Tuesday, July 12, 2011

அங்கே மழை பெய்கிறது !



எங்கோ

ஒரு நிலத்தில்

புதைக்கப்பட்ட பிணங்கள்

புரண்டு படுக்கின்றன


அப்பிணங்களைத் தீண்டுகிறது

நிலத்தில் இறங்கிய மழையின்

நீர்க்கால் ஒன்று


புதையுடல்கள்

துயில் கலைந்தனபோல்

உடல் முறித்து எழ முயல்கின்றன


அவற்றின் உதடுகளில்

இன்னும் பதியப்படாத சொற்களும்

உலக மனசாட்சியின் மீது

வாள்செருகும் வினாக்களும்

தொற்றியிருக்கின்றன


தாம் சவமாகும் முன்பே

புதைபட்டதைத்

தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம்

கூறியிருக்கின்றன


அவை

தாம் இறக்கவில்லை

தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை

மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன


மழைத்துளியிடம்

எமது மைந்தர்கள் மீது

இதே குளுமையுடனும்

கருணையுடனும்

பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன !


11 comments:

  1. இப் பதிவு இடப்பட்டவுடன் வாசித்துவிட்டேன். 8 ம்ணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திறந்து பார்த்தேன். இப்போது ஒன்றரை நாளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை, ஒரு பின்னூட்டமும் பதிவாகவில்லை. தமிழ் வலைவாசகத் தரம் இது. இருக்க, கண்ட கண்ட கழிவுகளுக்கு இடும் பின்னூட்டக் கரைச்சல்கள் தாள முடியவில்லை.

    மகுடேஸ்வரனின் இதுபோல் ஒரு சிறந்த கவிதை அவ்வளவு எளிதாகக் கிட்டக் கூடியதா, என்ன? அட, போங்க~ப்பா/ம்மா!

    ReplyDelete
  2. அற்புதமான கவிதை சார்!

    ReplyDelete
  3. நேசமித்ரன், ரவிச்சந்திரன் ! நன்றி..!

    ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! உண்மை நிலையை எண்ணிப் பார்த்தால் இரத்தக் கண்ணீர்தான் வருகிறது அண்ணாச்சி ! இனிமேல் தமிழில் கவிதை எழுதுவதைவிடவும் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிவேற்றிவிடலாம் என்றிருக்கிறேன்.
    ஆங்கிலக் கவிதை வலைப்பூ ஒன்றில் !

    ReplyDelete
  4. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி !
    இதே கவிதையை என் ஆங்கில வலைப்பூ ஒன்றில் பதிவேற்றிவிட்டேன். கண்டு சொல்க ! மொழிபெயர்ப்பு என் சொந்த முயற்சி. தவறு கண்டு விளம்புக ! ( தாங்கள் ஆங்கிலத்திலும் தந்நேரற்ற விற்பன்னர் அல்லவா ! )
    http://tamilmodernpoems.blogspot.com/2011/07/theres-raining.html

    ReplyDelete
  5. இக் கவிதைக்கான எனது மொழிபெயர்ப்பை உங்கள் ஆங்கிலத் தளத்தில் பின்னூட்டி இருக்கிறேன். ஒப்பு நோக்க வசதியாக இருக்கும் என்று இங்கேயும் இடுகிறேன். கவிஞர் உள்ளியது போல் இருக்காது; என் புரிதலை ஒட்டி இருக்கும்.

    There it is raining
    ___________________

    The corpses
    Buried afar in a field
    Turn on their stomach.

    The rain descends on
    And roots through the earth;
    Stirring the corpses
    With one of such runs.

    The corpses try to rise, stretching their muscles,
    As if they get up from a sound sleep.

    On their lips remain
    The words to be mustered yet;
    And questions to knife
    The conscience of the world.

    To the tender roots crossing them
    They’ve said that they were buried alive.

    To the earthworms
    They’ve said that theirs was not muerte natural,
    But murder by axe, splitting their heads.

    And to the shower now
    They appeal to show mercy
    On their people
    And kindness by incessant seasonal rains.

    ReplyDelete
  6. அண்ணாச்சி ! ஆங்கிலத் தளத்தை மிகுந்த மரியாதைக்குரியதாக்கி விட்டீர்கள் தங்கள் மொழிபெயர்ப்பின் மூலம். உங்கள் ஆங்கிலப் புலமையை உலகுக்கு அறிவிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுவேன். நான் மொழிபெயர்த்தது கூகுள் மொழிபெயர்ப்பி உதவியுடன். தவறுகளும் கவிதைத் தன்மை பிறழ்ந்தும் கூட என் முயற்சி இருக்கக் கூடும். ஆனாலும், இக்காரியத்தைச் செய்துகொண்டே இருப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். தங்களைப் போன்றோரின் மேற்பார்வையில் தாழப் பறந்தேனும் தண்ணீர்க்கடல் தாண்டுவேன் !

    ReplyDelete
  7. ராஜசுந்தரராஜன், மகுடேஸ்வரன் கவிதைகளுக்கு பின்னூட்டம் இடாததற்கு காரணம் அவரது கவிதைகள் அவற்றை கடந்தவை என்பதுதான். இன்று சுஜாதா இல்லையே என்கிற வருத்தம் எனக்கு அதிகம் ஆகிறது, எனகென்னமோ சுஜாதா போன்றவர்கள் மகுடேஸ்வரன் கவிதைகளை விமர்சிப்பது தான் சரி எனப்படுகிறது. மிக்க நன்று என்று தான் என்னால் சொல்ல முடியும், ஆனால் அது மகுடேஸ்வரன் கவிதைகளுக்கு அவசியம் அற்றது.

    ReplyDelete
  8. தேவகுமார்... உங்கள் உணர்வுகள் புரிகின்றன.

    ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி அவர்கள் தகுதியற்ற பொருள்கள் தலைதூக்கிக் கொண்டாடப்படுவதைக் கண்டு ஏற்பட்ட அயர்ச்சியால் கொஞ்சம் மனம் குமைந்தார். அவ்வளவுதான் ! உங்கள் அக்கறைகள் எவையோ அவற்றை நோக்கியே உள்ளம் ஓடும்.

    சுஜாதா அவர்களைப் பற்றி, அவருக்கும் எனக்குமான மானசீக உறவு பற்றி நான் நிறையக் கூற முடியும். அதைப் பிறகு ஒரு தருணம் கூறுவேன்.

    ReplyDelete
  9. //உலக மனசாட்சியின் மீது

    வாள்செருகும் வினாக்களும்//
    :-(

    நேர‌மிருந்தால் இந்த‌ப் ப‌திவைப் ப‌டிக்க‌வும்.

    http://santhyilnaam.blogspot.com/2011/07/blog-post_26.html

    www.santhyilnaam.blogspot.com

    ReplyDelete
  10. அருமை கவிதை சார்

    ReplyDelete