Saturday, November 5, 2016



கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா ? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா ? அவர் இராமாயணத்தைத் தமிழ்க் காவியமாக எழுதியதாலா ? இல்லை. கம்பர் நாளொன்றுக்கு ஏழ்நூறு செய்யுள்களை இயற்றுவார். பார்க்கும் பொருளெல்லாம் அவருக்குக் கவிதைப் பொருளே. ஒன்றைக் கண்ட நொடியில் அடைமழை பொழிவதுபோல் வெண்பாக்களோ விருத்தங்களோ கூறவல்லவர் கம்பர். அதனால்தான் அவர் கவிச்சக்கரவர்த்தி. தமிழ்க் கவிஞர் பெருமக்களுள் கம்பர் அளவுக்கு அரசனை எதிர்த்து நின்றவர் வேறு யாருமிலர் என்றே தோன்றுகிறது. கம்பர் அடையாத பெருமையுமில்லை. கம்பர் படாத துன்பமுமில்லை.
கம்பர் சோழ நாட்டில் உள்ள திருவழுந்தூர் என்ற ஊரில் பிறந்தவர். கம்பரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். சிலர் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பர். கம்பரின் குடும்பத்தார் அங்கிருந்த காளி கோவிலில் பூசை செய்யும் உரிமை பெற்றிருந்தனர். இளமை முதலே மடைதிறந்த வெள்ளம்போல் செய்யுள் இயற்றும் திறமையைப் பெற்றிருந்தார். கம்பர் கவிதை இயற்றும்பொழுது காளி தேவியே தீப்பந்தம் பிடித்ததாகச் செவிவழிக் கதைகள் உள்ளன.
இளமையிலேயே கவிபுனையும் ஆற்றலோடு விளங்கிய கம்பரைப் பற்றிக் கேள்வியுற்ற திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல், அவர்க்கு அனைத்து வகையான கல்வியையும் புகட்டினார். சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்ட கம்பர் பிற்காலத்தில் அவரைப் புகழ்ந்து பலவிடங்களில் பாடியிருக்கிறார்.
கம்பரின் கவியாற்றலை அறிந்த சோழ மன்னன் குலோத்துங்கன் அவரை வரவழைத்துத் தம் அவையில் வீற்றிருக்கச் செய்தான். சோழனின் அவையில் தலைமைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர்.
கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் அழைத்த சோழ மன்னன், இராமகாதையைத் தமிழிற் செய்யுமாறு வேண்டிக்கொண்டான். அதன்படி கம்பர் இயற்றிய பெருங்காவியமே ‘கம்ப இராமாயணம்.” இராமசரிதையைத் தமிழ் நிலத்திற்கேற்றவாறு புதிதாய்ப் பாடினார் கம்பர்.
மன்னன் கட்டளையிட்டதும் ஒட்டக்கூத்தர் இராப்பகலாக உட்கார்ந்து இராமகாதையை எழுதிக்கொண்டிருந்தார். கம்பர் மன்னனின் கட்டளை பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கணிகையர் வீடுகளில் தவங்கிடந்தார். கம்பரின் இந்தப் போக்கால் சினமுற்ற சோழன் இருவரையும் அழைத்து ‘இராமாயணம் எழுதும் பணி எந்நிலையில் இருக்கிறது ?’ என்று வினவினான். ஒட்டக்கூத்தர் தாம் பாதிவரை எழுதி முடித்துவிட்டதாகக் கூறினார்.
ஒட்டக்கூத்தர் எழுதியதைவிட தாம் மிகுதியாய் எழுதியதாய்க் கூறவேண்டுமென்று விரும்பிய கம்பர், தாம் முக்கால்வாசி முடித்துவிட்டதாய்க் கூறினார். உண்மையில் அவர் ஒரு பாட்டைக்கூட எழுதியிருக்கவில்லை. ஐயுற்ற மன்னன் கம்பரிடம் அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றைக் கூறும்படி கேட்க, கம்பர் மடைதிறந்த வெள்ளம்போல் எண்ணற்ற செய்யுள்களைக் கூறினாராம். அதனால் மகிழ்ந்த மன்னன் தன் ஐயம் தீர்ந்தான்.
கம்பர் கூறிய அந்தச் செய்யுள்களுக்கு முன், கம்பர் எழுதிய இராமாயணத்தின்முன் - தாம் எழுதியவை நிகரில்லை என்றுணர்ந்த ஒட்டக்கூத்தர், அவற்றையெல்லாம் கிழித்தெறிந்தாராம். அது கேள்வியுற்ற கம்பர், அவரிடம் சென்று அவரைத் தேற்றி, ஒட்டக்கூத்தர் எழுதிய உத்தரகாண்டத்தைத் தம் நூலோடு சேர்த்துக்கொண்டார்.
கம்ப இராமாயணத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றச் சென்றார் கம்பர். அங்கிருந்தவர்கள் தில்லைத் தீட்சிதர்கள் பரிந்துரைத்தால் அரங்கேற்ற ஒப்புவதாகக் கூறினர். அதனால் கம்பர் தில்லைக்குச் சென்றார். மூவாயிரம் தீட்சிதர்களிடம் ஒருமனமாக எப்படி ஒப்புதல் பெறுவது என்று கம்பர் திகைத்து நின்றார் அங்கே.
அவ்வமயம் அங்கே பாம்பு கடித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவனைக் கவிபாடி உயிர்ப்பித்தார்.
மங்கையொரு பங்கர் மணிமார்பில் ஆரமே,
பொங்குகடல் கடைந்த பொற்கயிறே, – திங்களையும்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே,
ஏறிய பாம்பே இறங்கு.
– என்பது அவர் பாடிய பாடல்களில் ஒன்று.
கம்பர் பாடியதால் உயிர்பெற்றெழுந்தான் சிறுவன். அதனால் அகமகிழ்ந்த மூவாயிரம் தில்லைத் தீட்சிதர்கள் ஒருங்கே மனமொப்பி கம்பர் இராமாயணம் பாட இசைவெழுதித் தந்தனர்.
அந்த இசைவைப் பெற்றுக்கொண்டு திருவரங்கம் வந்த கம்பர் சடகோபர் அந்தாதி பாடித் தொடங்கி, கம்ப இராமயணத்தை அரங்கேற்றினார். இதனால் கம்பரின் புகழ் நாடெங்கும் பரவிற்று.
ஒருமுறை குலோத்துங்கச் சோழன் மேல்மாடத்தில் உலவுகையில் ‘இப்புவியெல்லாம் எனக்கடிமை” என்றான். வேந்தனைவிடவும் கவிஞனே உயர்வு என்பதை உணர்த்த விரும்பிய கம்பர் ‘புவியெல்லாம் உனக்கடிமை. நீவிர் எனக்கடிமை” என்றாராம். இதனால் சோழன் கம்பரைச் சினந்துவிட்டான்.
தம்மைக்காட்டிலும் சடையப்ப வள்ளலையே புகழ்ந்து பாடுவதால் கம்பர்மீது சோழனுக்கு ஏற்கெனவே வெறுப்பு இருந்தது. அதன்பிறகு அங்கிருக்கத் தகாதென்று உணர்ந்த கம்பர், “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ….” என்றவாறு சோழ நாட்டை நீங்கினார். பிறகு பாண்டிய நாட்டுக்கும் ஓரங்கல் நாட்டுக்கும் சென்றிருந்தார்.
சோழனை நீங்கியதும் கம்பர் வறுமையுற்றார். குறுநெல்மணிக்காகப் பாட வேண்டிய துயருற்றார்.
ஆந்திரத்திலுள்ள ஓரங்கல் நாட்டுக்குச் சென்று ‘பிரதாப உருத்திரன்” என்னும் மன்னனின் அன்பைப் பெற்று வாழ்ந்தார். கம்பரின் கவியாற்றலால் ஈர்க்கப்பட்ட பிரதாபன் அவர்க்கு வேண்டியன அனைத்தும் செய்து அவரைச் சோழநாட்டுக்குக் கொணர்ந்து சேர்ப்பித்தான்.
கம்பனின் மகன் அம்பிகாபதி கதை நமக்குத் தெரியும். சோழன் மகளைக் காதலுற்றதால் அவன் கொல்லப்பட்டான். நாமறியாத இன்னொன்றும் உள்ளது. கம்பருக்குக் காவேரி என்றொரு மகளும் இருந்தாள். கவிஞனின் மகள் பேரழகியாய் இருப்பாள்தானே ? கம்பர் மகள் காவேரியும் காவிரியை நிகர்த்த பேரழகி. அவள்மீது தீராத காமமுற்ற சோழன்மகன் ஒருவன் அவளைத் தொடர்ந்து துரத்தி வந்தான். இவனிடம் சிக்கிச் சின்னாபின்னப்படுவதைவிட உயிர்துறத்தலே மேலென்று நினைத்த கம்பன் மகள், காவிரி வெள்ளத்தில் குதித்து உயிர்நீத்தாள்.
மகனையும் மகளையும் இழந்த கொடுந்துயர் தாளாமல்தான் கம்பர் சோழ நாட்டை நீங்கினார் என்பாரும் உளர்.
பிறநாட்டு அரசனின் அன்பைப் பெற்றவராய் நாடு திரும்பியிருக்கும் கம்பரைக் கண்டு சோழன் அஞ்சினான். கம்பரிடம் சோழமன்னன் குலோத்துங்கன் நைச்சியமாய் மீண்டும் நட்பு பேணிக் கொன்றுவிட்டான்.
அரண்மனைக்குக் கம்பரை வரவழைத்து அவர்மீது புலியை ஏவினான். கம்பரைக் கண்டு அந்தப்புலி கொல்நினைவின்றி அன்பு காட்டி நின்றதாம். அதனால் சோழனே அம்பெய்தி கம்பரைக் கொன்றான். அம்புபட்ட மார்போடு கம்பர் விட்ட சாபம்தான் சோழர் பரம்பரையை வேரோடு சாய்த்து உருத்தெரியாமல் ஆக்கிற்று.
மரணத்தறுவாயில் கம்பர் பாடிய பாட்டு :-
வில்லம்பு சொல்லம்பு மேதகவே யானாலும்
வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து – வில்லம்பு
பட்டுருவிற்று என்னை; என் பாட்டம்பு நின்குலத்தைச்
சுட்டெரிக்கும் என்றே துணி.
அதன்பின் பகைவர்கள் படையெடுத்து வந்து சோழ தேசத்தைக் கைப்பற்றினர். சோழர் பரம்பரை அழிவுற்று மண்ணோடு மண்ணாய்ப் போனது.
சோழனால் தம் மக்களைப் பறிகொடுத்த கம்பர் இறுதியில் அவனாலேயே கொல்லப்பட்டுத் தம் இன்னுயிரை இழந்தார்.
கம்ப இராமாயணத்தின் இலக்கிய நலன்கள்தாம் நாமறிந்தவை. அதை இயற்றிய கம்பர் தம் வாழ்வில் அரச பீடத்தைத் தொடர்ந்து உறுத்தினார். நாம் கற்பனையிலும் நினையாத போராட்ட வாழ்வைத்தான் வாழ்ந்து மறைந்தார்.


மேலை நாடுகளில் ஷேக்ஸ்பியரைப் பற்றி எண்ணற்ற நூல்களும் திரைப்படங்களும் வெளியாகின்றன. ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வாழ்க்கையைவிடவும் கொந்தளிப்பும் உயிர்ப்பதைபதைப்பும் காவியத் துயரங்களும் மிகுந்த வாழ்வு கம்பருடையது.
- கவிஞர் மகுடேசுவரன் 

4 comments:

  1. சிறப்பாக சொன்னீர்கள்..நன்றியும் வாழ்த்துகளும்..

    ReplyDelete
  2. அருமை.. தெரியாத நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன் ஐயனே.. மகிழ்ச்சி

    ReplyDelete
  3. இதில் கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து அளந்து விடப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. கம்பன் புதுக்கோட்டை மாவட்டம் தாட்டரசன் கோட்டையில் நான்று கொண்டு செத்ததாக சரித்திரம். இதற்கு ஆதராமாக கம்பனின் சமாதி அங்கு உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நாட்டரசன் கோட்டை என திருத்தி படிக்கவும்

      Delete