Sunday, October 6, 2013

வலி மிகுதல் - தொடர் 2


இரண்டு பெயர்ச் சொற்களுக்கிடையே எளிதில் வலி மிகும் என்று பார்த்தோம். அடுத்து, சொற்கூட்டங்களின் பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள சொல்லை அடுத்து வருவது வல்லினமாக இருந்தால் கட்டாயம் வலிமிகும். இந்த விதியைக் கேள்வியே இல்லாமல் பின்பற்றலாம். வலிமிகுதலில் எல்லாருமே தவறவிடும் இடம் இதுதான். அந்தச் சொற்களின் பட்டியல் இதோ :-

அ, இ, எ


அந்த, இந்த , எந்த


அங்கு, இங்கு, எங்கு

ஆங்கு, ஈங்கு, யாங்கு

அப்படி, இப்படி, எப்படி

ஆண்டு, ஈண்டு, யாண்டு

அவ்வகை, இவ்வகை, எவ்வகை

அத்துணை, இத்துணை, எத்துணை

இனி, தனி

அன்றி, இன்றி

மற்ற, மற்றை

நடு, பொது, அணு, முழு, புது, திரு

அரை, பாதி, எட்டு, பத்து, முன்னர், பின்னர்

இவற்றை அடுத்து வல்லினம் வந்தால் கட்டாயம் வலி மிக வேண்டும். நாம் இவற்றில் வலி மிகுதலைப் பெரும்பாலும் அனுசரிப்பதில்லை.

பாரதியார் ‘அங்கு சென்றான்’ என்றே எழுதுவாராம். அங்குச் சென்றான்’ என்று வலி மிகுவித்து எழுதுவதே சரி. நண்பர்கள் பாரதியிடம் ‘அங்கு சென்றான் என்றெழுதுவது தவறாயிற்றே... நீரே இப்படிச் செய்யலாமா ?’ என்று வினவுவார்களாம். ‘தவறுதான் ஓய்... அங்குச் சென்றான் என்றெழுதினால் நன்றாகவே இல்லை... அதனால்தான் அங்கு சென்றான் என்றே எழுதுகிறேன்...’ என்பாராம் பாரதியார்.

இவ்விடங்களில் வலி மிகுவித்து எழுதுவதே பிழையற்றிருக்கும். மிகவும் பல் கூச்சமெடுக்கும் பயன்பாடாக இருக்கிறதே என்று கருதினால் எழுதும் ஆசிரியரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல், அணுகுண்டு என்று பிழையாக எழுதுகிறோம். அணுக்குண்டு என்பதுதான் சரி.

1 comment:

  1. அனுசரிப்பதில்லை என்பது உண்மை தான்...

    ReplyDelete