Wednesday, November 16, 2011

தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் இனி காட்சிப்பிழை திரையில் !


என் வலைப்பூவில் இடம்பெற்ற தமிழ்த் திரையின் மகத்தான பாடல்கள் என்னும் தொடர் அச்சு ஊடகத்திற்கு நகர்ந்துவிட்டது. ‘காட்சிப்பிழை திரைஎன்னும் தமிழ்த் திரைப்பட ஆய்விதழில் இனி அக்கட்டுரைகள் தொடராக இடம்பெறும். மாதா மாதம் எழுதித் தரவேண்டிய இதுபோன்ற இனிய நிர்ப்பந்தத்திற்கு என்னை நான் ஆளாக்கிக்கொள்ளாவிட்டால் இப்படியே சாவகாசமாக இருந்துவிடுவேன் என்கிற அச்சமும் ஒரு காரணம்.

நவம்பர் 2011 இதழில் அத்தொடரின் முதல் கட்டுரை வெளியாகியிருக்கின்றது. மூன்று முடிச்சு திரைப்படத்தில் இடம்பெறும் ‘வசந்தகால நதிகளிலேஎன்னும் பாடலை அந்தக் கட்டுரையில் எடுத்துப் பேசியிருக்கிறேன். பொதுவாக, பத்திரிகைகளில் வெளியாகும் என் எழுத்துகளை நான் வலைப்பூவில் இடுவதில்லை. அதுவே அச்சு ஊடக உழைப்புக்குத் தரும் என் எளிய மரியாதை. ஆகவே, அக்கட்டுரைகளை இந்தப் பக்கங்களில் நண்பர்கள் எதிர்பார்க்க வேண்டாமென்று நான் கேட்டுக்கொள்வேன்.

விருப்பமுள்ளவர்கள் ‘காட்சிப்பிழை திரைஇதழை வாசிக்க முயலலாம். உலகத் திரைப்படங்களைப் பற்றியே நம் அறிவுஜீவிச் சஞ்சிகைகள் வியந்தோதிக்கொண்டிருக்கும் இடத்தில் தமிழ் சினிமாவின் எல்லாத் திசைகளையும் அலசி ஆய்வதற்காக வெளியாகும் இவ்விதழ் வரவேற்கக் கூடியதே. யார் என்ன சொல்லிக்கொண்டிருந்தாலும் தமிழ்த் திரையுலகம் இச்சமூகத்தோடு கொண்டுள்ள உறவைத் தாழ்த்தி மதிப்பிடவே முடியாது.

இதழ் முகவரி :

காட்சிப்பிழை திரை,

மே/பா. ரியல் இம்பாக்ட் சொல்யூசன்ஸ், 12, மூன்றாவது தெரு, கிழக்கு அபிராமபுரம், மயிலாப்பூர், சென்னை 600 004.

ஆசிரியர் : வீ. எம். எஸ். சுபகுணராஜன்

தனி இதழ் : உரூ. 20.00 ஆண்டு சந்தா உரூ. 200.00

Sunday, November 6, 2011

வேறெங்கும் வடியாத சுவைநீர்


மழை தன் வன்மையழிந்து

சிட்டுக்குருவி இரைகொத்தும் ஒலியில்

பெய்கிறது


குளிர்

அமைதியாய்ப் பரவி

அணைக்கிறது


அவித்த வேர்க்கடலை கொஞ்சம்

அருகில் இருக்கிறது


அதன் கூர்முனையைக்

குத்தி உடைக்கிறேன்


செம்பகுதியாகப் பிரிகிறது

வேர்க்கடலையின் தொட்டு


யாரோ சொல்லி வைத்ததுபோல்

அதன் இடது புறத் தொட்டில்தான்

பருப்புகள் இரண்டும் வெந்து படுத்திருக்கின்றன


தொட்டை வாய்க்குள் கவிழ்த்து

கடலையை உதிர்க்க முயல்கிறேன்


உள்ளிருக்கும் நொய்ந்த பருப்பு

பிடியிழந்து வாய்க்குள் விழுகிறது


கூடவே

இரண்டு நீர்த்துளிகளும் விழுகின்றன


அந்த நீரின்

தனித்த உப்பு ருசிக்கு

நான் தடுமாறுகிறேன்


அதுதான்

விதியின் புதிரான சுவையோ !


ஊழியின் மர்ம முடிச்சுகள்

அவிழ்ந்த சுவையோ !


பல்லிடுக்கில் கசியும் குருதியின்

வெப்பச் சுவையோ !


காந்தியின் இதயத்தில் உரமேற்றிய

அறவுணர்ச்சியின் சுவையோ !


புன்செய்க்குள் உழுது விதைத்த உழவனின்

வியர்வைச் சுவையோ !


அந்த மண் என் நாவிற்கு எழுதிய கடிதத்தின்

கண்ணீர்ச் சுவையோ !