Thursday, July 14, 2011

மனைவி, பெண்டாட்டி – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

வறுமை ஏழ்மை – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

வறுமை என்பது

வறண்ட வற்றிய நிலை.

ஏழ்மை என்பது

என்றும் இருந்திராத இன்மை நிலை.

குளம் கோடைக்காலத்தில் நீரற்று வற்றி வறண்டு இருக்கும்.

அது குளத்தின் வறுமை !

பாலை எல்லாக்காலத்தும் நீர் காணாது நிரந்தரமாக இன்மையில் வாடும்.

அது பாலையின் ஏழ்மை !

எப்போதும் இல்லாத நிலை ஏழ்மை.

இப்போது ஏற்பட்டு விட்ட இல்லாத நிலை வறுமை.

எப்பொழுதும் கொள்கையில்லாத அரசியல் கட்சிகள் ஏழ்மையானவை.

இப்பொழுது பதவியில் இல்லாத அரசியல் கட்சிகள் வறுமையானவை.

மலர், பூ – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

மலர் மலராக ஆவதற்கு முன்பு இளநிலைகள் சிலவற்றைக் கடந்தாக வேண்டும். அரும்பு, முகை, போது என அவற்றுக்கு வரிசைப்படியான பெயர்கள் உண்டு. மலரான பிறகும் முதுமைப் பெயர்கள் (அலர், வீ) உண்டு. மலர்களுக்கு வாசனையே முதன்மைப் பயன். அவை கனியாகிப் பயன் தரும் தன்மையில் கொஞ்சம் பின் தங்கியே இருப்பன. மலர்ந்து மணம்பரப்பி வாடி உதிர்வதில் முதன்மையானவை. மலர்கள் பெரும்பாலும் பற்றிப் படரும் கொடிகளின் பிள்ளைகள்.

பூ மிக நேரடியான பரிணாமத்தை உடையது. அதீத எளிமையும் அதீத வன்மையும் உடைய தாவர வெளிப்பாடு. கொழிஞ்சிப்பூவும் துளசிப்பூவும் எளிமை வகை. தாழம்பூ, வாழைப்பூ, நாகலிங்கப்பூ, பூசணிப் பூ, சூரியகாந்திப் பூ, ஊமத்தம் பூ ஆகியன வன்மையின் வகை. நறுமணம் பரப்புவது பூக்களின் முதன்மையான நோக்கம் அன்று. பூக்கள் காயாகவும் கனியாகவும் பரிணாமம் எய்துவதில் முன் நிற்பவை. பூக்கள் பெரும்பாலும் மரங்களின் பிள்ளைகள்.



வண்ணம், நிறம் – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

வண்ணம் தோற்ற நிலை.

நிறம் உள்ளிருந்து இயங்கும் நிலை.

வண்ணம் என்கிற தோற்ற நிலையை வகுத்துத் தருபவர்கள் வண்ணார்கள். நிறம் என்கிற உள்ளிருந்து இயங்கும் நிலையை நிறுவுபவர்கள் சாயமிடுபவர்கள்.

வானத்தின் நீல நிறம் அதன் பகல்வண்ணம். ஆனால், இரவு வானத்தின் கருவண்ணம் அதன் நிரந்தர நிறம் !

வெள்ளை நிறக்கற்றை வானவில்லில் ஏழு வண்ணங்களாகத் தோற்றமளிக்கிறது !


மனைவி, பெண்டாட்டி – இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன ?

தன் மனைமாட்சியால் உன்னை மகிழ்விப்பவள் மனைவி.

தன் பெண்மையால் உன்னை ஆட்டுவிப்பவள் பெண்டாட்டி.

10 comments:

  1. அருமை!... அருமை!... தமிழை இப்படி நுட்பமாகச் சுவைப்பது, தேனைத் துளித் துளியாக நுனி நாக்கில் விட்டுச் சுவைப்பதை விட இனிமையானது! நன்றி புலவரே!

    ஆனால் ஓர் ஐயம்! மனைவி - பெண்டாட்டி வேறுபாடு பற்றி இல்லை. அது நீங்கள் விளையாட்டுக்காகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. நான் கேட்க விரும்புவது வண்ணம் - நிறம் பொருள் வேறுபாடு பற்றி. ஐயா! வண்ணம் என்பது வடமொழிச் சொல் இல்லையா? அதை நாம் தமிழ்ச் சொல்லாகக் கருதி நிறத்துக்கும் அதற்கும் இடையிலான பொருள் வேறுபாடு பற்றி ஆராய்வது சரியா?

    ReplyDelete
  2. அருமை. பதிவிற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. தெளிவான விளக்கங்கள்..!! பதிவிற்கு நன்றி கவிஞரே..!!

    ReplyDelete
  4. திரு. ஞானப்பிரகாசம் ! நீங்கள் குறிப்பிடும் சொல் வர்ணம் என்கிற வடமொழிச் சொல் அல்லவா ? வண்ணம் கம்பராமாயணத்திலேயே மிகுதியும் பயின்றிருக்கிறது. அதைத் தமிழிலிருந்து வடமொழி ஏறிய சொல் என்றே கொள்வோம்.

    திருவாளர்கள். பா. சதீஸ், கோபி இராமமூர்த்தி ! நன்றிகள் !

    ReplyDelete
  5. இந்தப் பதிவினைப் படித்த என் நண்பர் ஒருவர் குறும்பாக ’அம்மா’ மற்றும் ’ஆத்தா’ - இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு என்ன என்கிறார்.
    நானும் சொல்லிவைத்தேன் :
    ’அம்மா’ - உன்னோட அம்மா
    ’ஆத்தா’ - உன் அம்மாவோட அம்மா - என்றேன்.

    நன்றி ! சேலம் தேவா !

    ReplyDelete
  6. E.Bhu.GnaanaPragaasan said...
    /வண்ணம் என்பது வடமொழிச் சொல் இல்லையா?/

    ஆமாம், ஸம்ஸ்க்ருதத்திலும் அச் சொல் வழங்குகிறது, 'வர்ணம்' என்று. ஸம்ஸ்க்ருதத்தில் 'வர்ணம்' என்றால், பாலியில் அது 'வண்ணம்' என்றுதானே வரி/ஒலி வடிவம் பெற்றிருக்க வேண்டும்? ஆக, மூலச் சொல் 'வண்ணம்'தான். அது எங்கிருந்து போனது என்பது ஒரு வறட்டு அரசியல்.

    'வண்ணம்', தமிழில், இனம் என்னும் பொருளையும் குறிக்கும். 'வள்>வண்' என்னும் வளமைப்பொருள் வேராவதால், முதன்மையாக 'அழகு' என்னும் பொருள் தரும். அழகென்னும்போதே 'நிறம்' (நில்>நிறை) என்பதும் தானே பொருள்கொண்டு எழும்தானே?

    'வரிதல்' என்றாலும் தமிழில் சித்திரம் எழுதுதல் என்றுதான் பொருள். ஆகவே, 'வர்ணம்' என்றே நாம் அதைச் சொல்லலாம்.

    சரஸ்வதியின் பெயரான 'வாக்கு' தமிழ்ச்சொல்தான் என்று வழக்காட விருப்பம் இல்லை. ஆனால், 'வாய்' என்னும் மூலமொழி தமிழ்வடிவம்தான்; வடமொழிகளுக்கு உரியதன்று என்றே நம்புகிறேன். இன்று, 'வசனம்' என்பது வடசொல் என்று நம்பி, 'உரைநடை' என்ற ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறோம். இது ஒருவகையான phobia.

    தமிழில் இருந்து ஸம்ஸ்க்ருதம் கொண்ட வார்த்தைகளை விட, தமிழ் பிற மொழிகளிடம் இருந்து பெற்ற சொற்கள் குறைவாகவே இருக்கும் என்று, சற்று எண்ணிப் பார்த்தாலே தமிழறிந்த எவருக்கும் தெரியும். பிறகும் இந்த அரசியல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதற்குக் காரணம் வேறே.

    ReplyDelete
  7. அண்ணாச்சி ! மேலைத்தேய அறிவுத் துறைகளில் ETYMOLOGY எனப்படும் சொல்வரலாற்றியல் துறை மிகுந்த வனப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், தமிழில் அப்படி ஓர் இயல் எங்காவது செயல்படுகிறதா என்பது ஐயமே ! இப்படித் தனித்தனி நபர்களே நிறுவனப் பொறுப்பை ஏற்று ஆய்ந்தமர வேண்டியிருக்கிறது.

    வடமொழி என்று அறியப்பட்டிருக்கிற ஏராளமான சொற்களைத் தமிழ்ச் சொல்லே என்று நிறுவும் வண்ணம் பாவேந்தர் பாரதிதாசன் நூலொன்றை எழுதியிருக்கிறார்.

    இதுபோன்ற சொல்லாராய்ச்சிகளில் என் மொழியறிவின் ஆழ் உணர்வை நான் நம்புவதுண்டு. (இங்கே என்ன சொல்து? தமிழ் தமிழ் சொல்தா?)

    ReplyDelete
  8. தேவநேயப் பாவாணர் 'வேர்ச்சொல் அகராதி' ஒன்றை எழுதித் தொகுத்தார். அரசியல் முக்கியத்துவங்களின் மாறுதல் காரணமாக, பாவாணர் இறந்த பிறகும் அவை பதிப்புருவம் பெற்று முற்றுப்பெறாமல் இழுபறிக்கு உள்ளாயின.

    கருணாநிதி, தான் இந்தத் தடவை தோற்றுவிடுவோம் என்று தெளிந்ததும் அவசர அவசரமாக அந்த அகராதியின் இறுதித் தொகுதியை வெளியிட்டு முடித்தார். (இதுபோல் வாக்கு வரத்துக் கணக்குப் போடாமலும் சில அவர் செய்வார். தப்பு தப்பு, ஜெயலலிதாவுக்கு இது தெரியவந்தால், கருணாநிதியின் பேர் இதன் மூலம் நினைவு வைக்கப் படுகிறதா என்று இதையும் அழித்துவிடப் போகிறார்). அந்த அகராதி மொத்தமும் என்ன விலை என்று இனிமேல்தான் நானே வினவித் தெரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  9. கவிஞர் அவரகளே! என் உள்ளுணர்வு ஓர் ஐயம் எழப்பிற்று! அது என்னவெனில், "பெண்டாட்டி" எனும் சொல், அக்காலத்தில் வாழ்ந்த அரசர் மற்றும் செல்வந்தர்கள் கொண்டிருந்த பாலியல் அடிமைகளை (sex slaves) குறித்திருக்கலாம் என்பது தான். தயவுசெய்து இதைப்பற்றிய உங்களின் கருத்துக்களை தெருவியுங்கள். ஏதேனும் இலக்கிய ஆதாரம் இருப்பின் அதையும் விளககிக் கூறுங்களேன்!

    ReplyDelete