Monday, December 8, 2014

கடன் என்ப...

உலக மொழிகள் சிலவற்றில் ‘பொய்’ என்ற வார்த்தையே இல்லையாம். அதற்கு என்ன அர்த்தம் ? அவர்கள் வாழ்க்கையில் பொய் என்பதே இல்லை என்று அர்த்தம். எதையும் மாறாக மறைத்துச் சொல்லவே மாட்டார்கள் என்று அர்த்தம். அதுபோல் நம் மொழியில் கடன் என்ற சொல் உள்ளது. அது ஆங்கிலச் சொல்லான லோன் என்னும் பொருளைத் தருவதன்று. கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்பதே பொருள். கடன் என்பதற்குக் கடப்பாடு, முறைமை ஆகியனவும் நம் தொன்மையான பொருள்கள். ஒருபோதும் அச்சொல்லுக்குத் தற்கால வழக்கில் வழங்கப்படும் கடன் என்ற பொருள் கிடையாது. என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்றால் என் கடமை என்றே ஆகும். திருக்குறளில் இடம்பெறும் கடன் என்னும் சொல் கடமையைத்தான் குறிக்கிறது.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்(கு)
உப்பாதல் சான்றோர் கடன்.
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
இவையாவும் கடன் என்னும் சொல்லைக் கடமை என்ற பொருளில் பயின்ற குறட்பாக்கள். நாம் கடன்பெற்று வாழ்ந்தவர்கள் அல்லர். கொடை தருவதைப் பண்பாடாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் கொடுத்தலும் பெற்றுக்கொள்வதும் எந்த நெருக்கடியுமற்ற இயல்பான நடத்தையாக இருந்தது. சுமார் இருபதாண்டுகளுக்கு முன்வரைகூட கடன் என்பது நம்முன் வைக்கப்பட்ட வாழ்க்கை நிர்ப்பந்தமாக இருக்கவில்லை. ஆனால், தற்காலத்தில் நிலைமையே வேறு.


அப்போதும் நமக்கு வீடுகள் இருந்தன. விவசாய நிலங்கள் இருந்தன. கல்வி பயின்றோம். வாழ்க்கைக்குப் பல்வேறு தேவைகள் இருந்தன. யாரும் கடன்பட்டுக்கொண்டிருக்கவில்லை. ‘அவங்களுக்குக் கடன் இருக்குதாமா...’ என்பது அதிர்ச்சிகரமான ஒரு கிசுகிசுப்பாகப் பரவிய நிலையும் இருந்தது. ஊரெல்லாம் கடன்வாங்கி வைத்திருப்பவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். சிறுசிறு கைமாற்றுகள் பண்ட மாற்றுகள் ஆகியவை இருந்தன. அதற்கே கடப்பாடுற்றவர்களாய் உறங்கமாட்டார்கள்.
நீங்கள் மாதச் சம்பளக்காரர்களாக, தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள். குடும்பத் தலைவர் அல்லது தலைவி. உங்களுக்கு வருமானம் வருகிறது. எல்லாரும் வளர்ந்து பொருள் செய்கின்றோராகத்தான் மாறுகிறோம். இந்த உலகத்தின்மீது நமக்குள்ள ஒரே அதிகாரம் நாம் ஈட்டிக்கொள்கின்ற நம் பணம்தான். அதைக்கொண்டு நம் தேவையை நிறைவேற்றுகிறோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியனவற்றுக்காகச் செலவிடுகிறோம். கல்விக்கும் மருத்துவத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் மனமகிழ்வுக்கும் நம் பணத்தைச் செலவிடுகிறோம். நம் சம்பாத்தியத்தில் செலவுபோக கணிசமாக மீதமாகிறது. அவற்றைச் சேமிக்கிறோம். சேமித்தவற்றைக்கொண்டு செயற்கரிய செயல் ஒன்றைச் செய்துகொள்கிறோம். அல்லது பற்றாக்குறையான காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறோம். வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் செல்கிறது. இது ஒரு வகை.
இன்று உங்களால் அதுபோல் வாழமுடியுமா ? கல்வியை விற்கிறார்கள். கல்விப் பருவத்திலிருந்தே நம்மைக் கடனாளி ஆக்குகிறார்கள். கற்றுவெளிவந்தபின் அந்தக் கல்வியைக்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும். சம்பாதித்தவுடன் முதற்கடமையாக பழைய கடன்களை அடைக்க வேண்டும். உணவுக்கு நிறையச் செலவாகிறது. போக்குவரத்துக்கு வாகனம் வேண்டும். அதைக் கடன்பட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். உடைகள் கொள்ளை விலை விற்கின்றன. அந்தச் செலவுகளையும் சமாளிக்கவேண்டும். உறைவிடம் என்றால் நமக்குச் சொந்த வீடு பூர்வீகத்தில் இருக்கும்தான். ஆனால் பூர்வீகத்தில் நாம் உயிர்வாழும் வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன. நகர் நாடிப் பிழைக்கிறோம். நகரத்தில் வீட்டுவாடகை கட்டுக்கடங்குவதில்லை. அங்கே இடத்திற்கும் கொள்ளைவிலை. வீடு வாங்கிக்கொள்வதன் மூலம் வாடகையையும் வரிப்பிடித்தத்தையும் மீதமாக்கிக்கொள்ளலாம் என்ற மாயையில் நம்முடைய ஒட்டுமொத்த எதிர்கால வருமானத்தை எழுதிக்கொடுத்து வீடு வாங்கிக்கொள்கிறோம். அடுக்குமாடி வீடு என்றால் வாடகைக்கு நிகரான பணத்தை ‘பராமரிப்பு மற்றும் இதர பிறவற்றுக்காக’ அழுவோம். நாம் உயிரோடிருப்பதற்கு வேண்டிய சிறுதொகைபோக மீதத்தொகையை அந்த வீட்டுக்காக இருபதாண்டுகள் தொடர்ச்சியாகக் கட்டுவோம். கட்டி முடித்தபின் நம் பொருளீட்டும் ஆற்றல் முற்றாக வடிந்திருக்கும். நம்மை நாமே கைவிடக்கூடிய பொருளாதார விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருப்போம். நீங்கள் அவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். ஒருபோதும் எதுகுறித்தும் கேள்வி கேட்க மாட்டீர்கள். அருகில் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தானா... நம் இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றனவா... நம் தலைமாட்டில் அணு உலைகள் தகிக்கின்றனவா... கல்விக்கொள்ளையா... மருத்துவத்தில் இரத்தம் உறிஞ்சுகின்றனரா... குடியடிமைத்தனம் பெருகிவிட்டனவா... எங்கும் ஊழலா... பெண்களும் குழந்தைகளும் எல்லாச் சீரழிவுக்கும் ஆளாகின்றனரா... எவனோ எப்படியோ போகட்டும். உங்களுக்கு மாதம் பிறந்தால் இஎம்ஐ கட்டியாகவேண்டும். தலையைக் குனிந்துகொண்டு வாழ்பவராய், சூடு சுரணையற்ற ஜென்மமாய், தன்னலவாதியாய் மாற்றப்பட்டுவிட்டீர்கள். இனி உங்களைக் குறித்து யார்க்கும் அச்சமில்லை. நீங்கள் முடித்துக்கட்டப்பட்டுவிட்டீர்கள்.
நீங்கள் கேட்கவேண்டும்... யார்வந்து யார்க்குக் கடன் கொடுப்பது ? கடன்படவேண்டியவர்களா நாம் ? என் அழகிய பொருள்பொதிந்த வாழ்க்கை கடன் துளையை அடைப்பதற்காக ஆயுள்முழுக்க அல்லாடுகின்ற ஒன்றா ? அப்படி என்ன வெங்காயத்தை நான் பெற்றுக்கொள்ளப்போகிறேன் ? என் கல்விக்கு எப்படி விலைவைத்தாய் ? என் உறைவிடத்துக்கும் அதன் நிழலுக்கும் எட்டாத விலை வைத்தவர் யார் ? என் தேவைக்கும் ஈட்டலுக்கும் பொருந்தாச் சமனை உருவாக்கியவன் எவன் ? நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் கேட்கமாட்டீர்கள். உங்களுக்குக் கடன் இருக்கிறது. மாதம் ஆயிரத்தைந்நூறு கட்டுவதுபோல் ஒரு பைக் வாங்கினீர்கள். ஒருதவணை பிசகட்டுமே. உங்கள் ஏழ்பிறப்புக்கும் மறவாத ஈன விசாரணையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். இத்தனைக்கும் மறுநாள் உரிய வட்டியோடும் தண்டத்தோடும் செலுத்தச் செல்கிறீர்கள்தான். கட்டாதபோது வண்டியை எடுத்துக்கொள்ளலாம் அவன். ஆனால், உங்கள் தன்மானத்தைக் குத்திக் குதறியெடுப்பதில் உங்களுக்குக் கடன் கொடுத்தவன் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சொற்களில்தாம் எத்துணை அதிகாரம் ? அடிமைபோல் உணரவேண்டும் நீங்கள். ஆனால் கமுக்கமாக இருந்துகொள்வீர்கள். இந்தச் செயலில் இருப்பவன்தான் நம் வங்கியாளன்.



என் நண்பர்களிடம் நான் சொல்கின்ற அறிவுரை இரண்டே இரண்டு: குடிக்காதே... கடன் வாங்காதே...! குடிப்பதில் மதுவும் புகையும் அடக்கம். குடியடிமை மீள்வதில்லை. தன்னைக் கொன்றுகொண்டிருக்கும் அவன் தன்னையே இழிவுபடுத்திக்கொண்டவன். தன்னின்பத் தருக்கன் அவன். உங்கள் நுரையீரலின் காற்றை உறிஞ்சும் திறனுக்குப் பெயர்தான் உயிர். பிராணமய. புகைப்பதன் மூலம் அந்தக் கருவியைப் பொசுக்குகிறீர்கள். குடியும் புகையும் உள்ளவர்கள் ஏதோ ஓரிடத்தில் தன்னை, தன்சார்ந்தவர்களை மொத்தமாகக் கைவிட்டுவிடுவார்கள். அவனைச் சார்ந்திருக்கும் உறவுகள் நரகத்தில் உழல்வோரே. இதைப் போதிக்கவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாரும் குடியடிமைகள். அதனால் அவர்கள் இதுகுறித்த மாற்றுப்பார்வை என்பதுபோல் நீட்டி முழக்குவார்கள். அவை பயனற்றவை. அடுத்து கடன் வாங்குவது. பத்தாயிரம் ரூபாய் ஓரிடத்தில் வாங்கிக்கொண்டு ஒருமாதம் கழித்து அதே பத்தாயிரமாகத் திருப்பிக்கொடுப்பது கைமாற்று. இது நம் வலுவுக்கடங்குகின்ற ஒன்று. சுற்றோட்டத்தில் சிறு நிகழ்வு. யார்க்கும் பாதிப்பில்லை. எங்கும் வழக்கமாக இருக்கின்ற ஒன்று. ஆனால், வட்டி என்கின்ற ஒன்று தோன்றுமிடத்திலும், நம் வாழ்க்கையின் பெரும்பகுதி தவணையாய் அடைக்கவேண்டிய பகாசுரக் கடனுக்கு இலக்காகும் இடத்திலும் நீங்கள் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொள்கின்றீர்கள். அங்கே நீங்கள் சுரண்டப்படுகிறீர்கள். கடன் என்ற மாயையில் விழுந்து ஏமாறுகிறீர்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கடன்பட்டு பத்து இலட்சத்துக்கு வீடு வாங்கினேன். இப்போது அந்த வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். எனக்கு எவ்வளவு இலாபம் தெரியுமா ? கடன்வாங்காதிருந்தால் இவ்வாய்ப்பை இழந்திருப்பேனே... இப்படிச் சொல்கிறவர்கள் ஏராளம். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் மிகப்பெரிய பொருளாதாரப் போக்குகளின் சிறுகண்ணிகள். 1998-இல் பத்து இலட்சத்துக்கு வாங்கிய வீட்டின் மதிப்பைத் தங்கத்தில் பாருங்கள். அப்போது பவுன் விலை ரூ. 3200. அந்தப் பத்து இலட்சத்துக்கு 312 பவுன்கள்/சவரன்கள் வாங்கியிருக்கலாம். இப்போது அவ்வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். இன்றைய பவுன் விலை ரூ. 20000 எனக்கொள்வோம். அந்த நாற்பது இலட்சத்துக்கு 200 பவுன்கள் மட்டுமே வாங்க முடியும். உங்கள் சொத்து மதிப்பு - சுமார் நூறு சவரன்கள் அளவுக்குக் காணாமல் போயிருக்கின்றது. எண்கள் பெருகிவிட்டனவேயொழிய மதிப்புயரவில்லை. ஒருவேளை அவ்வீட்டின் தற்கால மதிப்பு அறுபது இலட்சம் எனில் எந்த உயர்ச்சியும் ஏற்படவில்லை. எண்பது இலட்சம் என்றால் போட்ட முதலுக்குக் கொஞ்சூண்டு வட்டி கிடைத்திருக்கிறது. பெருந்தொகைக்குச் சொத்துகளை விற்பது அத்துணை எளிதன்று. உங்கள் ஒற்றைக் கையெழுத்தையோ அல்லது இசைவான ஒரு தலையசைப்பையோ வைத்துக்கொண்டு உங்கள் அசையாச் சொத்தைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் ஈனக்கூட்டம் ஒன்று அரசியற்பலத்தோடு ஸ்கார்பியோக்களில் திரிவதை அப்போதுதான் உணர்வீர்கள்.
அடுத்து 1991 முதல் 2010வரை மதிப்புயர்ந்ததுபோல் இனியும் ஆகும் என்றெண்ணாதீர்கள். 1975முதல் 1989வரை இந்நாட்டின் சொத்துகள் எந்த விலையுயர்ச்சியையும் பெரிதாகக் காணவில்லை. எல்லாம் அப்படியப்படியே கிடந்தன. கடந்த 2011க்குப் பிறகு தங்கம் வெள்ளி போன்றவற்றின் விலை தம் உயர்ச்சியைத் தக்கவைக்கமுடியாமல் சன்னஞ்சன்னமாகச் சரிந்துகொண்டிருக்கின்றன. இனி அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு இத்தகைய நிலையே நீடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? நிலத்தின் விலைகள் தடுமாறுகின்றன. நில வியாபாரிகள் ஒருபோதும் தங்கள் நிலங்களை இருப்பாக வைத்துக்கொள்ளமாட்டார்கள். நிலத்தை விற்று விற்று பணமாக்கிக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஏன் அவர்கள் விற்பது விலையேறுகின்ற ஒன்றாயிற்றே... வைத்துக்கொள்ளலாமே. மாட்டார்கள். அங்கே நீங்கள் இலக்காவீர்கள். வரிக்குப் பயந்து வீட்டுக் கடன்களை வாங்காதீர்கள். எண்ணெய்ச் சட்டிக்குள் விழப்பயந்து எரிக்குள் விழுவதைப் போன்றதுதான் அது. எழுபதாயிரம் எண்பதாயிரம் வருமானம் உள்ள உங்களால் ‘பத்தாயிரம் சேமிக்கிறேன்’ என்று சொல்ல முடியவில்லை என்றால் உண்மையில் நீங்கள் யார் ? இங்கே சம்பாதித்து எங்கோ எடுத்தெறிகின்ற ஊதாரியா ? வெறும் பணமாற்று நிலையமா ?
ஒவ்வொரு ஆயிரமாகச் சேமியுங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். முதல் ஒரு இலட்சத்தைச் சேர்க்கும்வரைதான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த இலட்சங்கள் எளிதில் சேரும். சேமிப்பின் ஆற்றலை உங்கள் செலவுகளின்மீது உணருங்கள்.
ஒவ்வொரு மாரடைப்புக்குப் பின்னால், ஒவ்வொரு விபத்துக்கும் காரணமான மனக்குழப்பத்திற்குப் பின்னால், ஒவ்வொரு உறவுப் பிரிவுக்கும் பின்னால், ஊர்ப்பெயர்வு தேசப்பெயர்வு இடப்பெயர்வு அவமானம் தற்கொலை ஆகியவற்றுக்கும் பின்னால் நிச்சயமாக ‘ஒரு கடன் தொல்லை’ இருந்திருக்கிறது. அது சிறிதோ பெரிதோ - அவரவர் தகுதிக்கேற்ற துன்பச்சுமை. தொழிற்கடனையும் குடும்பக்கடன்களையும் ஒன்றாகப் பாவிக்காதீர்கள். இரண்டின் அளவீடுகளும் வெவ்வேறு. தொழிற்சாலைகளை இழுத்துப் பூட்டியபின் சேதாரமில்லாமல் வெளியேறுகின்றவர்கள் முதலாளிகள். முதற்கடனை வெற்றிகரமாகக் கையாண்ட மயக்கத்தில் அடுத்த கடனுக்கும் போகாதீர்கள். அடுத்தடுத்த ஒன்றில் வசமாகச் சிக்கிக்கொள்வீர்கள். சூடுபட்ட பூனையாகத் தள்ளியிருங்கள் !
இந்த நிமிடமே என் கடனைத் தீர்க்க முடியும் என்ற நிலையில் கடன் வாங்கலாம். எனக்கும் சிறிய வீட்டுக்கடன் உண்டு. வீட்டுக்கடன் என்றால் என்ன என்று உணர்வதற்காகவே அதை வாங்கினேன். அதுவே தவறு, மடத்தனம் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஆனால், அக்கடனை இந்த நிமிடம் என்னால் தீர்த்துக்கொள்ளவும் முடியும். எனக்குக் கடனட்டை இல்லை. கைப்பேசியொன்றைக் குறிப்பிட்ட வங்கிக் கடனட்டையைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாகப் பத்து விழுக்காடு தள்ளுபடி என்பதற்காக விளையாட்டுப்போல் கூட்டாளியின் கடனட்டையில் வாங்கிக்கொண்டேன்.
வேறு வழியே இல்லை என்றால் - நாம் பட்டுள்ள கடனை அந்தக் கணமே முறித்துக்கொள்ள முடியும் என்ற வலிமையான இடத்தில் நீங்கள் இருந்தால் - உங்கள் தேவைக்குச் சிறு பகுதியாக மட்டுமே கடன் வாங்குங்கள். அதை நீங்கள் நிர்வகிப்பீர்கள். வீட்டுக் கடனே என்றாலும் மூன்றில் ஒருபகுதிக்கு மட்டுமே கடன்படுங்கள். எண்பத்தைந்து விழுக்காடுவரை என்பதெல்லாம் வேண்டா. வளர்ந்த நாடுகளில் வீடுகள் என்பவை மதிப்பிழந்த சொத்துகள். சொல்வதற்கு இன்னும் ஓராயிரம் உள்ளன. பிறிதொரு நாள் மேலும் சொல்கிறேன். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று செய்வான் வினை - குன்றின்மீதிருந்து யானைப்போர் காண்பதைப்போன்றது நம் கையிலுள்ள பொருளைக்கொண்டு செய்கின்ற வினை. 

பின்குறிப்புகள் : 

1. 
இரண்டு இலட்சத்துக்கு வாங்கியது இருபது ஆகலாம். நாற்பதுகூட ஆகலாம். பத்துக்கோடி ஆகியிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஆகும் என்றால் அம்பானி எண்ணெய் சுத்திகரிக்க மாட்டார். அம்பத்தூரில் வாங்கிப் போடுவார்.  கொங்கு பகுதிகளில் மின்வெட்டால் எல்லாச் சொத்துகளும் விலையிறங்கின. 2000-இல் வாங்கிய இடம் ஒன்றை இன்றும் விற்கமுடியாத நிலையுள்ளது.

2. 1991 முதல் 2010 வரை ஏறிய விலையேற்றத்தின் மனப்பதிவுகளை மக்களிடமிருந்து அகற்றுவது பெரும்பணியாகத்தான் இருக்கும்போலுள்ளது. அந்த விலையேற்றம் மதிப்பேற்றம் இல்லை என்பதையும் பதிவில் விளக்கியுள்ளேன். எல்லார் உள்ளத்தையும் அரம்போன்று அறுத்துக்கொண்டிருப்பது நிலத்தின் விலையேற்றம். அந்த நிலத்தை சென்ட் முந்நூறு ரூபாய்க்கு விற்றுச் சென்ற குடும்பமும் அதை ஏதோ ஒரு கடனுக்காகத்தான் விற்றிருக்கும். அக்குடும்பத்தினர் நிலையை நினைத்துப் பார்க்கலாம். அவர்களும் இன்றும் அருகிலேயேதான் இருப்பர். ஆனால், அப்படியெல்லாம் சிந்திக்கமாட்டோம். நம் அக்கறைகளை வேறாக மாற்றிவிட்டார்கள். அடிபட்டுத் துள்ளத் துடிக்கச் சாகக் கிடப்பவனைப் பார்த்தும் பாராததுபோல் போகும்படி ஆக்கியவை நம் பொருளாதாரப் போக்குகள். கடன் அடைக்க வேண்டும். சம்பாதித்து நிலம் வாங்கிப் போடவேண்டும். உண்மையில் நாம் அத்தகைய கொடூர நெஞ்சத்தினர் அல்லர். ஆனால் நம்மையே அப்படி ஆக்கிவிட்டார்கள்.

5 comments:

  1. தொலைக்காட்சியில் சுருக்கமாக... இங்கே விளக்கமாக...

    பட்டு தெரிந்தால் சிலருக்கு அல்ல அல்ல... பலருக்கும் தெரிகிறது... புரிகிறது...

    ஆனால் புரியும் போது தெம்பு இருப்பதில்லை - மனதிலும், உடம்பிலும்...

    ReplyDelete
  2. அருமை, இது முகநூலில் பதியப்பட்டதா?

    ReplyDelete
  3. ஆமாம். முகநூலில் என் பக்கத்தில் பதியப்பட்டு நூற்றுக்கணக்கில் பகிர்வுக்குள்ளாகியது.

    ReplyDelete
  4. நான் இந்த கட்டுரையில் இருந்து முக்கியமான கருத்துக்களை கூட்டாளிகளுடன் பகிரலாம் என்று நினைத்து சிறந்த பகுதியை உங்கள் கட்டுரையில் தேடினேன். எதை விட எதை சேர்க்க என்று குழம்பினேன் ...

    ReplyDelete
  5. நான் இந்த கட்டுரையில் இருந்து முக்கியமான கருத்துக்களை கூட்டாளிகளுடன் பகிரலாம் என்று நினைத்து சிறந்த பகுதியை உங்கள் கட்டுரையில் தேடினேன். எதை விட எதை சேர்க்க என்று குழம்பினேன் ...

    ReplyDelete