Wednesday, August 4, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே

கருணாநிதி தாமாகவே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலையும் எழுதி பத்திரிகைகளுக்கு வழங்குவாராம். யாரும் நம்மைப் பார்த்து கேட்காத கேள்விகளை நாமே உருவாக்குவதற்கும் முக்கியமான சமூக நிகழ்வுகளின் மீதான நம் அபிப்பிராயத்தைப் பதிவு செய்வதற்கும் இது தோதான வழிதான். என் வலைப்பக்கத்தில் அப்படியொரு பகுதியை இனி அடிக்கடி இடலாம் என்றிருக்கிறேன். ஏ.பி. நாகராஜன் படத்துக் கடவுள் பேசும் வசனமான ‘கேள்வியும் நானே பதிலும் நானேஎன்று இந்தப் பகுதியை இனி அழைக்கலாம். இது இந்த வலைப்பக்கத்தின் பத்திரிகைத் தன்மையையும் வாசிப்பு அனுபவத்தையும் கொஞ்சம் கூட்டக் கூடும். இவ்வகைமைக்கு முன்மாதிரிகள் நம் பழைய பத்திரிகைகளே. சரியாக ஒரு டஜன் கேள்விகளும் அதற்கான பதில்களும் ஒவ்வொருமுறையும் இடம்பெறும்.


· ஹாலிவுட்டுக்கே சவால் விடுகிற மாதிரி எந்திரன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்களாமே ?

அவர்கள் எந்திரனுக்கே சவால் விடுகிற மாதிரி டெர்மினேட்டர் என்ற படத்தைப் பதினைந்து வருடங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டார்களே !

· சீமான் சிறையில் இருப்பதைப் பற்றி...

சிறைவாசம் அநேகரை வரலாற்று நாயகராக்கி இருக்கிறது.

· ஜெயலலிதா தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வாய்தா மேல் வாய்தாவாக வாங்கி இழுக்கடிக்கிறார்என்று ஆளுங்கட்சியான தி.மு.க.வினரே போராட்டம் நடத்துகின்றனரே..?

நீதிமன்றத்திலுள்ள ஒரு விவகாரம் குறித்து - சட்டம் இயற்ற வேண்டிய இடத்திலிருப்பவர்களே போராடுகிறார்கள் போங்கள்.


· அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள் ?

ஷட்டர் ஐலண்ட் ! லியோனார்டோ டிகாப்ரியோ எல்லாரையும் அள்ளிச் சாப்பிட்டுவிட்டார்.

· பங்குச் சந்தை மேலேயும் செல்லாமல் கீழேயும் செல்லாமல் நொண்டியடிக்கிறதே ?

நாம் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

· உங்களிடம் கேட்காமல் இருப்பதா...? ஒரு கவிதை சொல்லுங்களேன்.

சாகித்ய அகாதமி வெளியீடான இந்தியன் லிட்டரேச்சர் புத்தகத்தில் வாசித்த இரண்டு ஆங்கில ஹைக்கூ-களைச் சொல்கிறேன்.

  • அமைதியான தொழுவத்தில்

காலம்

பசுவின் அசையாகிறது !

  • கடலடைய ஏங்கும் நதி

தன் தித்திப்பை

தியாகம் செய்கிறது !

· சமீபத்தில் விளக்கம் சொல்லத்தெரியாமல் சமாளித்த அனுபவம்...?

என் மேசையிலிருந்து கள்ளி நாவலைப் பார்த்த நண்பர் அதன் ஆசிரியர் பெயரைப் பார்த்து வினவினார் ‘இது என்னங்க பேரு வாமு கோமு?

அது வந்துங்க... இந்த சிங்கி மங்கி... கிய்யான் முய்யான் மாதிரி வாமு கோமுஎன்றேன்.

· தமன்னா தமன்னா என்று இளவட்டங்கள் உருகுகின்றார்களே... ?

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆழிப் பேரலைகளையே பார்த்தவர்கள். சிற்றலைகள் அவர்களை என்ன செய்துவிடும் !

· மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கலாமா ?

ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டங்களில் நாம் யார் பக்கம் நிற்கவேண்டும் ?

· போன வாரம் நீயா நானா பார்த்தீர்களா ?

பார்த்தேன்... ஜெயமோகனும் மதுரை முத்துகிருஷ்ணனும் டாக்டர்களுக்கே ஊசி போட்டதை.

· மக்கள் மக்கள் என்கிறார்களே அவர்கள் எவர்கள் ?

அது ஒரு மாயையான சொல்தானோ என்று எனக்கும் ஐயம் உண்டு

· காலத்தின் கட்டாயம் என்று எதைச் சொல்வீர்கள் ?

நானும் பிளாக் எழுத வந்ததைத்தான்.

15 comments:

  1. ''தமன்னா" - சிற்றலைகள் ஊழியை உருவாக்குவதில்லை.

    ReplyDelete
  2. அருமையான கேள்வி பதில்கள். அதிலும் அந்த பதில் கேள்வி மிக அருமை.

    ReplyDelete
  3. /உங்களிடம் கேட்காமல் இருப்பதா//
    இரண்டாம் கவிதை அருமை.
    முதல் கவிதை புரியவில்லை.

    ReplyDelete
  4. இது போல் தொடர்ந்து எழுது வேண்டும்.

    ReplyDelete
  5. சிறைவாசம் அநேகரை வரலாற்று நாயகராக்கி இருக்கிறது.

    நிச்சயம் இது போல் சீமானை உருவாக்கக்கூடும்.

    ReplyDelete
  6. கலாநேசன், நன்றி !
    ஜோதிஜி, தொடர்ந்து எழுதுவேன்.
    கொல்லான், அந்தக்கவிதையின் ஆங்கில மூலத்தைத் தருகிறேன். பிடிபடுகிறதா என்று பாருங்கள்...
    In the silent cowshed
    time is
    cow's chewing bud.

    ReplyDelete
  7. //தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆழிப் பேரலைகளையே பார்த்தவர்கள். சிற்றலைகள் அவர்களை என்ன செய்துவிடும்//

    அண்ணா...ஆழிப்பேரலைன்னு 'சுனாமி'யத்தானே சொன்னீங்க..

    ReplyDelete
  8. அனைத்தும் கவர்ந்தது கவிஞரே குறிப்பாக //அது ஒரு மாயையான சொல்தானோ என்று எனக்கும் ஐயம் உண்டு// இந்த பதில்.
    எனக்கும் உண்டு

    ReplyDelete
  9. //மக்கள் மக்கள் என்கிறார்களே அவர்கள் எவர்கள் ?

    அது ஒரு மாயையான சொல்தானோ என்று எனக்கும் ஐயம் உண்டு//

    :)

    ReplyDelete
  10. சிறப்பாக இருக்கிறது. கலாநேசன் சுட்டிய அதே விடைவினா எனக்கும் பிடித்திருக்கிறது. ஈரமனம் உள்ளவர்களுக்கே இப்படியொரு விடையிறுக்க முடியும்.

    ஹைக்கூ இரண்டின் மொழிமாற்றமும் நன்று. வாசிக்க இத் தளம் வரும் நண்பர்களுக்காக எனக்குத் தெரிந்த ஒன்றை இங்கே பதியலாம் என்று விரும்புகிறேன்:

    மூன்று வரிகளில் ஒரு கவிதையை எழுதிவிட்டால் அது ஹைக்கூ ஆகிவிடாது. புத்தர் கண்டு போதித்த உண்மைக்கு இணங்க அது இலக்கணப்படவும் வேண்டும். "எதிர் எதிர் உண்மைகளின் அருகாமையால் ஆகும் விளைவுகளால் இயல்வது இவ் உலகம்." இது புத்தர் சொன்னது. இதன் படி, 'ஹைக்கூ'வின் முதல் அடிக்கு இரண்டாம் அடி (கருத்திலோ, காட்சியிலோ, இயக்கத்திலோ) முரண்பட்டாகவேண்டும். மூன்றாம் அடி, இம் முரண்பாட்டின் விளைவாகி வரவேண்டும்.

    1. தொழுவம் - உறைவிடம்; காலம் - உறைவிற்கு அப்பாற்பட்டது; அசைபோடுதல் - கவிதைக்கண் கிட்டும் விளைவு.

    2. கடல் - உப்பு, நிலை; நதி - தித்திப்பு, ஓட்டம்; தியாகம் - கவிதைக்கண் கிட்டும் விளைவு.

    ReplyDelete
  11. திருநாவுக்கரசு பழனிசாமி ! அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.

    கண்ணன், பேரரசன், ராஜசூரியன், சேலம் தேவா ! பாராட்டுகளுக்கு நன்றி.

    ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! ஹைக்கூ-வைப் பற்றிய வல்லிய வரைவைத் தந்திருக்கிறீர்கள். பின்னூட்டப் பத்தி என்பதற்காகத் தாங்கள் அளவு கருதி அமையாமல் இன்னும் நிறையவே சொல்லுங்கள். இங்கே நான் உள்பட நண்பர்கள் யாவரும் உங்கள் சொற்களுக்காக ஏங்கி நிற்கிறோம். இந்தப் பத்திக்கு வரும் அநேகருக்கும் உங்கள் தகைமை குறித்து அளப்பரிய மதிப்பு இருப்பதை நான் நேர்ப்பேச்சில் கண்டேன். அதனால் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. டாக்டர்களுக்கே ஊசி போட்டதை// - அழகு.
    முதல் கவிதையின் மூலமும் மொழியாக்கமும் அருமை. "அசையாகிறது" என மொழி பெயர்த்தது அழகான படிமமாகிறது

    ReplyDelete