
பேசாமல் நாமும்
பெண்ணாகவே பிறந்திருக்கலாம்
வயதானால் வழுக்கை விழாது
நகரத்தில்
நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்
தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை
சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும்
எப்பொழுதும் நம் செல்பேசி
பயன்பாட்டிலேயே இருக்கும்
சடங்கானால்
சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள்
நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள்
கல்யாணம், மருதாணி, நலங்கு,
பட்டுப்புடவை, வளைகாப்பு என
அநேக தருணங்களில்
நாயகியாகி அமர்ந்திருக்கலாம்
காமக் கவிதை எழுதினால்
இலக்கிய உலகமே திடுக்கிடும்
கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்
மூத்த இலக்கியவாதி
திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு
நம்மை அழைத்துப்போய்
கடல் பார் என்று காட்டுவார்
இந்தக் காட்சி உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பார்
முகப்புத்தகத்தில்
எவனையும் கவிழ்க்கலாம்
எவனாவது ஒருவன்
நமக்கு தாஜ்மஹால் கட்டுவான்
கிழவியாயிருந்தாலும் ஒருவன்
அருநெல்லிக்கனி தருவான்
ஒன்பதாம் வகுப்பே படித்திருந்தாலும்
கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்
மதுரையை எரிக்கலாம்
கூந்தல் வாசம் குறித்து ஐயமெழுப்பி
ஆண்டவனையே அலைக்கழிக்கலாம்
நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்
டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும்
அரச விவகார அதிகாரியானால்
பத்திரிகைகள் பின்னாலேயே ஓடிவரும்
நம் வலைப்பூவில்
நிறைய வண்டுகள் திரியும்
திடீரென்று நம் புத்தகம்
எஸ்கிமோக்களின் மொழியில் பெயர்க்கப்படும்
யார் அமைச்சராக வேண்டும் என்பதை
நாம் முடிவு செய்யலாம்
பேசாமல் நாமும்
பெண்ணாகவே பிறந்திருக்கலாம், இல்லையா ?