எண்ணற்ற பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல்லாக்கங்கள் படைத்துத் தருகிறீர்கள். அந்த அனுபவம், மக்கள் அவற்றை ஏற்றுக்கொண்டது பற்றியெல்லாம் சொல்லுங்கள்.

நாள்தோறும் கணக்கிலடங்காத பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுந்துகொண்டே இருக்கின்றன. அந்த வேகத்திற்கு ஈடாக, தமிழ்ச்சொல்லாக்கங்கள் நிகழவே இல்லை. இது இப்படியே போனால் நம் மொழியே அழிந்துவிடும் என்ற அச்சம் யார்க்குமே இல்லை. மொழியுணர்வுள்ள தமிழாசிரியர்கள் எல்லாம் சென்ற தலைமுறையோடு போய்விட்டார்கள். அவர்கள் முதுமையுற்றுச் செயலிழந்தனர். தமிழையே பிழையாய் எழுதுபவர்கள்தாம் தமிழ் கற்பிக்கிறார்கள். நிலைமை இப்படியே நீடிக்குமானால் மொழியைக் காக்கும் செயல் காலந்தாழ்ந்த ஒன்றாகிவிடும் என்று கருதியே நான் இறங்கினேன். இங்கே தமிழை எழுதுபவர்கள்கூட, ஒரு சொல்லைப் பார்த்தால் அதன் அர்த்தத்தையே மங்கலாய்த்தான் உணர்கிறார்கள். எனக்கு ஒரு சொல்லின் ஏழெட்டு அடுக்குகளும் தெளிவாய்த் தெரியும். அவ்வாறுதான் நான் தமிழ்கற்றேன். அதனால் என்னால் அர்த்தத்திற்கேற்ப எளியதாய், சிறியதாய், ஒரு சொல்லையோ சொற்றொடரையோ புதிது புதிதாய் உருவாக்க முடியும். அவ்வாறு ஆக்கிய அச்சொல் புதிது என்று பிறர் சொல்லித்தான் தெரியவந்தது. இந்தத் தமிழ்ப்புலமை தற்காலத்தில் சிறப்பு என்று தமிழறிந்த என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால் இயன்றவரை தமிழ்ச்சொல்லாக்கங்களில் ஈடுபடத் தொடங்கினேன். நான் முகநூலுக்கு வந்தபோது எல்லாரும் அதை வதனப்புத்தகம் என்றார்கள். என்போன்றோர் மீண்டும் மீண்டும் எழுதித்தான் முகநூல் என்பதைப் பதியவைத்தோம். இன்று அந்நிறுவனமே முகநூல் என்று தன் தமிழ்ப்பதிப்பில் பதிக்கிறது. செல்பி என்பதைச் சுயமி என்றார்கள். சுயம் என்பது வடமொழிச்சொல் என்ற அறிவுகூட இல்லாமல் இங்கே தமிழ்ப்படுத்துகிறார்கள் பாருங்கள். நான் அதைத் தற்படம் என்றேன். அடுத்த நொடியில் அச்சொல்லை விக்கிபீடியாவில் சேர்த்தார்கள். கூலிங்கிளாஸ் என்பதைத் தண்ணாடி எனலாம் என்றேன். குளிர்ந்த நீரைத் தண்ணீர் என்கிறோம். குளிர்கண்ணாடியைத் தண்ணாடி எனலாம்தானே ? மறுநாள் தினமணியில் அச்சொல் குறித்து எழுதினார்களாம். இப்படி என் சொல்லாக்கங்கள் தொடர்கின்றன.

8. தமிழ்ப்பிழை நீக்கங்களில் ஈடுபடுகையில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன ? கல்வி நிறுவனங்களில் வீற்றிருப்பவர்கள் என்ன சொன்னார்கள் ?

தமிழ்ப் பிழை நீக்கங்களில் ஈடுபட்டபோதுதான் இங்கே தமிழுக்கு எதிராய் யார் யாரெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே புரிந்தது. தமிழை எழுதுகின்ற ஊடகத்துறையினரிடமிருந்து பிரபல எழுத்தாளர்கள்வரை எல்லாரும் ‘பத்திக்குப் பத்து’ என்ற கணக்கில் பிழையிழைத்தே வந்திருக்கின்றனர். பன்மையில் எழுவாய் இருந்தால் ஒருமை வினைமுற்றில் முடிப்பார்கள். எங்கும் சந்திப் பிழைகள் மிகுந்திருக்கும். எங்கே வலிமிகும் எங்கே வலிமிகாது என்று யார்க்குமே உணர்த்தியில்லை. சரியாக எழுதுகிறேன் என்று எல்லாவிடத்திலும் வலிமிகுவித்துவிட முடியாது. பொருளே மாறிவிடும். முன்புபோல் பிழைதிருத்துநர்களும் அருகிப்போய்விட்ட காரணத்தால் தமிழை ஈவு இரக்கமில்லாமல் அடித்து வீழ்த்தியிருக்கின்றனர். காலில்லாதவர்கள் ஆடிய ஆட்டத்தைத்தான் இத்தனை நாளாகப் பார்த்துக்கொண்டிருந்தோமா என்று அதிர்ச்சியுற்றேன். ஐகாரத்தை அடுத்தும் ய் என்ற மெய்யெழுத்தை அடுத்தும் மகரச் சொல் வந்தால் ம் என்று மெலிமிகும். கைம்மாறு, தைம்மாதம், பொய்ம்முகம். வலிமிகுதலைப்போலவே இவ்வாறு மெலிமிகுதலும் உண்டு. இந்த விதி காற்றில் பறக்கிறது. ஊறுகாய், சுடுகாடு மட்டுமில்லை, எரிமலை, வெடிகுண்டு, குடிநீர் இவையும் வினைத்தொகைதான் என்று சுட்டிக்காட்டியதைக் குறிப்பிட்டு எழுதிய பேராசிரியர் ஒருவர் வினைத்தொகைக்கு உதாரணங்களாக அவற்றை எழுதினால் மதிப்பெண் போடமாட்டார்கள் என்று வருத்தப்பட்டார். இப்படித்தான் இருக்கிறது தமிழ்க்கல்விச்சூழலில் நிலைமை.

9. நீங்கள் எழுதும் கவிதைகளுக்கு இணையத்தில் மிகப்பெரிய வாசகர் வட்டம் இருக்கிறது. தினமும் ஓரிரண்டு கவிதைகளையேனும் பதிகிறீர்கள். தொடர்ச்சியாய்க் கவிதை எழுதுவது எவ்வாறு முடிகிறது ?

இங்கே நம் உற்சாகத்தைத் தீர்மானிப்பது நமக்கு வாய்த்துள்ள களம்தான். நான் கவிதைகளை மட்டுமே எழுதவேண்டும் என்றிருந்தவன். உரைநடைக்குச் செல்பவர்கள் வழிநடையில் இளைப்பாறக் கிடைத்த காட்டுமர நிழல் என்று கருதித்தான் கவிதையின்கீழ்த் தங்கினர். அதனால் விரைவில் அவர்கள் கவிதையைக் கைவிட்டனர். உரைநடையில் எழுதுவதால் பணமும் கொஞ்சம் கூடுதல் கவனிப்பும் கிடைக்கும்தான். ஆனால், தோன்றுகின்றவர்கள் எல்லாம் புனைகதைக்குச் சென்றுவிட்டால் மொழிக்குக் கவிதை வளத்தை யார் ஊட்டுவர் ? கவிதையூற்றம் இல்லாத தொன்மொழியாகலாமா நம்மொழி ? அங்கே புதிதாய்க் கவிதை எழுத முனைவோர் மட்டுமே மிஞ்சி நிற்பர். கவிதையியலின் எல்லா மதகுகளையும் திறந்துவைத்திருந்தால்தான் மொழி வளரும். கவிதைத் தோய்வுதான் மொழிக்குள் நம்மை ஈர்க்கும். அதனால்தான் நான் தொடர்ந்து கவிதைகள் எழுதுகிறேன். உரைநடையில் அறிவுத்துறை நூல்களையும் மொழிநூல்களையும் எழுதுவேன்.

10. மொழி இலக்கணம் கற்பிப்பது என்பது யாருமே முன்வராத செயல். அதில் எப்படி இறங்கினீர்கள் ?

இயற்கையை ஆராய்ந்து அதன் இயல்புகளை எழுதிவைத்ததுதான் இயற்பியல் என்னும் அறிவியல். அதுபோல் உயிர்ப்பொருள்களைப் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட அறிவுத்தொகுப்புதான் உயிரியல், இல்லையா ? அவ்வாறே ஒரு மொழியின் இயற்கையை நுணுகி ஆராய்ந்து எழுதப்பட்ட அம்மொழியின் அறிவியல்தான் இலக்கணம். நாம் இலக்கணத்தை விதிகளின் தொகுப்பாகப் பார்க்கிறோம். இல்லவே இல்லை. நம் மொழியின் இயல்புகளைப்பற்றிய தொகுப்புதான் இலக்கணம். கடந்த முப்பதாண்டுகளாக நவீன இலக்கியம் என்ற போர்வையில் கைவிடப்பட்டவற்றுள் முக்கியமானது தமிழ் இலக்கணம். இலக்கணத்தைக் காக்காமல், அதைப்பற்றிய அறிவை ஊட்டாமல் மொழி வளர்ப்பதோ மொழியைக் காப்பதோ இயலாமற் போகும். ஆங்கிலத்தில் ஒரு சொல்லைக்கூடத் தவறாக எழுதாத தமிழர்கள் தமிழை ஏனோதானோவென்று எழுதுகின்றனர். இங்கே இலக்கணத்தை வலியுறுத்த ஒருவருமில்லை. அந்த உணர்ச்சியே இல்லை. எத்துணை ஆண்டு காலத் தொன்மையுடையது தமிழ். அதன் இலக்கணம்தானே அதை வேலியிட்டுக் காத்தது. அது குறித்து நம் சூழலில் ஓயாது உரையாட வேண்டும்தானே நாம் ? ஆனால், டீக்கடை இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் ஜோதிட அறிவு பரவிய அளவுக்குக்கூட இங்கே இலக்கண அறிவு பரவவில்லை. அதனால்தான் நான் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இலக்கணம் கற்பிப்பதையும் இலக்கணம் குறித்த உரையாடலைத் தோற்றுவிப்பதையும் நோக்கமாகக் கொண்டேன். மக்கள் நன்கு இலக்கணம் கற்பிப்பவரைத் தோள்மீதமர்த்திக் கொண்டாடுகிறார்கள். அதை நான் உணர்ந்தேன்.

நன்றி:
புத்தகம் பேசுது - பிப்ரவரி 2016.