Wednesday, March 16, 2016

சங்க காலங்கள் மூன்றையும் அறிவோம்



தமிழைப்பற்றிய பெருமைப் பேச்சு எங்கே தொடங்கினாலும் சங்கத் தமிழ், சங்க காலம் என்று சொல்லப்படுவது தவறாது. அது என்ன சங்கத் தமிழ் ? சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட, சங்கத்தில் அங்கம் வகித்த பெரும்புலவர்களால் வளப்படுத்தப்பட்ட உயர்தனிச் செம்மொழி என்பதால் அப்பெயர்.
அத்தகைய சங்கங்கள் நிறுவி, தமிழ் வளர்க்கப்பட்ட முற்காலமே சங்ககாலம். சங்கம் என்பதற்கு ஒத்த நிறையுடைவர்கள், தகுதியுடையவர்கள், எண்ணமுடையவர்கள் ஒன்றுகூடுமிடம் என்பது பொருள்.
தமிழ்ச்சங்கங்கள் தோன்றி தமிழ் வளர்த்த காலம் சங்க காலம். சங்ககாலம், தமிழ்ச்சங்கங்கள் குறித்து நாம் அறிமுக அளவிலேனும் தெரிந்து வைத்துக்கொள்வோம். தமிழறிஞர்கள் பலர் இதுகுறித்து எளிமையாய் விளக்கியிருக்கிறார்கள். எல்லாரும் சங்கம் குறித்துப் பேசுகிறார்கள். நாமும் அவ்வாறே பேசிப் பழகியிருக்கிறோம். இப்போதேனும் தமிழ்ச்சங்கங்கள், சங்ககாலங்கள் குறித்துச் சிலவற்றை அறிந்துகொள்வோமே.


ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறோம். பொதிகை மலையில் அகத்தியர் என்ற முனிவர் மாத்தமிழுக்கு முதன்மை முனியாய் வீற்றிருக்கிறார். அவருடைய தலைமையில் தமிழ்ப்புலவர் குழு ஒன்று, இயற்றுவதும் இசைப்பதுமாய் தமிழ்வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறது.
அந்தப் பொதிகை மலைக்கும் தெற்கே குமரிக்கண்டத்தில் நாற்பத்தொன்பது நாடுகள் சூழ தமிழ்நாடு பரவியிருந்தது. அந்த நாற்பத்தொன்பது நாடுகள் என்னென்னவென்றால் - தெங்க நாடுகள் ஏழு, மதுரை நாடுகள் ஏழு, முன்பாலை நாடுகள் ஏழு, பின்பாலை நாடுகள் ஏழு, குன்ற நாடுகள் ஏழு, குணகாரை நாடுகள் ஏழு, குறும்பாணை நாடுகள் ஏழு. மொத்தம் நாற்பத்தொன்பது.
அங்கே குமரி ஆறு, பஃறுளி ஆறு போன்றவை பெருக்கெடுத்து ஓடின. குமரி மலை என்ற மலையும் இருந்ததாம். இப்போதுள்ள குமரிக்கும் தெற்கே பன்னெடுந்தூரம் அந்நிலப்பரப்பு பரந்திருந்தது.
அங்கே இருந்த பாண்டிய நாட்டுத் தலைநகரம்தான் மதுரை. இப்போதுள்ள மதுரை நகரம் பிற்காலத்தில் தோன்றியது. குமரிக்கண்ட மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அகத்திய முனிவரை நாடித் தம் தலைநகரில் தமிழுக்கு ஒரு சங்கம் நிறுவித் தமிழ்வளர்த்துத் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். காய்சினவழுதி என்பது அப்பாண்டிய மன்னனின் பெயராய் இருத்தல் வேண்டும். ஏனெனில் தலைச்சங்கத்தைப் பாதுகாத்து வளர்த்த பாண்டிய மன்னர்கள் எண்பத்தொன்பது பேர். அவர்களில் காய்சினவழுதி முதலாமவன். கடுங்கோன் என்பவன் கடைசி மன்னன்.
பாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப தென்மதுரையில் தலைச்சங்கம் நிறுவப்பட்டு நம்மொழியின் முதன்மைத் தலைமையகமாகச் செயல்படத் தொடங்கியது. அக்காலத்தில்தான் அகத்தியம் என்ற இலக்கண நூலை அகத்தியர் எழுதினார். இயல், இசை, நாடகம் என்று தமிழை மூவகையாகப் பிரித்து ஆக்கங்கள் செய்தனர். ஒருவர் புலவராய் எழுதியவற்றை இச்சங்கம் சீர்தூக்கி ஆராயும். அரங்கேற்றும். குற்றங்குறையுள்ளவற்றைச் செம்மைப்படுத்தும். சங்கம் ஏற்றுக்கொண்டால் அவர் தமிழ்வல்லார் ஆவார்.


அகத்தியர் தொடங்கி திரிபுரம் எரித்த முடிசடைக்கடவுள், குன்றம் எறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவர் என 549 பெருந்தமிழ்ப்புலவர்கள் தலைச்சங்க பீடத்தில் அமர்ந்து அணிசெய்திருக்கின்றனர். 4449 புலவர்கள் தலைச்சங்கத்தில் வந்து பாடியவர்கள். 89 பாண்டிய மன்னர்கள் அதைப் போற்றி வளர்த்திருக்கின்றனர். அது நிலவிய காலம் 4440 ஆண்டுகள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். தலைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று ‘இறையனார் அகப்பொருள்.’ அதற்கு எழுதப்பட்ட உரைநூலொன்றின் பகுதி நம்மிடம் கிட்டியிருக்கிறது. இச்செய்திகள் அதில் காணக்கிடைக்கின்றன.
குமரிக்கண்டத்தில் தென்மதுரை கண்ட தலைச்சங்கத்தைப் பற்றிப் பார்த்தோம். பாண்டிய மன்னனுக்குத் தன் தலைநகரம் கடலொட்டிய துறைநகரமாய் இருந்தால் நல்லது என்று தோன்றியிருக்கிறது. சோழன் புகாரிலும் சேரன் வஞ்சியிலும் கடல்பார்த்து இருக்கும்போது, தானும் அதுபோல் இருக்கவேண்டும் என்ற விருப்பம் பாண்டிய மன்னனுக்கு. அதனால் தாமிரவருணியை அடுத்திருந்த துறைமுக நகரான கபாடபுரத்திற்குத் தலைநகரை மாற்றிக்கொண்டானாம்.
தலைநகர் மாற்றத்தால் தமிழ்ச்சங்கமும் கபாடபுரத்திற்கு மாறியது. கபாடபுரத்துத் தமிழ்ச்சங்கம் இடைச்சங்கம் எனப்பட்டது. இடைச்சங்க காலம் 3700 ஆண்டுகள் நீடித்ததாம். இந்தக் கால வரம்புகளை நாம் ஆய்வுக்குட்படுத்தலாம் என்றாலும் பன்னெடுங்காலம் நீடித்தது என்று கொள்வதில் தயக்கம் வேண்டியதில்லை.


இடைச்சங்கத்திலும் அகத்தியமே தமிழுக்கு முதல் நூல். அகத்தியரின் முதன்மை மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர். அகத்தியத்தையொட்டி அவர் எழுதிய இலக்கண நூல்தான் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம் ஆகிய இலக்கண நூல்களும் இந்தக் காலத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இவற்றில் தொல்காப்பியம் மட்டும் நம்காலம்வரை காப்பாற்றப்பட்டுக் கையில் கிடைக்கிறது.
வெண்டேர்ச் செழியன் என்ற பாண்டியன்தான் இடைச்சங்க காலத்தின் முதல் மன்னன். மொத்தம் 59 பாண்டிய மன்னர்கள் இடைச்சங்கத்தைக் காத்தவர்கள். இவர்களில் ஐம்பது பாண்டிய மன்னர்கள் சங்கப் புலவர்களாகவும் விளங்கினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சங்கப் புலவர்களாக ஐம்பத்தொன்பது பேர் இருந்திருக்கிறார்கள். 3700 புலவர்கள் இடைச்சங்கத்தில் தோன்றிப் பாடியிருக்கிறார்கள்.
தலைச்சங்கத்தில் 4440 புலவர்கள், இடைச்சங்கத்தில் 3700 புலவர்கள் என்னும்போது ஆளுக்கொரு நூல் என்றாலும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்நெடுங்காலமும் பெருநூல்களில் பயின்றதால்தான் தமிழ் இந்த அளவுக்குச் செம்மையும் சிறப்பும் பெற்று வளர்ந்திருக்கிறது.



அந்நூல்கள் எல்லாம் கால வெள்ளத்தில் அழிந்துவிட்டன. ஆழிப்பேரலையையும் கடல்கோளையும் கூரைமூடும் வெள்ளத்தையும் நாம் கண்கூடாகக் கண்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால் இச்செய்திகளில் எள்ளளவும் உண்மைக்கு மாறாக இல்லை என்று நம்பலாம்.
முடத்திருமாறன் என்ற பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் கடல்கோள் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு குமரிக்கண்டம் தாழ்ந்தது. ஆழிப்பேரலைகள் மேவின. தென்மதுரையும் கபாடபுரமும் நீலத்தண்ணீரில் மூழ்கின. காப்பாற்ற முடிந்த தமிழ்ச்சுவடிகளோடு உயிர்தப்பிப் பிழைத்து உள்நாட்டுக்குள் வந்தான் பாண்டிய மன்னன்.
கடல்கோள் ஆபத்தை உணர்ந்ததால் தன் தலைநகரை நாட்டின் நடுவில் தோற்றுவிக்க எண்ணினான் பாண்டியன். அவ்வாறு தோன்றிய நகரம்தான் தற்போதைய மதுரை. கபாடபுரத்து அழிவோடு இடைச்சங்க காலம் முடிந்தது.
மதுரை நகரை நிர்மாணித்தவுடன் முடத்திருமாறப் பாண்டியன் செய்த முதல் வேலை கபாடபுரத்தில் இருந்தது போன்ற ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவியதுதான். இந்தச் சங்கமே கடைச்சங்கம் எனப்பட்டது. மூன்று சங்கங்களில் இறுதிச் சங்கம் இது என்ற பொருளில்.


கடைச்சங்கத்தில் 49 புலவர்கள் அணிசெய்தனர். சிறுமேதாவியார் சேந்தம்பூதனார் தொட்டு நாமறிந்த நெற்றிக்கண் நக்கீரர்வரை அப்புலவர்களின் பட்டியல் இருக்கிறது. கடைச்சங்கத்தில் தம் பாடல்களை அரங்கேற்றிய புலவர்களின் எண்ணிக்கை 449. முடத்திருமாறன் தொடங்கி உக்கிரப்பெருவழுதி வரை நாற்பத்தொன்பது பாண்டிய மன்னர்கள் காலம் முடிய சங்கம் இருந்தது. நாற்பத்தொன்பது பாண்டியர்களில் மூவர் சங்கப் புலவர்களாயும் இருந்துள்ளனர். சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கம் நிலவியதாகக் கூறுகிறார்கள்.
கடைச்சங்க காலத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன. அவற்றில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய முப்பத்தாறு நூல்கள் இன்றும் நம்மிடம் இருக்கின்றன. கடைச்சங்க காலத்தில் தமிழ் தன்னுடைய முழு வளர்ச்சியை எட்டிப் பாரெங்கும் பரவும் பான்மை எய்திச் சிறந்தது என்றே கூறவேண்டும்.

- கவிஞர் மகுடேசுவரன்

1 comment:

  1. அருமை!! நான்காம் தமிழ் சங்கம் நாம் காண சாத்தியமா ?

    ReplyDelete