Friday, October 1, 2010

காந்தி அண்ணல் - பகுதி 5

சௌரிசாரா எனுமிடத்தில் வன்மம் கொண்டு

சர்க்காரின் காவலரை அகிம்சை வீரர்

போர்முறையைக் கணம்மறந்து தீயில் இட்டுப்

பொசுக்கிவிட்டார்; இச்செய்தி கேள்வி யுற்றுக்

கோரநிலை பொறுக்காத காந்தி அண்ணல்

கொண்டநிலை கைவிட்டார்; மனம்நொந் திட்டார்;

சாரமிது சத்தியத்தில் வழியில் இல்லை !

தமைவருத்தி உபவாசம் மேற்கொண் டிட்டார் !

பக்குவத்தை மக்களுக்கு ஊட்ட வேண்டிப்

பருத்தியிழை நூல்நூற்றுக் கதராய் ஆக்கிச்

சிக்கனத்து வாழ்வைத்தான் வாழக் கேட்டார் !

சிறந்தலங்கா சையரிலே ஆலை எல்லாம்

மக்களிடம் துணிவிற்றுக் கொள்ளை செய்யும்

மாற்றுமிதைக் கதரியக்கம் என்று சொன்னார்;

எக்கணமும் கள்ளுண்ணா நோன்பை யாரும்

எந்நாளும் கைக்கொள்ள வேண்டும் என்றார் !

அழித்துவிடு தீண்டாமை என்னும் பேயை;

அகம்பாதி பெண்ணுரிமை நாளும் பேணு;

குழந்தைக்கு மறவாமல் கல்வி நல்கு;

கூட்டுறவால் ஊர்ப்பெருமை உயர்த்திக் காட்டு;

விழிப்புணர்வைப் புகட்டிவிடும் ஆசை பற்றி

விருப்போடு பத்திரிகை நடத்த லானார் !

எழுபத்து இலட்சத்து கிராமங் கள்தாம்

இந்தியாவின் முதுகெலும்பாய் இருப்ப தென்றார் !

உப்புக்கு வரிபோட்டு ஆங்கி லேயர்

ஊறுக்கு வழிபோட்டார்; காந்தி அண்ணல்

தப்புக்கு எதிர்ப்பாக எழுபத் தெட்டுத்

தமையொற்றும் அடியார்கள் சேர்ந்து கொள்ள

ஒப்பற்ற நடைபோட்டுத் தண்டி சேர்ந்து

ஓங்குகடற் கரையோரம் உப்பை அள்ள

எப்பக்கம் பார்த்தாலும் மக்கள் வெள்ளம்

எங்கணுமே விதிமீறும் புரட்சிக் காட்சி !

சட்டமறுப் பியக்கமென்று வரலாற் றுக்குள்

தனிப்புகழைப் பெற்றதிந்த நிகழ்ச்சி; ஏழை

திட்டமுடன் உணவுண்ண வில்லை; நாளும்

தீப்பசிக்கு உப்புண்டான்; நீரை யுண்டான்;

கொட்டமடித் தாடுகின்ற வர்க்கத் துக்குக்

கூழுக்கும் வழியற்ற ஏழை தன்னைத்

தொட்டணைத்துத் துயர்நீக்கும் மனமும் இல்லை;

துன்மார்க்க வழிசென்றார் ஆங்கி லேயர் !

நாடெங்கும் விடுதலைத்தீக் கொழுந்து தோன்ற

நாம்செய்ய ஒன்றுமில்லை என்றே ஆக

ஓடோடி வந்துகாந்தி கரத்தைப் பற்றி

ஒருநாளில் வைஸ்ராயைப் பார்க்க வேண்ட

நாடோடிக் கொண்டிருந்த அண்ணல் இந்த

நல்வாய்ப்பை ஏற்றவராய் இர்வின் தன்னை

ஊடாட்டம் இல்லாமல் சந்திக் கின்றார்

ஒருபேச்சு நடந்துகிறார் தேசம் காக்க !

எப்போது எம்மன்னர் வைத்த ஆளை

ஈரிழையால் நெய்தசிறு துணியைப் போர்த்தும்

அப்பாவித் தோற்றமுள்ள பக்கிரி போல்வர்

அழைக்கவைத்து மாளிகைக்குள் அடிவைத் தாரோ

அப்போதே எம்பெருமை மண்வீழ்ந் தாச்சு !

ஆண்டாண்டாய்க் காத்தபுகழ் காற்றில் போச்சு !’’

பிற்பாடு இதுபற்றி வின்ஸ்டன் சர்ச்சில்

பிரஸ்தாபம் செய்திட்ட கூற்று மேலே !

வட்டமேசை மாநாடு ஒன்றைக் கூட்டி

வருகின்ற பிரதிநிதி பலரைச் சேர்த்துத்

திட்டங்கள் பலபோட்டு நாட்டின் துன்பம்

தீர்ப்பதற்கு முயல்வதென முடிவா யிற்று;

முட்டுபல நேர்ந்துகெட்ட பேச்சு வார்த்தை

முகச்சுளிப்பு செய்திட்டார் காந்தி; பின்னால்

வெட்டுகிற தீர்மானம் எதிர்த்து விட்டு

வெறுங்கைகள் இரண்டோடு நாடு வந்தார் !

உலகப்போர் மூண்டுபுவி எங்கும் பற்ற

ஒன்றுக்கும் உறுதியற்ற நிலைமை சூழக்

கலகத்தில் தேசியத்தை மீட்புச் செய்யக்

கண்டுவிடும் விடுதலைக்கு வழியும் தோன்றப்

பலவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தா ராய்ந்து

‘பார்!இதுவே இறுதிப்போர்!என்று கூவித்

தெளிவாக அறிவித்தார்; ‘‘செய்வாய்! அன்றி

செத்துமடி!’’ என்கின்ற முழக்க கீதம் !

‘வெள்ளையனே வெளியேறு நாட்டை விட்டு

விண்ணதிர முழங்கியது மக்கள் கோஷம் !

உள்ளத்தால் ஒன்றிவிட்ட நாடு இஃது !

ஒன்றுமினி செய்வதற்கு இல்லை! மெல்ல

தெள்ளமுத விடுதலையைப் பருகத் தந்துத்

தீர்வாக வெளியேறும் எண்ணம் கொண்டு

வெள்ளையரும் விடுதலைக்கு வழியை விட்டார் !

விதையொன்று மரமாகிக் கனிந்த தின்று !


------------தொடரும்----------

1 comment:

  1. கவிதை அருமை. புகை படங்களும் மனதை மயக்குகிறது

    ReplyDelete