மாறா நிரல்
உங்களைப் போலவே நானும்
காலையில் அலுவலகம் கிளம்புகிறேன்.
என் நீலநிறப் புரவியை
அதன் தாங்கியிலிருந்து நகர்த்தி ஏறி அமர்கிறேன்.
கிளப்பியதும் அது எழுப்பும் ஒலியில்
என் கர்வத்தின் துகள்கள் சில
காற்றில் கலக்கின்றன !
மெல்ல அதன் வேகத்தை முடுக்கி
நெடுஞ்சாலை வந்தடைகிறேன்.
அங்கே
என்னைப் போலவே உங்களைப் போலவே
எல்லாரும்
தாங்கள் உடனே சென்று
பொருந்திக்கொள்ள வேண்டிய
பொந்து நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறார்கள் !
அவ்வமயம்
மளிகைக் கடைகளும் தேநீர்க் கடைகளும்
முதல்சுற்று வணிகம் முடிந்த களைப்பில்
மூழ்கியிருக்கின்றன.
நகரப் பேருந்துகள்
எந்த நிறுத்தத்திலும்
கழியவே கழியாத கூட்டத்தோடு
என் உடன்வருகின்றன.
பள்ளிகளின் கொடுவாய்களில்
பிள்ளைகள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்.
நொய்யலோரப் பாதை வருகிறது !
தொண்டையிலிருந்து திரட்டி
கையளவு எச்சில் துப்புகிறேன்.
விபூதியிட்ட சாக்குக் கடைக்காரர்
முதல் கோணிப்பையைத் தைத்துவிட்டு நிமிரும் தருணம்
நான் அவரைக் கடக்கிறேன்.
இது எப்பொழுதும் நிகழ்ந்தபடியிருக்கிறது !
சமணக் கோயிலருகில்
மேலுதட்டில்
வியர்வை அரும்ப விரையும் பெண்ணை
தினமும் எதிர்கொள்கிறேன்.
அவளைக் கண்டதும்
என் வண்டியின் வேகத்தை நான் தணிப்பதும்
என்னைக் கண்டதும்
தன் நடையின் வேகத்தை அவள் கூட்டுவதும்
நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
செத்த இரும்புகளால் ஆன சரக்கு ரயில் ஒன்று
நிலையத்தில் நிற்கிறது.
மேம்பாலத்தைக் கடக்கிறேன்.
முச்சந்தியில் எல்லா வாகனங்களையும்
மறித்துப் பின் அனுப்பும்
புதிய போலீஸ்காரியின் விதியை
எண்ணி எனக்குள் நகைக்கிறேன்.
என் அலுவலகம் வந்துவிட்டது !
இருக்கையிலமர்ந்ததும்
ஒலிக்கும் தொலைபேசியை எடுக்கிறேன்
‘சார்... சொல்லுங்க...!’