Friday, July 30, 2010

ஒரு காதல் தோன்றியிருக்கிறது

ஒரு காதல் தோன்றியிருக்கிறது

அது தன்னைச் சொல்லும் வலிமையற்றிருக்கிறது

அது தன்னை

யாருக்கேனும் உணர்த்திவிட விரும்பியது

அதற்காக

ஒரு பாடலாக உருமாறி

காற்றின் நாளங்களில் பரவியலைந்தது

ஒருவரும் செவிமடுக்கவில்லை

அது தன்னை

யாருக்கேனும் தின்னத் தரவும் தயாராக இருந்தது

அந்தக் காதல்

தன்னை ஒரு கரும்புத் தண்டாக மாற்றிக்கொண்டு நின்றது

ஒருவரும் அதைக் கடித்துறிஞ்சவில்லை

அது தன்னை

யாருக்கேனும் முழுதாகக் காண்பிக்க முன்வந்தது

அதற்காகவே

தன் ஆடைகளைக் களைந்து நடந்தது

அதன் பித்துநிலை கண்டு

அனைவரும் அஞ்சியோடினர்

அது தன்னை

யாருக்கேனும் விற்று ஒழியப் பார்த்தது

ஒரு விலைமகளாக

கடைத்தெரு மூலையில் காத்திருந்தது

ஒரு ரோகிகூட விலை வினவவில்லை

ஒரு காதல் தோன்றியிருக்கிறது

அது தன்னைச் சொல்லும் வலிமையற்றிருக்கிறது

13 comments:

  1. காதலின் பயணம் அருமை. இன்னமும் தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  2. பெரும்பாலான காதல்கள் தன்னைச் சொல்லும் வலிமையற்றதாகவே இருக்கின்றது.

    ReplyDelete
  3. நன்றி வேல்கண்ணன் !

    கொல்லான் ! உங்கள் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரம், போன பதிவின் பாதிப்பினால், உங்கள் வாக்கியத்தை உங்கள் அனுமதியோடு பிழை நீக்கி அமைக்கும் ஆவல் பற்றிக்கொண்டுவிட்டது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பார் இலானுங் கெடும் - என்பதால்.

    பெரும்பாலான காதல்கள் தம்மைச் சொல்லும் வலிமையற்றனவாகவே இருக்கின்றன.

    ReplyDelete
  4. / யாருக்கேனும் உணர்த்திவிட விரும்பியது /

    அனைவரும் இப்படி தான் இல்ல அண்ணே?

    கவிதை அழகு........

    ReplyDelete
  5. வினோ...
    யாரிடமும் சொல்லமுடியாமல்
    சொல்ல வேண்டியவர்களிடம்கூட சொல்ல முடியாமல் துக்கத்தில் சுருளும்
    மௌனத்தில் புரளும
    காதல்கள்தாம் எத்தனை எத்தனை !

    ReplyDelete
  6. சொல்ல வேண்டியவர்களிடம்கூட சொல்ல முடியாமல் இருப்பது தான் வேதனை...

    ReplyDelete
  7. மகுடேசுவரன்,

    ஆமாம். இங்கே ஆயிரமாயிரம் காதல் “இது காதல் தானா ?” என் உணரும் முன்னே கலைந்து விட்டிருக்கிறது.

    நூற்றாண்டுகள் கடந்தும் காதலும், காதல் கவிதைகளும் பிறந்துக் கொண்டேயிருக்கும்.

    உங்களின் “காமக் கடும்புனல்” நூல் வாங்கிப் படித்தேன். படி தேன்.

    ReplyDelete
  8. சரியாக சொன்னீர்கள் சத்ரியன். 'படி தேன்'. மேலும் படிக்க படிக்க ஒவ்வொரு கவிதையும் அள்ளித்தரும் பல படி தேன்(ஆங்காங்கே பல தேனீக்களும் உண்டு. அதனிடம் கொட்டுபட்ட அனுபவமும் எனக்குண்டு)

    ReplyDelete
  9. சத்ரியன், வேல்கண்ணன் ! நன்றி.

    ReplyDelete
  10. கவிதையின் மொழி எளிமைக்காகப் பாராட்டுகிறேன். பாடுபொருள் உணர்த்தும் தவிப்புக்காகவும்.

    'விலைமகள்' என்னும் சொல்லிடுகையால் என்னில் மிக வருத்தம் தோன்றுகிறது! 'விலை-மகள்/மகன் ஆக' என்று இட்டிருக்கலாம் அல்லது இருபாலையும் குறிக்கும் ஒரு வார்த்தையைக் கண்டுநிரப்பி இருக்கலாம். ஆண்பிறப்புப் பிறந்த எங்களுக்கு, அந்தோ, விற்று ஒழியக் காத்திருத்தலான இழிநிலை இல்லையா என்ன?

    ReplyDelete
  11. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி., நீங்கள் சொல்வது சரிதான்.

    ReplyDelete