Friday, February 25, 2011

நாஞ்சில் நாடன் படைப்புகள் குறித்து...


நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு - அப்படைப்பாளி வீரியத்துடன் இயங்கிய படைப்பு வகைக்கு விருது கொடுப்பது என்பதெல்லாம் எப்பொழுதாவது நடக்கும் அதிசயம்தான்.

பாரதிதாசனுக்கு அவருடைய கவிதைக்கு விருது தராமல் பிசிராந்தையார் என்கிற நாடக நூலுக்குக் கொடுத்தார்கள். கண்ணதாசனுக்கும் - ஏன் வைரமுத்துவுக்கும் கூட, அவருடைய கவிதைக்கு விருது தராமல் உரைநடை எழுத்துக்குக் கொடுத்தார்கள். அத்தகைய அபகீர்த்திக்கெல்லாம் ஆளாகாமல் சிறந்த சிறுகதை எழுத்தாளராகிய நாஞ்சில் நாடன் சிறுகதைக்காகவே அரசாங்க விருதைப் பெற்றிருக்கிறார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிரதானமாக சிறுகதைகளில் இயங்கி வந்தார். நா. பார்த்தசாரதியின் தீபம் இதழ் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய நன்கொடை நம் நாஞ்சில் நாடன். பிறகு நாவல்களின் உலகத்திற்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் புதுப்பெண்கள் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறுகதையாகப் பேசுபவர்கள் போகப்போக பெருங்குரலெடுத்துப் பேசுவதைப் போல - சிறுகதை எழுதி எழுதி எழுத்தின் சைஸ் பெரிசானதாலும் பேனா பேப்பரின் மீது நழுவிச்செல்லும் வேகம் அதிகரித்ததாலும் சிலர் நாவல் எழுத ஆரம்பிப்பார்கள். நாஞ்சில் நாடன் அத்தகைய சொந்த இச்சையால் மொந்தை மொந்தையாக எழுதி நம்மை சிரமப்படுத்தாமல் சிறுகதைக்குரிய பொருள்களை மீறிய அரும்பெரும் வாழ்க்கைச் சித்திரங்களை வரைய வேண்டிய இலக்கியப் பொருள்கள் அவர்முன் நின்றமையால் நாவல் எழுத வந்தவர். நாவல்களில் தம்முடைய வெற்றிக்கொடியை நன்றாக நிலைநாட்டினார். தேசத்தின் பாதைகள் முழுவதும் பயணித்து, சொந்த ஊரின் வேர்ப்பற்றை - பாசத்தைத் துண்டித்தெறிய முடியாமல் வாழ்ந்து வதைபடும் மனித மனத்தை அவருடைய நாவல்களில் துலக்கமாகத் தரிசிக்கலாம்.

பிறகு அவர் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள் நாவல்கள் எழுத எதையாவது கூறத் துடிக்கும் மனம் போதும். ஆனால், கட்டுரைகள் எழுத அந்த எழுத்தார்வம் ஒரு விழுக்காடு கூட உதவாது. கட்டுரை எழுதுவதற்கு மூளை முழுக்க அறிவுத் தகவலகளும் பகுத்துக் கூறும் பாங்கும் பொங்கி நிறைந்திருக்க வேண்டும். ஒரு நாளின் பேருந்துப் பயணத்தைச் சிறுகதையாக எழுதிவிடலாம். நம் வாழ்க்கை முழுக்க நாம் பேருந்துகளில் பயணம் செய்த அனுபவங்களைத் திரட்டி நாவலாக எழுதிவிடலாம். ஆனால், கட்டுரை எழுதுவதற்கு பேருந்துப் பயணமும் ஜன்னலோரக் காட்சிகளும் போதாதவை. அந்தப் பேருந்து எவ்வாறு கட்டி அமைக்கப்பெற்றிருக்கிறது, அது இயங்குவதற்கான பொறியியல் இயக்கவியல் நுட்பங்கள் என்னென்ன என்கிற விரிவான அறிவும் கட்டுரை எழுதுவதற்கு வேண்டும். அதனால்தான், தேர்ந்த கதாசிரியர்கள் பலர் வெற்றிகரமான கட்டுரைக்காரரர்களாக இல்லை. நாஞ்சில் நாடன் இதில் தனித்த விதிவிலக்கானார்.

எங்களைப்போன்ற பலர் கவிதைகள் மட்டுமே எழுதிவந்தோம். நாங்கள் சிறுகதை நாவல்கள் எழுதுவதில்லை. முதல் காரணம் லேபர் காஸ்ட் எங்களுக்குக் கட்டுபடியாகாது. கவிதை எழுதுவதற்கு பேனாவையும் பேப்பரையும் கையில் வைத்துக்கொண்டு வடகிழக்கு மூலையைப் பார்த்துக்கொண்டு யோசித்தபடி போஸ் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் போதும், அவ்வப்போது ஒரே ஒரு வார்த்தை தோன்றும் அல்லது ஒரே ஒரு வரி தோன்றும், அதை அப்படியே தாளில் குறித்துக்கொண்டு மீண்டும் வடகிழக்கைப் பார்க்க ஆரம்பிக்கலாம். ஆனால், கதைகள் எழுதுவதற்கு யோசிப்பதோடு மட்டுமல்லாமல் மாங்குமாங்கு என்று எழுதவேண்டும். நம்மால் அது முடியாது. அதோடு மட்டுமல்ல, கவிதை எழுதி முடித்துவிட்டால் அடுத்து நிம்மதியாகத் தூங்கலாம், அந்தப் படைப்பழுத்தத்திலிருந்து விடுபட்டு வேறு வேலை பார்க்கலாம். எழுதி முடிக்கப்பட்ட கவிதை நல்ல உறக்கத்தைத் தந்துவிடுகிறது. ஆனால், சிறுகதை நாவல்கள் எழுதத் துவங்கிவிட்டால் அது அன்றைக்கோ, அடுத்தடுத்த நாள்களிலோ முடிந்துவிடுவதில்லை. பேரழகியைக் காணக்கூடாத கோலத்தில் கண்டுவிட்ட மாதிரி அன்றிலிருந்து உறங்கவே முடியாது. எழுதுவதும் நாள்கணக்கில் மாதக்கணக்கில் நின்று நகரும். உறக்கமும் நிம்மதியும் தொலைந்துவிடும். இந்த அவஸ்தைகள் எமக்கு ஆகிறதில்லை என்பதால் நாங்கள் நாவல் எழுதவில்லை. ஆனால், நாஞ்சில் நாடன் கட்டுரை கதை வடிவங்களோடு நின்றுவிடாமல் கவிதையும் எழுதலானார். இதை ரிலையன்ஸ் கம்பெனிக்காரன் மளிகைக் கடை வியாபாரத்திலும் இறங்கியதோடு ஒப்பிடலாம்.

சரி, நாஞ்சில் நாடன் கவிதை எழுதுகிறார் என்றதும் நாங்களெல்லாம் உஷாரானோம். அப்படி என்னத்தை எழுதிவிடப் போகிறார் என்றும் நாங்களெல்லாம் மூளையைப் பிசைந்து எழுதாத பொருள்களை அவர்மட்டும் எப்படிக் கண்டுபிடித்து வழங்கப் போகிறார் என்றும் ஆர்வமாகக் கவனித்தோம். வலப்பக்கக் கடல்மணலை இடப்பக்கம் இறைத்திறைத்து நகக்கணுக்கள் வலிக்கின்றன... அடியே வா ! என்றெல்லாம் அவர் வயதுக்கு எழுதினால் நன்றாகவா இருக்கும் என்றும் கவலைப் பட்டோம். ஆனால், நாஞ்சில் நாடன் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பச்சை நாயகி என்கின்ற அவருடைய கவிதை.

எங்கெனத் தேடுவதுன்

எழுலார்ந்த பொன்முகத்தை ?

காற்று வெளியதனுள், ககன விதானத்து,

பைந்நாகப் பாய்விரித்த பாற்கடலில் ?

யாண்டு செவிப்படுமுன் தேமதுரத் தமிழோசை ?

மைனா கிளி தேன்சிட்டு கானக்கருங்குயில்

வால் நீண்ட கரிக்குருவி, குருசு, மீன்கொத்தி யாவும்

கீசு கீசெனக் கலந்த அரவத்து ?

எவண்நுகரக் கிடைக்குமுன் மேனி நன்வாசம் ?

வேங்கை புங்கு நுணா வனப்பிச்சி

கமுகு புன்னை மலர்க்கூட்டம்

அடர்ந்து கிடக்கும் அருங்காட்டில் ?

தானாய்த் தென்பட்டால் அன்றித்

தேடுவது எங்ஙனம் ?

உன்னருளாலே உன் தோள் புல்லி

கூடுவதெப்போ சிலம்பார்க்கும் பூவடியை ?

துள்ளும் துடியிடையும் தோகைமயில் நடையும்

பவள இதழும் என்று பார்ப்பேன் என

குணங்குடி மஸ்தான் தேடிய மனோன்மணி

இந்த மனதை வைத்துக்கொண்டு

ஒன்றும் செய்ய முடியாது எனப்

பதைத்த நகுலனுக்கு சுசீலா

கொடுங்காற்றினில் கடும் மழையதனில்

காய்ச்சும் கதிரொளியில்

கலங்கிக் கிடந்தவென் கண்ணுக்கு

கானகத்துப் பச்சை நாயகி !

நாஞ்சில் நாடனிடமிருந்து கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுக் கிளைகளில் மொழித்தேனீ கட்டிய தேனடைகளாகத் தோன்றுகின்றன. கவிஞன் என்பவன் மொழியை ஆயுதமாகச் சுழற்றத் தெரிந்தவன். நாஞ்சில் நாடனின் கவிதைகளில் புழங்கும் மொழி இன்று தமிழில் இயங்குகிற எந்தவொரு நவீன கவிஞனின் மொழியைவிடவும் மேம்பட்டது. இத்தனை காலம் இவர் ஏன் இந்த மொழியைக் கவிதைப் புலத்தில் இயக்கிக் காட்டவில்லை என்பது ஆச்சர்யமே.

நாஞ்சில் நாடன் எவ்வொரு கவிஞனை விடவும் அதிகமான சங்க இலக்கியப் பரிச்சயம் உடையவர். சங்க இலக்கியத்தில் எமக்கேதும் ஐயம் என்றால் அவரை அழைக்கலாம். அது தொடர்பான நூல்கள் எவை என வினவலாம். அதற்கு அவருடைய கவிதைகள் எல்லாமே ஆசிரியப்பாவின் அகவலோசையோடு இருப்பதுவே சாட்சி. மரபுச் சொற்றொடர்கள் கவிதைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன.

நம் கவிஞர்களை, ஒரு மரபான முன் தொடர்ச்சியை இனங்கண்டு அடையாளம் காணலாம். ஞானக்கூத்தன் போன்றவர்கள் கவி காளமேகத்தின் பரம்பரை என்று சொல்லலாம். பாரதிதாசன் பரம்பரை என்று ஒரு கவிஞர்கள் வரிசை இருக்கிறது. பாரதியாரைத் தமிழ்ச் சித்தர்களின் பரம்பரை என்று வகுப்பார்கள்.

தம்முன்பாக இருந்த வன்மையான நிறுவனங்களை எல்லாம் எதிர்த்துக்கொண்டு எல்லாவற்றையும் அதன் வேரோடு நோண்டியெடுத்து விமர்சிக்கின்ற, அந்த விமர்சனங்களை எந்தப் பயமும் இல்லாமல் முன்வைக்கின்ற, முற்றும் உணர்ந்த, முழுமையும் துறந்த ஒரு மனோபாவம் சித்தர் கவிதைகளின் இயல்பு. பாரதியார் வகுத்துக்கொண்ட அதே சித்தர் பரம்பரைப் பாதையைத் தமிழ் நவீன கவிதையுலகில் தனக்கென வரித்துக்கொண்ட கவிஞராக நாஞ்சில் நாடனை நான் இனங்காண்கின்றேன்.

· (கடந்த 23.02.2011 அன்று, ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் படைப்புகள் குறித்த கருத்தரங்கில் கவிஞர் மகுடேசுவரன் ஆற்றிய உரை)

Saturday, February 5, 2011

சாயமிடும் தொழில் சாகும் எனில்...




முதலில் 
கையிலுள்ள தொகையைப் போட்டோம் 
பிறகு 
கடன் வாங்கிக் கொஞ்சம் போட்டோம் 
வங்கிக்கு 
நாய் பேயாய் அலைந்து 
கிடைத்த தொகையை எல்லாம் 
தொழிலில் 
போட்டுக்கொண்டே இருந்தோம் 

போதவில்லை 

கழுத்தில் இருந்தவற்றைக் 
கழற்றிப் போட்டோம் 
மனைவியின் 
கால்களைத் தொழுது அழுது 
தாலியையும் விற்று 
தொழிலில் போட்டோம் 

தொழில் செய்து ஈட்டியவை 
ஒருகாலத்தும் 
எம் முதலுக்கு அருகில் வந்திருக்கவில்லை 

முன்பு போலில்லை நிலைமை !
தொழிலாளியைக் 
கொஞ்சிக் கெஞ்சி வேலை வாங்குகிறோம் 
சொந்த வாகனத்தை அனுப்பி 
அவன் முற்றத்தில் காத்திருந்து 
அழைத்து  வருகிறோம் 
அனுப்பி வைக்கிறோம் 

நாங்களும் 
முன்னாள் விவசாயிகளே !
நாங்களும் 
மண்ணில் புரண்டெழுந்தவர்களே !
என்ன கொஞ்சம் முன்னதாய் 
மண்ணை விட்டு வெளியேறிவிட்டோம்  

இங்கே எதுவும் 
உவந்து ஏற்ற தொழிலில்லை 
ஊரோடு ஒத்துவாழ ஏற்றதுதான் 
உயிரோடிருக்க வேண்டுமென்று ஏற்றதுதான் 

ஈடுபட்ட தொழிலில் 
பாடுபட்டு உழைத்தோம் 
அதில் பாசாங்கு செய்தோமில்லை 

யாம் 
வண்ணமிட்ட துணிகள் 
வானவில்லைப் பழித்தன என்பது வரலாறு 
யாம் 
சாயமிட்ட துணிகள் 
சந்தையை வென்றன என்பது சரித்திரம் 

ஒன்றும் தெளிவாக இல்லை 

நதிகளை நாங்களா கெடுத்தோம் ?
நதிகளை 
நீரின்மை  கெடுத்தது !
நதிகள் 
இங்கே வெறும் பழைய நீர்த்தடங்களே. 

நீர்மம் பள்ளத்தை நோக்கித்தானே பாயும் !
மேட்டை நோக்கித் திருப்ப 
எம்மால்  எப்படி முடியும் ?

துரதிர்ஷ்ட வசமாக 
பள்ளத்தில் ஒரு நதிப்படுகை இருந்துவிட்டது 
அந்த நதித்தடத்தில் தான்
எங்கள் பாட்டனின் புதைமேடும் இருக்கிறது 

எங்கள் முன் 
உலகமயமாக்கல் என்னும் சவாலை 
நிறுத்தியிருக்கிறீர்கள்
அந்த யுத்தத்தில் 
நாங்கள் 
நிராயுதபாணியாக நின்றுகொண்டிருக்கும்போது 
நீங்கள் 
எங்கள் கெண்டைக்கால் நரம்பை வெட்டுகிறீர்கள் !

ஒன்றை மறவாதீர் !

தமிழகத்தில் 
ஊருக்கு நுறு பேர் 
உண்ணுவது 
திருப்பூர் போடும் சோற்றைத்தான். 

பேருந்தை விட்டிறங்கியதும் 
உங்களை 
ஒரு வேலைக்கு அழைத்துக்கொள்ளும் ஊர் இது. 

அரசே !
நீ இதுகாறும் வகித்த 
மௌன வேடம் போதும்.
இந்தக் கழிவை 
உன் கமண்டலத்தில் பிடி.
கடலில் கலப்பாயோ 
அல்லது 
காற்றில் கலப்பாயோ 
என்ன செய்யவேண்டுமோ அது 
உனக்கே தெரியும்.

Saturday, January 22, 2011

எதிர் உறவு


எதிர் உறவு

  •  

கிழக்கிலிருந்து

மேற்காகச் செல்கிறது

கதிர்

 

அதன்

அடியொற்றி வாழும்

நிழல்

என்றும் சென்றுகொண்டிருக்கிறது

மேற்கிலிருந்து கிழக்காக 

Wednesday, January 19, 2011

தமிழில் படிக்க வேண்டிய புத்தகங்கள்



எழுத்தாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் புத்தகங்களின் பட்டியல் குறித்துக் கூறுவதற்கு என்னிடம் சில கருத்துகள் இருக்கின்றன.

அவர்கள் தம் பட்டியல் படைப்பிலக்கியம் சார்ந்திருப்பதாகக் கூறுவதுண்டு. அப்படியே ஆயினும் அதில் அபிதான சிந்தாமணி போன்ற நூல்களை எல்லாம் சேர்த்துச் சொல்வதை மடமை என்றுதான் சொல்ல வேண்டும்.   அபிதான சிந்தாமணியைப் படித்து முடிக்கிறேன் என்று எந்த வாசகனாவது அமர்ந்தால் அவன் அதை எத்தனை காலத்திற்குப் படித்துக்கொண்டிருப்பான் ? அதைப் படிக்க முன்னெடுக்கும்  முயற்சியில் மூலதனத்தை மூன்று முறை படித்து முடித்துவிடலாம். தமிழ்ப் பெயர்ச்சொல் அகரமுதலியான அபிதான சிந்தாமணியை இளநிலை வாசகனுக்குக் கொடுத்துப் படி என்றால் அவன் தலைதெறிக்க ஓடி ஒளிந்துகொள்ள மாட்டானா ? விக்கிபீடியாவில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் படிக்கவேண்டிய பட்டியலில் முதலாகக் குறிப்பிடுவதைப் போன்ற அபத்தம் இது.

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகத்தை மிக எளிதாக வகைப்படுத்தலாம். அந்த வகையை முன்வைத்துத் தமிழ் இலக்கிய உலகத்தையே ஒருவன் கரைத்துக் குடித்தும் விடலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான தமிழ்ப் படைப்புலகம் செய்யுள் உலகம். செய்யுள் நூல்களில் சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், கதைக் காவியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என வகைக்குக் கொஞ்சமும் கணிசமும் இருக்கின்றன. இந்த நூல்களில் உள்ள மிகச்சிறந்த பகுதிகள் எனக் கருதத்தக்க ஆக்கங்களும் பாக்களும் கொங்குதேர் வாழ்க்கைஎன்ற பெருந்தொகையாகத் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதியைக் கைவிளக்காகக் கொண்டு ஓர் இலக்கிய வாசகன் பன்னூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களை அணுக முடியும். அந்த மாதிரிப் பாக்களில் எவையெவை அவனுக்கு விருப்பமாகவும் சுவையாகவும் உள்ளனவோ அவற்றைத் தேடி அவன் நேரடியாக மூழ்கலாம்.



அடுத்துத் தமிழின் நவீன கால மரபுச் செய்யுள்களும் மரபைத் துறந்த புதுக்கவிதைகளும் உள்ளன. தமிழில் கடந்த நூறாண்டுகளாக எழுதப்பட்ட மிகச் சிறந்த புதுக்கவிதைகளின் தொகுப்பும் அதே போல கொங்குதேர் வாழ்க்கை இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்றிருக்கக் கிடைக்கிறது. அந்தத் தொகுதியின் வழியாகத் தமிழ்ப் புதுக்கவிஞர்களை மாதிரி தேர்ந்து அடையலாம். அவ்வாறு சென்றடையும் ஒரு கவிஞனின் கவிதைத் தொகுதியைப் படித்து முடிக்க அதிகபட்சம் அரைமணி நேரம் ஆகும். அவ்வளவுதான். அதற்கும் மேலான நெடுங்குரலெடுத்து இங்கே யாரும் நீட்டி முழக்கவில்லை. எந்தத் தமிழ் நவீன கவிஞனின் வாழ்நாள் முழுமையுமான படைப்புகளையும் அமர்ந்து படித்தால் இரண்டொரு தினங்களில் முடிக்கலாம்.

உரைநடை எழுத்துகளில் அடுத்து எஞ்சுபவை கதைகளும் கட்டுரைகளும்.

என்னதான் அகலமான அளவுகோல்களை வைத்து அளந்தாலும் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என ஓராயிரம் (1000) மட்டுமே இருக்கின்றன. அவற்றைத் தேடுவதற்கோ கண்டடையவோ யாருக்கும் யாதொரு சிரமமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லாச் சிறுகதைகளும் அந்தந்த ஆசிரியர்களின் பெயரில் முழுத்தொகுதியாக வந்திருக்கின்றன. வந்துகொண்டுமிருக்கின்றன. சிறந்த சிறுகதைகளின் தேர்ந்த தொகுப்புகளும் வந்திருக்கின்றன. விட்டல்ராவ் (இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்), மாலன் (அன்று), தீபம் சிறுகதைகள், கணையாழி கதைகள் என அவை கிடைக்கின்றன. அவற்றின் வழிச் சென்றாலே போதும். தமிழ்ச் சிறுகதை உலகைக் கடைந்து எண்ணெய் எடுத்துவிடலாம்.

அப்புறம் தமிழ் நாவல்களின் உலகம். Thousand things to do before you die என்று கூட எப்படியாவது பட்டியலிட்டுவிடலாம். ஆனால், நாம் படித்தேயாகவேண்டிய நாவல்களைப் பட்டியலிட்டால் வெறும் நூறு என்ற எண்ணிக்கைக்குள்ளாகவே முடியும். அவற்றில் பத்திருபதை ஏற்கனவே படித்திருப்போம். மீதம் உள்ளனவற்றையும் மெதுவாகப் படித்துவிடலாம். இதோடு விஷயம் முடிந்தது.



தமிழில் பாரதிக்கு அடுத்து மிகச் சிறந்த மரபுக்கவிஞர் யார் என்றால் அவர் முடியரசன் தான். முடியரசன் கவிதைகள் முழுத்தொகுதி எங்கு கிடைக்கிறது ? எங்கும் கிடைக்காது என நினைக்கிறேன். கண்ணதாசனைவிடவும் பாரதிதாசனைவிடவும் முடியரசன் கவிதைகள் மேன்மையானவை. தமிழில் இயற்றப்பட்ட மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளில் சிகரம் போன்றது என்றால் அது மனோன்மணீயம் என்னும் நாடகக் காப்பியமே ! இதை இதுவரை யாராவது சொன்னார்களா என்று என் நினைவுக்கெட்டியவரை துழாவிப் பார்த்தேன். நாம் வணங்கிப் பாடும் தமிழ்த் தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த என்னும் பாடல் அந்நூலில்தானே இடம்பெற்றிருக்கிறது ! திரு. வி. க. வுக்கு நிகரான  தமிழ்க் கட்டுரையாளர் ஒருவர் நம் காலத்தில் இருக்கிறார் என்றால் அவர் கரு. ஆறுமுகத்தமிழன். அவரை ஏன் ஒருவரும் இனங்காட்டவில்லை ?

கட்டுரைகள், சுயசரிதைகள், மொழிபெயர்ப்புகள், அறிவியல்-வரலாறு-பொருளாதாரம்-அரசியல் என இனி மீதமுள்ள துறைகள்தாம் தமிழின் சாபக்கேடான இயல் துறைகள். ஆனால், இலக்கியத்தினின்று அகன்று ஒவ்வொரு அறிவுத் தேனீயும் பறந்து பறந்து நுகர வேண்டிய நூல்களெல்லாம் இவ்வகைப் பட்ட துறைகளுக்குள்ளே தாம் இருக்கவேண்டும். ஆனால், உண்மை நிலை இதற்கு நேர்மாறானது. இத்துறைகளில் வியக்கத்தக்க ஆளுமைகளால் இயற்றப்பட்ட தன்னிகரற்ற நூல்களுக்கு நம் மொழியில் பெரும் பஞ்சம் நிலவுவதைத்தான் நாம் காண்கிறோம்.

அட, ரொம்ப வேண்டா ! “ அருமையான தமிழில் சிறப்பாக விளக்கி எழுதப்பட்ட, எளிதில் பின்பற்றத்தக்க, நம்பகமான - நல்ல சமையல் கலை நூல் என்று ஒன்றைச் சொல்ல முடியுமா ? 

Thursday, December 23, 2010

நாஞ்சில் நாடன்


நாஞ்சில் நாடனுக்கு சூடிய பூ சூடற்க என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. தகுதியும் அரசாங்க விருதும் அபூர்வமாகச் சந்தித்துக் கொண்டுவிட்டதில் எனக்குக் கட்டறு மகிழ்ச்சி ஏற்பட்டது.  செய்தியைக் கண்டவுடன் அவருடைய அலைபேசிக்கு அடித்தேன். எடுத்தார்.

சார். வாழ்த்துகள் !

நன்றி. எப்படி இருக்கீங்க ?

நலம். இணையத்தில் செய்தியைப் பார்த்தேன்.

இணையத்துல போட்டுட்டாங்களா ?

ஆமாம் சார்.

என்ன இப்பெல்லாம் கோயமுத்தூர் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேங்கறீங்க ?

எக்கச் சக்கமான வேலை சார். இல்லாட்டி வராமயா...

ஓ...

எங்களுக்கே கிடைச்ச மாதிரி ஒரு சந்தோஷமுங்கொ...

பின்னே உங்களுக்குத் தானே கிடைச்சிருக்கு !

நாஞ்சில் நாடனை வாக்குப் பொறுக்கிகள் சிறுகதைத் தொகுப்பு மூலமாகத்தான் அறிந்தேன். அவருடைய மிதவை, சதுரங்கக் குதிரை முதலான புதினங்கள் அதைப் படித்த காலத்திலேயே என்னைப் பெரிதும் ஈர்த்தவை. புனைவுகளை விடவும் அவர்தம் கட்டுரைகளில் புழங்கும் அருமையான தமிழ் வாசகனை மயக்கிவிடக் கூடிய வல்லமையுடையது. அவரோடு மிக நெருக்கமாக உணரவைப்பது. அவற்றுள் ஆங்காங்கே அவர் தூவிச் செல்லும் பழந்தமிழ்த் தொடர்கள் எதிர்பாராத விருந்து. பிழைப்பதற்காகப் பிறவூர் சென்ற மனது பிழிபட்டு வதைபடும் தருணங்களை  அவருடைய கதைகள் உரக்கப் பேசின. அவரோடு உரையாடலில் ஈடுபட்டு அவருடைய மின்னல் தெறிப்பான வசனங்களைக் காதுகுளிரக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்க்கை பூரா ஒரு வாத்தியார் பாடமெடுத்துச் சம்பாதிக்கிற தொகையைப் போல பத்து மடங்கு தொகைய ஒரு படத்தில நடிக்கிறவன் அள்ளிக்கிட்டுப் போறானே... அப்படி என்னத்தை இவன் இந்தச் சமூகத்துக்கு நல்லது பண்றான் ? என்பார். நாஞ்சில் நாடன் உடன்வரும்படி ஒரு பயணம் அமைந்தால் அதைப்போல் இனிய அனுபவம் இன்னொன்று இருக்க முடியாது என்பது என் இலக்கிய நண்பர்களின் கருத்து.  

எல்லா நவீன இலக்கியப் படைப்பாளிகள் சார்பாகவும் இவ்விருதைப் பெற்றுக்கொள்வதாக அவர் கூறியிருக்கிறார். பின்னே உங்களுக்குத்தானே கிடைச்சிருக்கு என்று அவர் சொன்னதற்கு அதுதான் அர்த்தம்.

என்னுடைய காமக் கடும்புனல் தொகுப்பிற்கு அவர்தாம் முன்னுரை எழுதியிருந்தார். அதற்காகவும் என் நன்றிகள் !

Thursday, October 28, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே

  • ஒபாமா இந்தியா வரப்போகிறார். அவரை நேரில் சந்திக்க வாய்த்தால் என்ன கேட்பீர்கள் ?

டாலர் மதிப்பு சரியாமலிருக்க எதையாவது செய்யுங்களேன். 


  • அம்மாவிற்குக் கூடிய கூட்டங்கள் அப்படியே வாக்குகளாக மாறுமா ?

வாக்குகளாக மாறியவுடன் அம்மாவின் போக்குகளும் மாறி விடாதா ?

 

  • கோவில் பூசாரிகள் வேலை நிறுத்தம் செய்யலாமா ?

ஐயகோ... வேலை நிறுத்தத்தால் கடவுள் மேனி வியர்த்து வடியுமே !


  • பருத்தி நூல் விலை நூற்றுநாற்பது வருடத்தில் இல்லாத விலையுச்சத்தில் இருக்கிறதாமே ?

ஆனால், அதே பருத்தி விவசாயி 140 வருடங்களாக அதே வறுமையிலேயே இருக்கிறானே !

  • ஒரே எண்ணை எந்த நிறுவனத்திற்கும் மாற்றிக்கொள்ளும் கைப்பேசி வசதியைப் பயன்படுத்துவீர்களா ?

எண்களில் எல்லாம் இருக்கிறது என்ற மூடநம்பிக்கைக்கு இது கட்டியம் கூறுவதைப் போலிருக்கிறது.

 

  • நீங்கள் எப்படி எந்திரன் திரைப்படத்தைப் பார்க்கலாம் ?

ஏனுங்க... அவனவன் ஆகாத பொண்டாட்டி கூட ஐம்பது வருசம் குடித்தனம் நடத்தலயா ?

  • வ குவார்ட்டர் கட்டிங் என்றால் என்ன ?

நான் வைக்கிறதுதான் தலைப்பு என்று அர்த்தம்

  • பங்குச் சந்தையின் உச்சம் எதைக் காட்டுகிறது ?

மலைமுகட்டின் உச்சத்தில் மறுபுறம் உள்ளது அதலபாதாளமே.

  • இந்தோனேசியாவில் அடிக்கடி இயற்கைப் பேரழிவுகள் நிகழ்வது ஏன் ?

தீபகற்ப  மற்றும் தீவு நாடுகள் இயற்கையோடு உரசி உரசி இல்லாமலாகிவிடும் அபாயத்தில் உள்ளன.

  • கவாஸ்கர் கொச்சி அணி உரிமையாளர் குழுவில் இடம்பெறுகிறாராமே ?

அண்ணாத்தை மைதானத்திற்கு வெளியே ஆட நிறைய விளையாட்டுகளைத்  தெரிந்துவைத்திருக்கிறார்.

  • விஜயகாந்த் திருப்பூரைத்  தான் வளர்ந்த ஊர் என்றாராமே ?

இதற்காகச் சென்னைத் தமிழன் கோபித்துக்கொள்ளவா போகிறான் ?

  

  • புதிய புதிய தங்க நகைக் கடைகள் நிறைய முளைக்கின்றனவே, மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறதா ?

ஆசை ஆசை அதிகரித்திருக்கிறது.

Sunday, October 17, 2010

உங்களிடம் டியூசன் படிக்காத உங்கள் மாணவன்


நான்

உங்களிடம் பள்ளியில் படிக்கிறேன்

ஆனால் நான்

என் சகாக்கள் பலரையும்போல்

உங்களிடம் டியூசன் படிக்கவில்லை


ஐயா

என்னிடம் மாற்றுச் சீருடை இல்லை

இருக்கும் இந்த ஒரே கால்சட்டையும்

விதைப்பை அடியில் கிழிபட்டிருக்கிறது

அதனால்தான் எப்பொழுதும்

கால்கட்டப்பட்டவன் போலவே அமர்கிறேன்


காதறுந்த துணிப்பையில்

என் புத்தகங்களைத் திணித்திருக்கிறேன்

முத்து முத்தான கையெழுத்தால்

நிறைந்து வழியும் என் ஏடுகள்

உங்களைப் பார்த்துப் பரிகாசித்ததை

நான் அறியவில்லை ஐயா !


என் உணவுப் போசியில்

கொஞ்சம் பழைய சோறு இருக்கிறது

எப்பொழுதும் நான்

நான்கு பேர் மத்தியில் உண்ணாமல்

தனித்து மூலையில் அமர்ந்து

வாரி வாரிச் சாப்பிடுவதை

நீங்கள் பார்த்திருக்கலாம்


ஒரேயொரு பழைய பேனா வைத்திருக்கிறேன்

கொஞ்சம் மை கசியும் என்றாலும்

மாவுபோல் எழுதும்

அது காணாமல் போன அன்று

நான் கதறிக் கதறி அழுதேன்

புல்மேயும் ஆடுபோல்

குனிந்த தலை நிமிராமல் தேடி

மைதானத்தில் கண்டெடுத்தபோதுதான்

எனக்கு உயிரே வந்தது.


காலில் செருப்பில்லை.

என்னிடமிருப்பவை

சகிக்கமுடியாத ஏழை அறிவாளியின்

தீட்சண்யம் மிகுந்த கண்கள் மட்டுமே

மறதியறியாத

கத்திக் கூர்மையை ஒத்த

சாம்பல் மூளை மட்டுமே


ஐயா

உங்கள் புறக்கணிப்பின் நெருப்புக்கு மத்தியில்

ஒரு பாவியைப்போல் வளைய வருகிறேன்


காரணமேயில்லாமல்

என்னைக் கடியாதீர்

ஒரு மாணவனை எப்படி நொறுக்குவது என்று

நீங்கள் அறிந்திருப்பதுபோல்

ஓர் ஆசானிடம் எப்படி அணுக்கமாவது என

நான் அறியவில்லை ஐயா !


பாடம் எடுக்கும்போது

என் கண்களையும் ஒருமுறை பாருங்கள் ஐயா !